மும்பை: இந்தியாவில் ஒட்டு மொத்தமாக வங்கிக் கடன் 12.3 சதவிகிதம் வளர்ந்திருக்கின்ற போதிலும், கல்விக் கடன் மட்டும் 2.5 சதவிகிதம் குறைந்திருப்பதாக ஆர்பிஐ-ன் சமீபத்தைய அறிக்கை சொல்கிறது.
கடந்த மார்ச் 2019 (2018 - 19 நிதி ஆண்டில்) இந்திய வங்கிகளில் மொத்தமாக 68,000 கோடி ரூபாய் மட்டுமே கல்விக் கடனாகக் கொடுத்திருக்கிறார்களாம். ஆனால் அதற்கு முந்தைய நிதி ஆண்டில் 69,700 கோடி ரூபாயைக் கல்விக் கடனாகக் கொடுத்திருக்கிறார்கள்.
மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும், இந்தியாவின் கடன் வளர்ச்சி தொடர்பான ஒரு அறிக்கையிலும், இந்தியாவில் கல்விக் கடன், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக குறைந்திருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது.
என்ன கணக்கு
கடந்த மார்ச் 2017-ல் இந்திய வங்கிகள் கொடுத்த மொத்த கல்விக் கடன் 70,100 கோடி ரூபாய். மார்ச் 2018-ல் 69,700 கோடி ரூபாயையும், மார்ச் 2019-ல் 68,000 கோடி ரூபாயையும் கடனாகக் கொடுத்திருக்கின்றன இந்திய வங்கிகள். இந்தியாவில் கல்விக் கடன் வளர்ச்சி குறைந்திருப்பதற்கு, கல்விக் கடன் வழங்குவதற்க்கான விதிகளில் கொண்டு வரப்பட்ட கடுமையான மாற்றங்களே காரணம் எனவும் சொல்கிறது Care மதிப்பீட்டு நிறுவனம்.
பாதுகாப்பு இல்லை
அதோடு இந்தியாவின் மொத்த கல்விக் கடன் சந்தையில் 95% அரசு வங்கிகளிடம் தான் இருக்கின்றனவாம். ஏன் இந்த கடனில் தனியார் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தலையிடாமல் இருக்கின்றன..? காரணம் பாதுகாப்பு கிடையாது. அதாவது கல்விக் கடன் கொடுக்கும் போது சொத்துக்களை பிணையாக வாங்கி வைத்துக் கொண்டு, கல்விக் கடன் கொடுக்க முடியாது. அதனால் தான் இதில் தனியார் வங்கிகள் தலையிடாமல் இருக்கின்றன.
புதிய முறை
வழக்கமான பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கு, கடன் கொடுப்பதை விட, படித்த உடன் வேலை கிடைக்கும் விதத்தில் இருக்கும் கல்விகளுக்கும், பட்டப் படிப்புகளுக்கும் தேடித் தேடிக் கடன் கொடுக்கிறார்கள் தனியார் வங்கிகள். இந்த இடத்தில் தனியார் வங்கிகளோடு தனியார் நிதி நிறுவனங்களும் சேர்ந்து கொள்கின்றன. குறிப்பாக வெளிநாட்டில் படிக்கச் செல்பவர்களை, அதிகம் அலைய வைக்காமல், உடனடியாக வேலையை முடித்து கல்விக் கடனைக் கொடுத்து வழி அனுப்பி விடுகிறார்கள் தனியார்கள்.
வாராக் கடன்
ஒரு பக்கம் கல்விக் கடன் கொடுப்பது குறைந்து கொண்டிருக்கும் போது, மறு பக்கம் கல்விக் கடன் அதிகம் வாராக் கடன்களாக அதிகரித்துக் கொண்டே செல்வதையும் பார்க்க முடிகிறது. மார்ச் 2018 நிலவரப்படி 5,939 கோடி ரூபாய் கல்விக் கடன் வாராக் கடனாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒட்டு மொத்தமாக இந்தியாவில் கொடுத்த கல்விக் கடனில் சுமார் 8.5 சதவிகிதம் மொத்தமும் வாராக் கடனாக மாறி இருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டுகிறது ஆர்பிஐ. இதில் முக்கியமான இன்னொரு விஷயம், இந்தியாவிலேயே அதிகம் கல்விக் கடன் வாங்கும் மாநிலங்களில் முதல் இடத்தில் இருப்பது நம் தமிழகமும், அண்டை அழகு மாநிலமான கேரளமும் தான்.