சென்னை: வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யும்போது அந்த ஆண்டில் செலுத்திய காப்பீட்டுத் தொகைக்கான ஜிஎஸ்டி வரியை பெற முடியுமா இல்லையா என்ற குழப்பம் ரிட்டன் தாக்கல் செய்யும் அனைவருக்கும் வருவது இயற்கைதான்.
நாம் தாக்கல் செய்யும் வருமான வரி ரிட்டனில், நமக்கும் நம் குடும்பத்திற்கும் அந்த ஆண்டில் செலுத்திய காப்பீட்டு தொகையை வருமான வரிச் சலுகையாக பெறுகிறோம். அதில் ஜிஎஸ்டி வரியும் உள்ளடங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மாதச் சம்பளதாரர்களில் வருமான வரி செலுத்தும் பிரிவில் வருவோர் அனைவருக்கும், வருமான வரியை எப்படி எல்லாம் மிச்சப்படுத்த முடியும் என்று ரூம் போட்டு யோசிக்கும் அளவுக்கு யோசனை தோன்றுவது உண்டு.
வருமான வரி ரிட்டன் தாக்கலில் வரிச் சலுகை பெறுவதற்காக வருமான வரிச்சட்டம் 80சி(80C) பிரிவின் கீழ் சுமார் ரூ.1.50 லட்சமும், 80டி (80D) பிரிவின் கீழ் சுமார் 25000 ரூபாயும் தனிநபர் வருமான வரி வரம்பின் கீழ் வரும் அனைவரும் பெற முடியும் என்பது அனைவருக்கும் தெரியும்.
இதில் 80சி பிரிவின் கீழ் நாம் செலுத்தும் ஆயுள் காப்பீட்டு பாலிசிக்கான பிரீமியத் தொகையையும், 80டி பிரிவின் கீழ் மருத்துவக் காப்பீட்டுக்கான பிரீமியத் தொகையையும் குறிப்பிட்டு வரிச் சலுகை பயனை நாம் பெற்றுக்கொள்கிறோம். நாம் செலுத்தும் காப்பீட்டு பிரீமியத் தொகையில் 18 சதவிகித ஜிஎஸ்டி வரியும் உள்ளடங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வருமான வரி செலுத்தும் அனைவருக்கும் புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. காப்பீட்டு பிரீமியத்தில் இருக்கும் ஜிஎஸ்டி வரியை நாம் எப்படி பயன்படுத்துவது அல்லது அதை பயன்படுத்த முடியுமா முடியாதா என்பது தான் அது.
இதில் குழப்பமடைவதற்கு ஒன்றுமில்லை. நாம் செலுத்தும் மருத்துவக் காப்பீடோ அல்லது ஆயுள் காப்பீடோ, எதுவாக இருந்தாலும், நாம் செலுத்திய அதாவது வரியுடன் சேர்த்து செலுத்திய மொத்த பிரீமியம் தொகையையும் சேர்தது தான் வருமான வரி சலுகைக்கான 80சி மற்றும் 80டி பிரிவுகளில் குறிப்பிட்டு வரிச் சலுகையை அனுபவிக்கிறோம்.
உதாரணமாக நாம் ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாயை மருத்துவக் காப்பீட்டுக்கான பிரீமியமாக செலுத்துவதாக வைத்துக்கொள்வோம். இதற்கு ஜிஎஸ்டி வரியான 18 சதவிகித தொகையான 1800 ரூபாய் சேர்த்து 11 ஆயிரத்து 800 ரூபாயை பிரீமியமாக செலுத்துவோம்.
நாம் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யும்போது வரிச் சலுகைக்கான 80சி அல்லது 80டி பிரிவின் கீழ் காப்பீட்டு பிரீமியத் தொகையாக 11 ஆயிரத்து 800 ரூபாய் முழுவதையும் குறிப்பிட்டுத் தான் வரிச் சலுகையை அனுபவிக்கிறோம் அல்லது பயனைப் பெறுகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.