டெல்லி : இந்தியாவில் கடந்த நிதியாண்டில் ஜனவரி - மார்ச் 2019-ம் காலாண்டில் தங்கத்தின் தேவை 5 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது
இதையடுத்து இது குறித்து இந்த கவுன்சிலின் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் சோம சுந்தரம் பிள்ளை கூறியதாவது, இந்தியாவில் கடந்த 2019-ம் நிதியாண்டில் ஜனவரி - மார்ச் 2019 காலாண்டில் தங்கத்தின் தேவை 159 டன்னாக இருந்துள்ளது.
இதுவே கடந்த 2018-ம் நிதியாண்டில் ஜனவரி - மார்ச் 2018 காலாண்டில் 151.5 டன்னாக இருந்துள்ளது. இதற்கு காரணம் இந்த முதல் காலாண்டில் முன்னர் சர்வதேச சந்தைகளிலும் தங்கத்தின் விலை சற்று குறைந்திருந்தது.
ஆபரணம் வாங்குவோருக்கு ஏதுவாக விலை குறைந்தது
அதேசமயம் இந்தியாவில் இந்திய ரூபாயின் மதிப்பும் வலுவடைந்திருந்தது. இது போன்ற பல காரணங்களால் இந்தியாவில் தங்கத்தின் விலையை குறைத்தன. இந்த விலையிறக்கம் தங்க ஆபரணங்கள் வாங்குவோருக்கு ஏதுவாக அமைந்தது.
ஆபரண நகை தேவை அதிகரிப்பு
கடந்த மார்ச் -ஜனவரி காலாண்டில் மட்டும் தங்க ஆபரண நகைகளின் தேவை 5 சதவிகிதம் அதிகரித்து 125.4 டன்னாக அதிகரித்துள்ளது. இதுவே 2018-ம் ஆண்டின் இதே காலாண்டில் இதன் தேவை 119.2 டன்னாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மதிப்பு கடந்த ஜனவரி - மார்ச் காலாண்டில் 13 சதவிகிதம் அதிகரித்து 37,070 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே கடந்த 2018-ம் நிதியாண்டில் இதே காலாண்டில் 32,790 கோடி ரூபாயாக இருந்ததும் கவனிக்க தக்க விஷயமாகும்.
முதலீட்டுக்கான தங்கம்
இதுவே முதலீட்டுக்கான தங்கத்தில் கடந்த ஜனவரி- மார்ச் காலாண்டில் 4 சதவிகிதம் அதிகரித்து 33.6 டன்னாக அதிகரித்துள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டில் 32.2 டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவே தங்க முதலீட்டுக்கான தேவை 12 சதவிகிதம் அதிகரித்து 9,940 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே கடந்த 2018 இதே காலாண்டில் 8,890 கோடி ரூபாயாக இருந்துள்ளது.
மறு சுழற்சி செய்யபடும் தங்கம்
இதுவே மறு சுழற்சி செய்யப்படும் தங்கத்தின் மதிப்பு 14 சதவிகிதம் அதிகரித்து ஜனவரி - மார்ச் காலாண்டில் 16.1 டன்னாக அதிகரித்துள்ளது. இதுவே கடந்த ஆண்டில் இதே காலாண்டில் 14.1 டன்னாக இருந்தது. இந்த வகையில் ஆபரண நகை வாங்குவோர் புதிது புதிதாக மாடல்களை வரவேற்பதையும் பழைய நகைகளை விற்று புதிய நகை வாங்குவதிலும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
தேவை அதிகரிக்கலாம்
இதோடு மட்டும் அல்லாமல் வரப்போகும் திருமன முகூர்த்தங்கள் காரணமாகவும், திருவிழா மற்றும் அக்ஷய திருதியை காரணமாகவும் வரப்போகும் காலாண்டுகளில் தங்கத்தின் தேவை இன்னும் அதிகரிக்கலாம் என்றும் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.
பருவமழையால் தங்கம் முதலீடு அதிகரிக்கும்
மேலும் நடப்பு ஆண்டில் பருவமழையும் ஆங்காங்கே பெய்து வருவதால் இந்த ஆண்டில் பயிர் விளைச்சலும் அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கிராமப்புறங்களில் தங்கம் வாங்குவதற்கான சூழலும் உண்டு. குறிப்பாக கிராமப்புறங்களில் இன்றளவிலும் தங்கத்திற்கான முதலீடு கவர்ச்சிகரமானதாகவே உள்ளது. ஆக இதுவும் தங்கத்தின் தேவை உயர்த்துவதாக அமையாலாம் என்றும் கூறுகிறார்.