மும்பை: இந்தியாவின் முன்னனி தனியார் வங்கிகளில் ஒன்றான Yes Bank-ன் காலாண்டு முடிவுகள் சில தினங்களுக்கு முன் வெளியானது. Yes Bank-ன் இந்த காலாண்டு முடிவுகள், மொத்த இந்திய நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கும் ஒரு அதிர்ச்சி வைத்தியத்தைக் கொடுத்திருக்கிறது.
2004-ல் தொடங்கப்பட்ட Yes Bank 2005-ம் ஆண்டில் இருந்து ஒரு காலாண்டில் கூட நஷ்டக் கணக்கு காட்டியது இல்லை. ஆனால் இந்த முறை மார்ச் 2019-ல் 1,506 கோடி ரூபாயை நிகர நஷ்டமாக கணக்கு காட்டியது.
இதற்கு என்ன காரணம் என விசாரித்தால் வாராக் கடன்கள் தானாம். இந்த மார்ச் 2019-ல் மட்டும் சுமார் 3,660 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள் வாராக் கடன்களாக தேங்கி நிற்கிறதாம். கடந்த மார்ச் 2018-ல் இந்த வாராக் கடன்களின் அளவு வெறும் 399 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற தரவுகள்
மார்ச் 2019 காலாண்டில் Yes Bank-ன் நிகர வட்டி வருமானம் 16.33% அதிகரித்திருக்கிறது. மார்ச் 2018-ல் 2,154 கோடி ரூபாயாக இருந்த நிகர வட்டி வருமானம், கடந்த மார்ச் 2019-ல் 2,505 கோடியாக அதிகரித்திருக்கிறது. ஆனால் நிகர வட்டி வரம்பு 0.30 சதவிகிதம் குறைந்திருக்கிறதாம். மார்ச் 2018-ல் 100 ரூபாய் கடன் கொடுத்திருக்கிறார்கள் என்றால் 1.28 ரூபாய் மட்டுமே வாராக் கடன்களாக இருந்தன. ஆனால் இன்று கடன் கொடுத்த 100 ரூபாயில் 3.22 ரூபாய் வாராக் கடன்களாக தேங்கி நிற்கின்றன.
சந்தை விடுமுறை
Yes Bank நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வெளியான போது, சந்தையின் வர்த்தக நேரம் முடிந்திருந்தது. எனவே வெள்ளிக்கிழமை ஏப்ரல் 26, 2019 அன்று பெரிதாகத் தெரியவில்லை. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல விடுமுறை. அதன் பின் திங்கட்கிழமை மகாராஷ்டிரத்தில் மக்களவைத் தேர்தல் நடந்ததால் சந்தை விடுமுறையாக இருந்தது. எனவே நான்கு நாட்கள் கழித்தும் Yes Bank-ன் காலாண்டு முடிவுகளை வைத்து இன்று சந்தையில் பங்கு மரண அடி வாங்கியது. இதுவே வெள்ளிக்கிழமை காலையில் இந்த செய்தி வந்திருந்தால் அன்று ஒரே நாளில் 50 சதவிகிதம் கூட Yes Bank பங்கு விலை இறக்கம் கண்டிருக்கும் என்கிறார்கள் அனலிஸ்டுகள்.
Macquarie double
Macquarie double என்கிற தரகு நிறுவனம் யெஸ் பேங்குக்கு அண்டர் பர்ஃபாம் என ரேட்டிங்கை மாற்றிக் கொடுத்தார்கள். அதோடு விலை இறக்கம் கண்டு 165 ரூபாய் வரை தொடலாம் என டார்கெட் கூட வைத்தார்கள். சொல்லி வைத்தாற் போல தற்போது யெஸ் பேங்கின் பங்கு விலை 166 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. Macquarie double நிறுவனத்தைத் தொடர்ந்து மார்கன் ஸ்டான்லியும் யெஸ் பேங்க் நிறுவனத்தை அண்டர்வெயிட் என வகைப்படுத்தி இருக்கிறது.
ஒரு நீண்ட கால திட்டம்
Macquarie double, மார்கன் ஸ்டான்லியைத் தொடர்ந்து உள்ளூர் தரகு நிறுவனங்களான கோட்டக் ஈக்விட்டீஸ் தொடங்கி நண்டு சிண்டுகள் வரை பலரும் யெஸ் பேங்குக்கான ரேட்டிங்குகளையும் மதிப்பீடுகளையும் குறைத்திருக்கிறார்கள். இதை தற்காலிகமாக சமாளிக்க யெஸ் பேங்க் நிறுவனத்தின் சி இ ஓ ரவ்னீத் கில் சில புதிய நீண்ட கால திட்டங்களை வெளியிட்டு இருக்கிறார். இவைகள் அடுத்தடுத்த காலாண்டில் யெஸ் பேங்கை மீண்டும் லாபத்துக்கு அழைத்துச் செல்லும் என அனலிஸ்டுகளும் நம்புகிறார்கள்.
இத்தனை இறக்கமா..?
கடந்த வெள்ளிக்கிழமை மாலை 237 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்தது யெஸ் பேங்க். ஆனால் இன்று காலையில் இருந்தே சரிவு உறுதி செய்யப்பட்டது. இன்று காலை வர்த்தக நேர தொடக்கத்திலேயே சுமார் 25 ரூபாய் சரிந்து 213 ரூபாய்க்கு கேப் டவுனில் வர்த்தகமாகத் தொடங்கியது யெஸ் பேங்க். அப்படியே இறக்கம் கண்டு இன்று வர்த்தக நேர முடிவில் 166-க்கு நிறை வடைந்திருக்கிறது. யெஸ் பேங்கின் 52 வார குறைந்த பட்சம் விலை 146 ரூபாய். நாளையும் இந்த நிலை நீடித்தால் உறுதியாக புதிய 52 வார இறக்க விலையைத் தொடும் என்கிறார்கள் அனலிஸ்டுகள்.