டெல்லி: டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக எடுத்து வருகிறது அந்த வகையில் அனைத்து கடைகளும் க்யூ ஆர் குறியீட்டை பயன்படுத்துவதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சமீப காலமாக யூபிஐ, பிம், கூகுள் பே, ஃபோன்பே போன்ற சேவைகளின் கீழ் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளில் வாடிக்கையாளர்கள் ஈடுபட்டு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த மார்ச் மாதம் மொபைல் வாலெட் மூலம் செய்யப்பட்ட பரிவர்த்தனைகள் சுமார் 12% அதிகரித்துள்ளது.
இதனை கவனித்த மத்திய அரசு தனது லட்சியங்களில் ஒன்றான பணமில்லா பரிவர்த்தனையை மேலும் அதிகரிக்க திட்டம் தீட்டி வருகிறது. நாடு முழுவதும் உள்ள அனைத்து கடைகளுக்கும் யூபிஐ பண பரிவர்த்தனை சேவை கீழ் வழங்கப்படும் QR குறியீட்டைக் கட்டாயமாக்கினால், பணமில்லா பரிவர்த்தனையின் எண்ணிக்கை பன்மடங்கு உயரும் என மத்திய அரசு கணித்துள்ளது.
இது தொடர்பான வரைவறிக்கைக்கு GST கவுன்சில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. க்யூ ஆர் குறியீடு மூலம் பணபரிவர்த்தனை செய்வது அதிகரிக்கும் போது வணிகர், வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும் ஜிஎஸ்டி நன்மைகள் சென்றடையும்.
மேலும் அனைத்து பரிவர்த்தனைகளையுமே கணக்கிற்குள் கொண்டு வந்துவிடலாம் என மத்திய அரசு நினைக்கிறது. மேலும் QR குறியீடு சேவையை அனைத்து கடைகளிலும் கட்டாயமாக்கும் போது, கூடுதல் சலுகைகள், கேஷ்பேக் ஆஃபர் உள்ளிட்டவற்றை வாடிக்கையாளர்களுக்கு வாரி வழங்குவது குறித்தும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
க்யூ ஆர் குறியீடு சேவை மூலமாகப் பண பரிவர்த்தனை செய்ய இயந்திரங்கள் தேவையில்லை. எளிதாக ஒரு பேப்பரில் க்யூ ஆர் குறியீட்டை அச்சிட்டு கடையில் ஒட்டினாலே போதும். வாடிக்கையாளர்களிடமிருந்து எளிதாகப் பணத்தைப் பெறலாம். சில்லறை தட்டுப்பாடும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.