ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்வோரின் சுமையைக் குறைக்கும் விதமாக ஜிஎஸ்டி ஆணையம் மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்யும் படிவத்தில் பெரிதும் மாற்றம் செய்து ஒரே ஒரு படிவத்தை மட்டுமே தாக்கல் செய்யும் வகையில் மாற்றி அமைத்துள்ளது. இந்த மாற்றம் வரும் ஜூலை முதல் அமலுக்கு வரும் என்று ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்துள்ளது.
புதிய ஜிஎஸ்டி படிவம் அமலுக்கு வரும்போது வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினரின் வேலைப்பளு பெருமளவில் குறையும் என்று வரி ஆலோசகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
வாட் வரி விதிப்பு முறையைப் போலவே ஜிஎஸ்டி வரி விகித முறையிலும் ஏகப்பட்ட குழப்பங்கள், அதிகப்படியான வரி விகிதங்கள், வரி முறைகேடுகள் உள்ளதால் தான் அரசுக்கு வரும் வரி வருவாய் பாதிக்கப்பட்டு பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படுவதாக மத்திய அரசும், பொருளாதார நிபுணர்களும் சந்தேகப்பட்டதை அடுத்தே முற்றிலும் புதிய படிவம் அமல்படுத்தப்படுவதாக தெரிகிறது.
ஒரே நாடு ஒரே வரிதான்
வாட் வரி விதிப்பு முறையை ஒழித்து விட்டு அதற்கு பதிலாக மற்ற நாடுகளில் உள்ளது போல் ஒரே ஒரு வரி முறை மட்டுமே இருக்கும் வகையில் புதிய வரி முறையை அமல்படுத்த வரி நிபுணர்களும் ஆலோசனை வழங்கினார்கள். மத்திய அரசும் இது பற்றி தீவிரமாக யோசித்து ஒரே ஒரு வரி முறையை கொண்டு வரும் முயற்சியில் இறங்கியது.
வரி விகித ஏமாற்றம்
மிக நீண்ட நாட்கள் ஆலோசனைக்கு பின்பு கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் ஒரே நாடு ஒரே வரி முறை (One Nation, One Tax) என்ற கோஷத்துடன் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை என்னும் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டது. ஆனால் வரி விகிதங்கள் மட்டும் 5 விகிதங்களாக அதாவது 5, 12, 18, 28 சதவிகிதம் மற்றும் தங்க நகைகளுக்கு என 3 சதவிகித வரி என நிர்ணயம் செய்யப்பட்டது.
வரி விலக்கு பொருட்களுக்கு 28 சதவிகித வரி
ஒரு நாடு, ஒரு வரி முறை என்று உத்தரவாதம் அளித்துவிட்ட பின்னர் வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டதை அனைத்து வர்த்தகர்களும் தொழில் துறையினரும் கடுமையாக எதிர்த்தனர். அதோடு வாட் வரி முறையில் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட பெரும்பாலான பொருட்கள் ஜிஎஸ்டி வரி முறையில் உச்சபட்ச வரி விகிதங்களான 18 முதல் 28 சதவிகித பொருட்களாக மாற்றப்பட்டன.
வருமானம் போய்விடும்
ஜிஎஸ்டி வரி முறையில் இத்தனை மாற்றங்கள் நடந்தும், அனைவரும் எதிர்பார்த்த பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் மதுபானங்கள் இரண்டையும் ஜிஎஸ்டி வரி விதிப்பு வட்டத்திற்குள் கொண்டு வராமல் சமயோசிதமாக மத்திய அரசு தவிர்த்து விட்டது. இந்த இரண்டு பொருட்களையும் ஜிஎஸ்டி வரி வட்டத்திற்குள் கொண்டு வந்தால் மத்திய மாநில அரசுகளுக்கு கிடைக்கும் அதிகப் படியான வருவாய் கிடைக்காமல் போய்விடக்கூடும் என்ற பயத்தினால் இவ்விரண்டையும் ஜிஎஸ்டி வட்டத்திற்குள் கொண்டுவராமல் தவிர்த்து விட்டனர்.
ரிட்டன் படிவங்கள் என்னாச்சு
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டாலும், மாதாந்திர ரிட்டன் தாக்கல் செய்வதற்கான படிவங்கள் குறித்து ஜிஎஸ்டி ஆணையம் எந்தவிதமான அறிவிப்பையும் உடனடியாக வெளியிடவில்லை. அதனால் மாதாந்திர ரிட்டன்களை எப்படி தாக்கல் செய்வது என்று வர்த்தகர்களும் தொழில் துறையினரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
மூன்றுவிதமான படிவங்களா
ஒரு வழியாக மாதாந்திர ரிட்டன் தாக்கலுக்கான ஜிஎஸ்டி ரிட்டன் படிவங்கள் அந்த ஆண்டின் ஆகஸ்டு மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு அமல்படுத்தப்பட்டன. அதைப் பார்த்த வர்த்தகர்கள், தொழில் துறையினர் மற்றும் வரி ஆலோசகர்கள் என அனைத்து தரப்பினரும் குழம்பிப்போய் மயக்கம் போடாத குறைதான். இதில் கொள்முதல் (GST-R2), விற்பனை (GST-R1), உள்ளீட்டு வரிப்பயன்பாடு போக நிகர வரி (GST-R3B) செலுத்துவதற்காக ஒருங்கிணைந்த படிவம் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக ரிட்டன் படிவங்கள் இருந்ததே இதற்கு காரணம்.
வாட் வரியில் ரெண்டுதான்
வாட் வரி முறையில் மாநிலத்திற்குள் செய்யும் வர்த்தகத்திற்கு என ஒரு படிவமும்(Form I) , வெளி மாநிலங்கள் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்திற்கு என ஒரு படிவமும் (Form 1) என இரு படிவங்களே இருந்தன. இது வர்த்தகர்களுக்கும் தொழில் துறையினருக்கும் எளிதில் புரியும் வகையிலும் இருந்தன.
வரி வருவாய் பாதிப்பு
புதிதாக ஜஎஸ்டி வரி முறையில் கொண்டுவரப்பட்ட மூன்று விதமான படிவங்களால் குழப்பமடைந்த பெரும்பாலான தொழில் துறையினரும் வர்த்தகர்களும் ஆரம்பத்தில் மாதாந்திர ரிட்டன் தாக்கல் செய்வதை தவிர்த்தும் ஒத்திவைத்தும் காலம் தாழ்த்தியும் வந்தனர். வரி ஆலோசகர்களுக்கும் வரி விகிதங்களை கணக்கிடுவதில் குழப்பமும் இருந்து வந்தது. இதனால் மத்திய அரசுக்கு வரவேண்டிய வரி வருவாய் பெரிதும் தடைபட்டது.
எளிமையான படிவம் வேண்டுமே
வரி வருவாய் குறைந்ததை அடுத்து ஜிஎஸ்டி ஆணையம் வர்த்தகர்கள், தொழில் துறையினர் மற்றும் வரி ஆலோசகர்களிடம் ஆலோசனையும் கருத்தும் கேட்டது. அவர்களும் இதுபற்றி சிக்கல்களை எடுத்துக்கூடிற இவற்றை எளிமையாக மாற்றுமாறு கோரிக்கையும் விடுத்தனர்.
ஒரே ரிட்டன் தான் ஈசி
அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்கப்பட்டு பின்னர் மாதாந்திர ஜிஎஸ்டி கவுன்சிலில் கூடி விவாதித்து அதன் பின்னர் அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில் முற்றிலும் புதிதாக ஒரே ஒரு ரிட்டன் தாக்கல் செய்யும் வகையில் மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டன் படிவத்தை மாற்றம் செய்வதற்கு முடிவெடுக்கப்பட்டு பரிந்துரைக்கப்பட்டது.
பரிசோதனை முயற்சி தோல்வி
புதிய படிவங்களை செயல்படுத்துவதற்காக அனைத்து வரி நிபுணர்களிடமும் தொழில் துறையினரிடமும் தகுந்த ஆலோசனையைப் பெற்று அதற்கேற்ப புதிய ரிட்டன் படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஜனவரி மாதமே சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் பின்னர் ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்தப்படும் என்றும் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் ஜிஎஸ்டி இணையதளம் புதிய படிவத்திற்கு ஏற்ற வகையில் தயாராகாததால் புதிய படிவம் அமல்படுத்தப்படுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஜிஎஸ்டி ஆணைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
புதிய ஆட்சி புதிய படிவம்
புதிய ரிட்டன் படிவம் காலதாமதம் ஆவதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. தற்போது லோக்சபா தேர்தல் நடைபெறுவதால், புதிய அறிவிப்புகள் வெளியிடுவது தவிர்க்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதத்தில் புதிய ஆட்சி அமைந்த உடன் புதிய மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டன் படிவம் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
36க்கு பதில் 12 தான்
புதிய மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டன் படிவம் அமல்படுத்தப்பட்டால், தற்போது தாக்கல் செய்வது போல் 36 ரிட்டன்களை தாக்கல் செய்வதற்க பதிலாக 12 ரிட்டன் படிவங்கள் மட்டும் தாக்கல் செய்தால் போதுமானது. இதனால் தொழில் துறையினருக்கும் வர்த்தகர்களுக்கும் வரி ஆலோசகர்களுக்கும் வேலைப்பளு குறைகிறது. தொழில் துறையினரும் தங்கள் முழு கவனத்தையும் தொழிலில் செலுத்த முடியும். வரி வருவாயும் அதிகரிக்கும்.
கண்காணிக்க முடியும்
இது பற்றி விளக்கிய PwC நிறுவனத்தின் இணை உரிமையாளர், புதிய ரிட்டன் படிவம் அமல்படுத்தப்பட்டால், வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினருக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கம். அதோடு வர்த்தகர்களின் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்த முடியும். இதன் மூலம் வரி வருவாயும் அதிகரிக்கும் என்று கூறினார்.