ஹைதராபாத்: தெலுங்கானாவில் ஜான்சன் அன் ஜான்சன் நிறுவனத்திற்கு சொந்தமான மிகப்பெரிய ஆலை கட்டி முடித்து 3 ஆண்டுகள் கழிந்தும் இன்னும் திறக்கப்படாமல் காலம் தாழ்த்தி வருவதால் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை கிடைப்பது கேள்விக்குறியாகி உள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட செல்லாத நோட்டு அறிவிப்பு மற்றும் 2017ஆம் ஆண்டு ஜூலையில் கொண்டு வரப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை கொண்டுவரப்பட்டதாலும் உற்பத்தி தொடங்குவது தாமதமாகி வருவதாக தெரிகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்சன் அன் ஜான்சன் நிறுவனம் குழந்தைகளுக்கு உபயோகப்படுத்தப்படும் பேபி சோப், ஷாம்பு ஹேர் ஆயில் மற்றும் மருத்துவ உபகரணங்கள் என பல வகையான பொருட்களை உற்பத்தி செய்து உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது. உலகம் முழுவதும் தனது கிளைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே இந்நிறுவனத்திற்கு சொந்தமாக மும்பையில் இரண்டு இடங்களில் தொழிற்சாலைகள் உள்ளன. இதன்மூலம் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் பேபி ஷாம்பு மற்றும் பவுடர் போன்றவற்றை உற்பத்தி செய்து நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது.
இந்நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் சந்தையை விரிவு படுத்தும் விதமாக மூன்றாவது மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய தொழிற்சாலையாக கடந்த 2016ஆம் ஆண்டு வாக்கில் தெலங்கானா மாநிலத்தின் பெஞ்ஜெர்லா (Penjerla) என்ற இடத்தில் 47 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 550 கோடி ரூபாய் முதலீட்டில் கட்டி முடிக்கப்பட்டது. கடந்த 2018ஆம் ஆண்டு வாக்கிலேயே உற்பத்திய தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
இத் தொழிற்சாலையின் உற்பத்தி திறனானது சுமார் 18000 டன்கள் மதிப்புடைய பேபி பவுடர், பேபி ஷாம்பு மற்றும் தோல் பராமரிப்பு பொருட்களை தயாரிக்க முடியும். திட்டமிட்டபடி உற்பத்தியை தொடங்கி இருந்தால் தென் இந்தியாவின் 30 சதவிகித சந்தையை பிடித்து வருவாயை பெருக்கி இருக்க முடியும். அதோடு இந்நிறுவனத்தின் சுற்றுப்புறத்தில் உள்ளவர்களில் சுமார் 1500 பேர்களுக்கு வேலை வாய்ப்பை அளித்திருக்க முடியும்.
இந்நிறுவனத்தின் உற்பத்தி தொடங்காமல் இருப்பதற்கு முக்கியமான காரணங்களாக சொல்லப்படுவது என்னெவெனில், முதலில் உற்பத்தியை தொடங்குவதற்கான தேவை இன்னும் எட்டப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், இந்நிறுவனத்தின் தயாரிப்புகளில் புற்றுநோயை உண்டாக்கும் ஆஸ்பெட்டாஸ் துகள்கள் கலந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்ததை அடுத்து உற்பத்திக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக கடந்த 2016ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட செல்லாத நோட்டு அறிப்பு மற்றும் தொடர்ந்து 2017ஆம் ஆண்டு ஜூலையில் கொண்டுவரப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையால் உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு போன்றவற்றாலும் உற்பத்தி தாமதமாவதாக சொல்லப்படுகிறது.
செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பின்னர் 2016ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் இருந்து நுகர்பொருட்களான ஷாம்பு மற்றும் சோப்பு போன்றவற்றின் விற்பனை சுமார் 20 சதவிகிதம் வரையிலும் குறைந்துவிட்டது குறைந்து விட்டதாக தொழில்துறை வளர்ச்சி பற்றிய புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.
ஜான்சன் அண்டு ஜான்சன் தொழிற்சாலையின் வெளிப்புறத்தில் தேநீர் கடை நடத்தி வரும் சவுக்கத் அலி என்பவர், கடந்த மூன்று ஆண்டுகளாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான வேலையில்லாத தொழிலாளர்கள் வந்து எட்டிப்பார்த்துவிட்டு விசாரிப்பதாகவும், ஆனால் தொழிற்சாலையை தொடங்குவதற்கான எந்தவிதமான அறிகுறிகளும் தெரியவில்லை என்றும் கூறினார்.
தெலங்கானாவின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் சத்யநாராயண ரெட்டி என்பவர், ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் அளித்த அனைத்து ஆவணங்களும் முழுமையாக உள்ளது என்றும் உற்பத்திய தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுவிட்டது என்றும் கூறியதோடு, ஏன் இன்னும் உற்பத்தியை தொடங்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
இம்மாதிரியான மிகப்பெரிய ஆலைகள் ஏன் இன்னும் உற்பத்தியை தொடங்கவில்லை என்பது எங்களுக்கு புதிராக உள்ளது. ஆனாலும் எங்களிடத்தில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்று ஒதுங்கிக்கொண்டார்.
இருந்தாலும் ஜான்சன் அன் ஜான்சன் நிறுவனத்தின் பொருட்களுக்கு தேவை குறைவாக உள்ள காரணத்தினால் தான் உற்பத்தியை இதுவரையிலும் தொடங்க வில்லை என்று சொல்லப்படுகிறது.