டெல்லி: இந்தியாவின் ஒட்டு மொத்த உற்பத்தி (GDP) கடந்த 5 ஆண்டுகளில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தை விட அதிகமாக இருந்ததாக வெளியிடப்பட்ட தகவல் தவறானது என என்.எஸ்.எஸ்.ஓ (National Sample Survey Office) விளக்கம் அளித்துள்ளது. பிரதமர் மோடி ஆட்சி காலத்தில் ஜிடிபியின் அளவு அதிகமாக இருந்ததாகக் காட்ட தவறான தரவுகள் (data) பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் என்.எஸ்.எஸ்.ஓ தெரிவித்துள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு மோடி அரசு இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியைக் கணக்கிட அடிப்படை ஆண்டை 2004 - 05ல் இருந்து 2011 - 12ஆக மாற்றியது. புதிய அடிப்படை ஆண்டுகளின்படி அடுத்தடுத்த ஆண்டின் ஜிடிபி தரவுகளை வெளியிட்டால் பரவாயில்லை. ஆனால் மோடி அரசு பின் நோக்கிச் சென்று ( Back series GDP Data) காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின் ஜிடிபி தரவுகளையே மாற்றி வளர்ச்சியைக் குறைத்துக் காட்டியது. அதோடு தன் ஆட்சிக் காலத்தில் தான் உண்மையான பொருளாதார வளர்ச்சி கண்டிருப்பதாகவும் சொன்னது பாஜக அரசு.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 2010 - 11ம் நிதி ஆண்டில் தான், இது வரை இந்தியப் பொருளாதாரம் காணாத 10.26 சதவிகித வளர்ச்சியை எட்டியது. ஆனால் மோடி அரசு அதை வெறும் 8.5 சதவிகிதம் தான் என்றது.
இந்நிலையில் உண்மையை புட்டு புட்டு வைத்துள்ளது என்.எஸ்.எஸ்.ஓ அமைப்பு. அடிப்படை ஆண்டை வைத்து கணக்கிட்ட தரவுகள், கணக்கிடப் பயன்படுத்தியத் தரவுகள் அனைத்தும் தவறு எனச் சொல்லி இருக்கிறது என்.எஸ்.எஸ்.ஓ என்கிற தேசிய மாதிரி சர்வே அமைப்பு.
இந்த விஷயத்தை டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரும், தேசிய மாதிரி சர்வே அமைப்பின் முன்னாள் தலைவராக இருந்த மோகனன் என்பவரும் கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள்.
இந்த சர்ச்சைகள் எல்லாம் இப்போது தான் கொஞ்சம் ஓய்ந்திருந்தது. ஆனால் இன்று என்.எஸ்.எஸ்.ஓ அமைப்பின் கருத்தால், மீண்டும் உயிர் பெற்றுவிட்டது இந்த ஜிடிபி சர்ச்சைகள். இந்த பிரச்னைக்கு உயிர் கொடுக்க, ஜிடிபியைக் கணக்கிட மோடி அரசு நான்கு தவறுகளைச் செய்திருக்கிறார்கள். அப்படி என்ன செய்துவிட்டார்கள் பாஜகவினர். ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.