மும்பை: இந்தியாவின் முன்னனி தனியார் வங்கிகளில் ஒன்றான Yes Bank-ன் காலாண்டு முடிவுகள் சில தினங்களுக்கு முன் வெளியானது. Yes Bank-ன் இந்த காலாண்டு முடிவுகள், மொத்த இந்திய நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கும் ஒரு அதிர்ச்சி வைத்தியத்தைக் கொடுத்திருக்கிறது.
2004-ல் தொடங்கப்பட்ட Yes Bank 2005-ம் ஆண்டில் இருந்து ஒரு காலாண்டில் கூட நஷ்டக் கணக்கு காட்டியது இல்லை. ஆனால் இந்த முறை மார்ச் 2019-ல் 1,506 கோடி ரூபாயை நிகர நஷ்டமாக கணக்கு காட்டி இருக்கிறது.
இதற்கு என்ன காரனம் என விசாரித்தால் வாராக் கடன்கள் தானாம். இந்த மார்ச் 2019-ல் மட்டும் சுமார் 3,660 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள் வாராக் கடன்களாக தேங்கி நிற்கிறதாம். கடந்த மார்ச் 2018-ல் இந்த வாராக் கடன்களின் அளவு வெறும் 399 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வாராக் கடன்கள்
அவ்வளவு ஏன் கடந்த டிசம்பர் 2018 காலாண்டில் கூட Yes Bank நிறுவனத்தின் வாராக் கடன்கள் வெறும் 550 கோடி ரூபாயாகத் தான் இருந்தது. ஆனால் அடுத்த 3 மாதங்களில் 550 கோடி ரூபாயில் இருந்து 3660 கோடியாக வாரா கடன்கள் அதிகரித்திருப்பது தான் Yes Bank-ன் நஷ்டத்துக்கு முக்கிய காரணமாம். இரண்டு பெரிய நிறுவனங்களுக்கு கொடுத்த 1000 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள், IL&FS நிறுவனத்துக்கு கொடுத்த கடன்கள், சில ட்சிறப்பு முதலீட்டு நிறுவனங்களுக்கு கொடுத்த கடன்கள் என சில பெரிய கடன்கள் வாராக் கடன்களாக மாறியதால் தான் இந்த நிலையை எனவும் சொல்கிறார்கள்.
கட்டணங்கள்
ஒவ்வொரு வங்கிக்கும் கடன் கொடுத்த பணத்துக்கு கிடைக்கும் வருவாய், முதலீடு செய்திருக்கும் பணத்தில் இருந்து கிடைக்கும் வருவாய், ஆர்பிஐ வங்கியிடம் இருக்கும் வட்டி பாக்கித் தொகை, வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும் கட்டணங்கள் என பல வழிகளில் இருந்து வருவாய்கள் வரும். இதில் வங்கி கொடுத்த கடனுக்கு வரும் வருவாயும், முதலீடுகளுக்கு கிடைக்கும் வருமானமும் தான் மெயின். மற்ற சோர்ஸ்கள் மூலம் வருவது எல்லாமே உபரி வருமானம் தான். அப்படி கடந்த ஜனவரி 2019 - மார்ச் 2019 வரையான 3 மாதத்தில் வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணங்களை வசூலிக்கவில்லை Yes Bank. அதனால் மட்டும் 890 கோடி கூடுதல் நஷ்டம் கண்டிருக்கிறார்கள்.
வருவாய் விவரங்கள்
கடந்த மார்ச் 2018-ல் 1,420 கோடி ரூபாயை வாடிக்கையாளர்களிடம் எஸ்.எம்.எஸ் கட்டணம், அபராதம், மினிமம் பேலன்ஸ் மீறி பணம் எடுத்தது, டெபிட் கார்ட் கட்டணங்கள் என வசூலித்திருக்கிறார்கள். ஆனால் மார்ச் 2019-ல் இதே பெயரில் வெறும் 531 கோடி ரூபாயை மட்டுமே வசூலித்திருக்கிறார்கள். ஒருவேளை மார்ச் 2018 போல 1420 கோடி வசூலித்திருந்தால் தற்போது Yes Bank-ன் நஷ்டம் வெறும் 616 கோடி ரூபாயாக குறைந்திருக்கும்.
மற்ற விவரங்கள்
மார்ச் 2019 காலாண்டில் Yes Bank-ன் நிகர வட்டி வருமானம் 16.33% அதிகரித்திருக்கிறது. மார்ச் 2018-ல் 2,154 கோடி ரூபாயாக இருந்த நிகர வட்டி வருமானம், கடந்த மார்ச் 2019-ல் 2,505 கோடியாக அதிகரித்திருக்கிறது. ஆனால் நிகர வட்டி வரம்பு 0.30 சதவிகிதம் குறைந்திருக்கிறதாம். மார்ச் 2018-ல் 100 ரூபா கடன் கொடுத்திருக்கிறார்கள் என்றால் 1.28 ரூபாய் மட்டுமே வாராக் கடன்களாக இருந்தன. ஆனால் இன்று கடன் கொடுத்த 100 ரூபாயில் 3.22 ரூபாய் வாராக் கடன்களாக தேங்கி நிற்கின்றன.