டெல்லி: வீடியோகான் நிறுவனத்திற்கு 1,875 கோடி ரூபாய் முறைகேடாக வங்கிக் கடன் வழங்கியதற்கு லஞ்சம் பெற்ற புகார் தொடர்பாக, ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகியோர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று மீண்டும் ஆஜராகினர்.
ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார் விடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கியதில் முறைகேடாக நடந்துகொண்டார் என்பது அரவிந்த் குப்தா என்பவரின் புகாராகும். கடந்த 2017ஆம் ஆண்டு இந்த புகாரை விசாரித்த முன்னாள் நீதிபதி பி என் ஸ்ரீகிருஷ்ணா குழுவின் அறிக்கையில் சந்தா கோச்சார் வங்கி விதிமுறைகளை மீறியது உண்மை இருப்பதாக கூறியது.
சந்தா கோச்சார் அளித்த ராஜினாமவை ஏற்று ஐசிஐசிஐ வங்கி இயக்குநர் குழு நிரந்தரமாக அவரை பணியில் இருந்து நீக்கியது. சந்தா கோச்சார் தான் பதவி வகித்த காலத்தில் தன் பதவியை பயன்படுத்தி தன் கணவர் தீபக் கோச்சாரின் தொழில் கூட்டாளியான வீடியோகான் அதிபர் வேணுகோபால் தூத்திற்கு எந்த விதமான நிபந்ததையும் இல்லாமல் ரூ.1875 கோடி கடன் வழங்கியதற்கு கைமாறாக ரூ.64 கோடி லஞ்சம் பெற்றதாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
இதையடுத்து, பணப்பரிமாற்றம் தொடர்பான விசாரணையை மத்திய அமலாக்கத் துறை தொடர்ந்து நடத்தி வருகிறது. சந்தா கோச்சாரிடம் கடந்த மார்ச் மாதம் நடத்திய விசாரணையில் வீடியோகான் நிறுவனத்திற்கு அனைத்து நிபந்ததைகளும் பூர்த்தி செய்யப்பட்ட பிறகு, கடன் வழங்கும் குழு உரிய முறையில் பரிசீலித்த பின்பே கடன் வழங்க நிர்வாகக் குழு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக வாக்கு மூலம் அளித்திருந்தார்.
அதோடு சந்தா கோச்சார், தனது கணவர் தீபக் கோச்சார் நடத்தும் தொழில் பற்றி எந்த விசயமும் தனக்கு தெரியாது என்றும் தெரிவித்திருந்தார். அவருடைய கணவரும் அதே பதிலை அமலாக்கத்துறையின் விசாரணையில் பதில் அளித்திருந்தார்.
இந்தநிலையில் சாந்தா கோச்சார் இன்று மீண்டும் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் வங்கிக்கடன் முறைகேடு தொடர்பாக பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் கேட்டதாக தெரிகிறது. அதுபோலவே அமலாக்கதுறை திரட்டிய ஆவணங்களை வைத்து அதுதொடர்பான விளக்கங்களையும் கேட்டனர்.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் (Prevention of Money Laundering Act-PMLA) குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தா கோச்சார், அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு அளிக்கும் பதில் அளிக்க வேண்டியது அவசியமாகும். அவர் அளிக்கும் பதில்கள் அனைத்தும் முறையாக பதிவு செய்யப்படும் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் மற்றும் அவருடைய சகோதரர் ராஜீவ் கோச்சார் ஆகியோரிடமும் அமலாக்கத்துறை கிடுக்கிப்பிடியான கேள்விகளைக் கேட்டடு வறுத்தெடுத்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இவர்கள் இருவரிடமும் விசாரணையை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
வீடியோகான் நிறுவனத்திற்கு முறைகேடாக சுமார் 1875 கோடி ரூபாய் கடன் பெற்றுத்தருவதற்காக சந்தா கோச்சார் 64 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக மத்திய புலனாய்வுத் துறை வழக்கு பதிவு செய்தது. இதனை அடிப்படையாகக் கொண்டே அமலாக்கத்துறை குற்றாச்சாட்டு பதிவு செய்தது.
கடந்த மார்ச் 1ஆம் தேதியன்று சந்தா கோச்சாரின் வீடு, அவருடைய கணவர் தீபக் கோச்சார் மற்றும் அவருடைய சகோதரர் ஆகியோரின் நிறுவனங்கள், தீபக் கோச்சாரின் தொழில் கூட்டாளியான வேணுகோபால் தூத்தின் வீடியோகான் அலுவலகத்திலும் மத்திய அமலாக்கத்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர். தேடுதல் வேட்டையில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு ஏற்கனவே விசாரணை நடத்தியது. தற்போது இரண்டாம் முறையாக சந்தா கோச்சார் மற்றும் இவ்வழக்கில் தொடர்புடைய அனைவரும் அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்திற்கு விசாரணைக்கு வரவழைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.