Pepsico நிறுவனம் இந்திய விவசாயிகள் மீது, தங்கள் (pepsico)அனுமதி இல்லாமல் FC 5 என்கிற உருளைக்கிழங்கை பயிரிட்டதற்காக ஒரு வழக்கை அலஹாபாத் உயர் நீதிமன்றத்தில் நடத்தி வந்தது. இப்போது விவசாயிகளுடன் சமாதானமாக போகிறோம். வழக்கை வாபஸ் வாங்கிக் கொள்கிறோம் என Pepsico நிறுவனமே சொல்லி இருக்கிறதாம்.
கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து இன்று வரை 9 குஜராத் விவசாயிகள் மீது ஒரு நூதன காப்பிரைட் வழக்கைத் தொடுத்திருக்கிறது Pepsico. இந்தியாவிலேயே முதல் முறையாக, விவசாயிகள் மீது காப்பிரைட் பிரச்னைக்காக தொடுக்கப் பட்ட முதல் வழக்கு.
FC 5 என்கிற ஹைபிரிட் ரக உருளைக்கிழங்கை, Pepsico நிறுவனம், தன்னுடைய லேஸ் சிப்ஸ்களுக்காக Protection of Plant Variety and Farmers Right Act, 2001-ன் கீழ் தானே பயிர் செய்து கொள்ள பதிவு செய்து கொண்டது.
2031 வரை
2016-ம் ஆண்டு தான் Pepsico நிறுவனம் இந்த FC 5 ரக உருளைக்கிழங்கு அடுத்த 15 ஆண்டுகளுக்கு பதிவு செய்து கொண்டது. ஆக 2031- வரை இந்தியாவில் யார் இந்த FC 5 ரக உருளைக்கிழங்கை பயிரிட்டாலும் அவர்கள் மீது வழக்கு தொடுப்பேன் என, இந்த 9 குஜராத் விவசாயிகள் மீதும் வழக்கு தொடுத்திருக்கிறது.
விளக்கம்
மேலே சொன்ன சட்டத்தின் பிரிவு 64-ன் கீழ் "Protection of Plant Variety and Farmers Right Act, 2001-ன் கீழ் பதிவு செய்து கொண்ட விவசாயப் பயிர்களை, அந்த நிறுவனங்கள் மட்டுமே பயிரிட வேண்டும், மீறினால் அவர்கள் மீது வழக்கு தொடுக்கலாம்" எனச் சொல்லப்பட்டிருக்கிறது. இப்போது குஜராத்தைச் சேர்ந்த 9 விவசாயிகள் மீதும், இந்த சட்டப் பிரிவின் கீழ் தான் வழக்கு தொடுத்திருக்கிறது Pepsico. அதோடு ஒவ்வொரு விவசாயியும் Pepsico நிறுவனத்துக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் (மொத்தம் 9 கோடி ரூபாய்) நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும் எனவும் வழக்கு தொடுத்து இருக்கிறது.
விவசாயிகள் தரப்பு
ஆனால் விவசாயிகளோ எதிர்பாராத விதத்தில் சட்டத்தின் வழியாகவே, Pepsico நிறுவனத்துக்கு பதில் கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள். Protection of Plant Varieties and Farmers' Rights Act, 2001 சட்டப் பிரிவு 39-ன் படி, ஒரு விவசாயி தன் நிலத்தில் விளைவிக்கும் பயிரைச் சேகரித்துக் கொள்ளவோ, பயன்படுத்தவோ, பயிரிடவோ, மறு பயிரிடவோ, பரிமாறிக் கொள்ளவோ, பகிர்ந்துக் கொள்ளவோ, விற்கவோ செய்யலாம். குறிப்பாக மேலே சொன்ன Protection of Plant Varieties and Farmers' Rights Act, 2001 சட்டப்படி பதிவு செய்யப்பட்ட விதைகளாக இருந்தாலும் விவசாயம் செய்யலாம் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே இந்த வழக்கே செல்லாது எனச் சொல்கிறார்கள் விவசாயிகள். பிராண்டெட் விதைகளாக பதிவு செய்திருந்தால் தான் Pepsico சொல்வது போல, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அனுமதி இல்லாமல், விவசாயிகள் பயிரிடக் கூடாது எனவும் தெளிவுபடுத்துகிறார்கள் விவசாயிகள். FC 5 உருளைக்கிழங்கு ஒரு பிராண்டெட் விதை அல்ல என்பதையும் உறுதி செய்கிறார்கள்.
சந்தை போய்விடுமோ
இந்த பிரச்னை இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக வலு பெறத் தொடங்கியது. சொல்லப் போனால் பல்வேறு விவசாயிகள் சங்கம் மற்றும் யூனியன்களே இந்த வழக்குக்கு எதிராக தங்கள் கருத்துக்களைச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு கட்டத்தில் Pepsico பொருட்களை நாம் புறக்கணிக்க வேண்டும் என்கிற கோஷமும் வலு பெறத் தொடங்கி விட்டது. சமீபத்தில் ஜல்லிக்கட்டு விஷயத்தில் தமிழகம் முழுக்க கொஞ்ச நாட்களுக்கு கோககோலா மற்றும் பெப்ஸி பொருட்கள் விற்பனையில் இல்லாமல் இருந்தது நினைவிருக்கிறதா..? எனவே இந்தியா போன்ற மிகப் பெரிய சந்தையை ஒரு சின்ன உருளைக்கிழங்கு விஷயத்தில் இழப்பது, நல்லதல்ல என உணர்ந்து கொண்டது Pepsico. எனவே விவசாயிகளிடம் சமரசமாக போக முன் வந்திருக்கிறது.
எங்கள் திட்டத்துக்கு வாருங்கள்
நேற்று அலஹாபாத் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரனைக்கு வந்தது இந்த 9 விவசாயிகள் Vs Pepsico நிறுவன வழக்கு. நீதிமன்றத்தின் முன்னிலையிலேயே "இந்திய விவசாயிகள் (9 விவசாயிகள்) செய்த விஷயத்தை நாங்கள் மன்னித்து விடுகிறோம், வழக்கை வாபஸ் வாங்கிக் கொள்கிறோம். விவசாயிகள் Pepsico நிறுவனத்தின் ‘கூட்டு உருளை சாகுபடி திட்டம்'-ல் இணைந்து கொள்ளலாம். தாராளமாக FC 5 ரக உருளைக்கிழங்கைப் பயிரிடலாம். அதை Pepsico நிறுவனத்திடமே நல்ல விலைக்கு விற்கலாம்" என வெள்ளைக் கொடி காட்டி இருக்கிறது Pepsico.
முடியவே முடியாது
குற்றம் சுமத்தப்பட்ட ஒன்பது விவசாயிகளில் ஒருவரான பிபின் படேல் "நாங்கள் தெரிந்தே Pepsico நிறுவனத்தின் FC 5 ரக விதைகளைப் பயன்படுத்தவில்லை. எதிர்பாராத விதமாக பயிர் செய்துவிடோம். சில வருடங்களுக்கு முன்பே எங்களிடம் Pepsico நிறுவனம் தங்களின் "கூட்டு உருளை சாகுபடி திட்டம்'-ல் இணைந்து, Pepsico நிறுவனத்திடமே FC 5 விதைகளை வாங்கி, விளைச்சள்களை, அவர்கள் சொல்லும் விலைக்கு கொடுக்கச் சொன்னார்கள். எங்களுக்கு அது லாபகரமாக இல்லாததால் நிராகரித்துவிட்டோம்" என போட்டு உடைத்துவிட்டார்.
இருக்கும் பிழைப்பே போதும்
இப்போது திருவிழாவில் காணாமல் போன குழந்தை போல முழித்துக் கொண்டிருக்கிறது Pepsico. ஒரு பக்கம் இந்திய விவசாயிகள் FC 5 உருளைகளை பயிர் செய்கிறார்கள். தன் 15 பில்லியன் டாலர் லேஸ் ரக உருளைக்கிழங்குகளை காப்பாற்றப் போனால், 65 பில்லியன் டாலர் வருவாயைக் கொட்டும் Pepsi குளிர்பானங்களை விற்க மாட்டோம், Pepsico பொருட்களுக்கு தடை போடுவோம் என உரக்கச் சொல்கிறார்கள் விவசாயிகள். இப்போது எப்படி இந்த வழக்கை நாசூக்காக முடிப்பது என Pepsico தலைமை(யை) பிய்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது Pepsico நிறுவனம் தன் ‘கூட்டு உருளைக்கிழங்கு சாகுபடி' திட்டத்தில் விவசாயிகள் இணையவில்லை என்றாலும் பரவாயில்லை. நாங்கள் வழக்கை வாபஸ் வாங்கிக் கொள்கிறோம் எனச் சொல்லி இருக்கிறார்கள்.