டெல்லி: 17ஆவது லோக்சபா தேர்தலில் ஆளும் பாஜக கூட்டிணி அமோகமாக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டதில் பெரும்பாலானவர்களுக்கு மகிழ்ச்சியே. அதே சமயத்தில் புதிய ஆட்சியில் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் சாதாரண மக்களுக்கும் மாதச் சம்பளதாரர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் என்ன செய்யப்போகிறது என்பது தான் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஆளும் பாஜக கூட்டணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்த மாதச் சம்பளதாரர்களுக்கான ஐந்து லட்சம் வரையிலான வரிச்சலுகை திட்டம்தான் அது. அடுத்து தாக்கல் செய்யும் முழுமையான பட்ஜெட்டில் வரிச் சலுகை மேலும் உயர்த்தப்படுமா அல்லது அதே உச்ச வரம்பு தொடருமா என்பது மாதச் சம்பளதாரர்களின் மனதில் எழுந்துள்ள சந்தேகம்.
இடைக்கால பட்ஜெட் தாக்கலின்போது பேட்டியளித்த மத்திய நிதி அமைச்சராக இருந்த பியூஷ் கோயல், இது ட்ரெய்லர் தான், நடுத்தர மக்களும் புதிய நடுத்தர மக்களும் பயன்பெறும் வகையில் இன்னும் கூடுதலான வரிவிலக்கு திட்டங்களை செயல்படுத்த உள்ளோம் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அசுர பலத்துடன் ஆட்சி
நடந்து முடிந்த 17ஆவது லோக்சபா தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆளும் பாஜக கூட்டணியே அபார வெற்றி பெற்றும் அசுர பலத்துடன் மீண்டும் ஆட்சியில் உட்கார்ந்து விட்டது. வாக்களித்த அல்லது வாக்களிக்காமல் போன அனைத்து மக்களின் எதிர்பார்ப்பும், புதிய அரசு தங்களின் எதிர்பார்ப்பை நிறேவேற்றுமா என்பதுதான்.
இந்த வாட்டி கொஞ்சம் அதிகம்
இந்தத் தேர்தல் இரண்டு விஷங்களை நமக்கு தெளிவுபடுத்தி விட்டன. மத்திய அரசின் மீதான நம்பகத்தன்மை குறித்த சந்தேகம் முற்றிலும் நீங்கிவிட்டது. கடந்த 2014ஆம் ஆண்டில் பெற்ற இடங்களைக் காட்டிலும் தற்போது நடந்து முடிந்த தேர்தலில் கூடுதலாக 23 இடங்களுடன் 303 இடங்களைப் பிடித்ததில் இருந்தே இது புலப்பட்டுவிட்டது.
சீர்திருத்த நடவடிக்கை
அடுத்ததாக கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றதால் மக்களுக்கு கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நிதிச்சீர்திருத்தங்களின் மீது முழு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது கண்கூடாக தெரிகிறது. இதன் காரணமாக நிதிச்சீர்திருத்த நடவடிக்கைகள் மேலும் தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும் கூடுதல் சீர்திருத்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பும் மேலோங்கியுள்ளது.
தேவை ஒரே வரி விகிதமுறை
பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமானால் உள்நாட்டு உற்பத்தியை இன்னும் அதிகரிக்க வேண்டும். அதற்கு விவசாயத்துறைக்கும், தொழில்துறைக்கும் கூடுதலான முக்கியத்துவம் அளிக்க முன்வரவேண்டும். அதோடு தற்போதுள்ள அதிகப்படியான ஜிஎஸ்டி வரி விகிதங்களில் மாற்றம் செய்து ஒரே விகித வரி முறையைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படவேண்டியது அவசியம்.
ஆதார் எண் கட்டாயம்
மத்திய அரசு தற்போது ஆதார் எண் பயன்பாட்டை அனைத்து நலத்திட்ட உதவிகளுக்கும் பயன்படுத்துவதை தீவிரப்படுத்தி உள்ளது. வருமான வரி செலுத்துவது, பான் கார்டு இணைப்பு, மொபைல் ஃபோன் இணைப்பு, வங்கிக் கணக்கு துவக்கம், கேஸ் இணைப்பு என அனைத்திற்கும் ஆதார் எண் கட்டாயம் என்று வலியுறுத்தி உள்ளது. உச்ச நீதி மன்றமும் நலத்திட்ட உதவிகளுக்கு ஆதார் கட்டாயம் என்று உத்தரவிட்டுள்ளதால் மத்திய அரசும் ஆதார் எண்ணை அனைத்து திட்டங்களுக்கும் கட்டாயம் என்பதை சட்டமாக்க முன்வரவேண்டும். ஆதார் சட்டத்தை செயல்படுத்த லோக்சபாவில் சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் ராஜ்ய சபாவில் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பழைய வருமான வரிச்சட்டங்கள்
அடுத்தாக கடுமையான வரிச்சீர்திருத்த நடவடிக்கைகைளை மேற்கொள்ள முன்வரவேண்டும். கடந்த 2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பின்னர் அதிகப்படியான வரி மோசடிகள் தடுக்கப்பட்டுவிட்டன. இதை முற்றிலும் களைய வருமான வரி சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவரப்படவேண்டும். தற்போது இருக்கும் வருமான வரிச்சட்டங்கள் அனைத்துமே 50 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
ரொக்க பரிமாற்றம் தடுக்கப்படும்
வருமான வரிச்சட்டங்களில் திருத்தங்கள் கொண்டவரப்படுமானால், அதிகப்படியான ரொக்க நடவடிக்கைகள் தடுக்கப்படுவதோடு மோசடியான ரொக்கப் பரிமாற்றங்களும் ஒடுக்கப்பட்டுவிடும். முறையாக வரி செலுத்துபவர்களுக்கு இன்னும் கூடுதலான வரிச் சலுகைகளை அளிக்க வழிவகை செய்ய வேண்டும். தற்போது வருமான வரி ரிட்டன் படிவங்களில் ரொக்கப்பரிமாற்றங்கள் தொடர்பான விவரங்களையும் பதிவேற்றம் செய்யவேண்டியது கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் பரிவர்த்தனை
வரி மோசடிகள் நடப்பதற்கு அதிகப்படியான ரொக்கப் பரிமாற்றங்களே முக்கிய காரணம் என்பதால் அதைத் தடுக்க இன்னும் கூடுதலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இந்திய கிராமங்கள் அனைத்திலும் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ளம் வகையில் தொழில்நுட்ப வசதியை மேம்படுத்த வேண்டியது அவசியம்.
மாதச் சம்பளதாரர்களின் ஓட்டுதான்
அடுத்ததாக அனைத்து தரப்பு மக்களின் குறிப்பாக மாதச் சம்பளதாரர்களின் வரிச்சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டியது அவசியம். ஆளும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம், அவர்களின் வரிச்சுமையை பெருமளவு குறைத்ததே. வருமான உச்சவரம்பு 2.50 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தியதால் சுமார் 70 சதவிகித மாதச் சம்பளதாரர்கள் அதிக அளவில் பயன்பெறுகின்றனர். எனவே அவர்களின் வரிச்சுமையை குறைத்து, அவர்களில் வருவாயை பெருக்கும் வகையிலும், அதே சமயத்தில் மத்திய அரசுக்கும் வரி வருவாயில் இழப்பு ஏற்படாமல் நிதித் திட்டங்களை கொண்டுவரவேண்டும்.
இது ட்ரெய்லர்தான்
இடைக்கால பட்ஜெட் தாக்கலின்போது பேட்டியளித்த மத்திய நிதி அமைச்சராக இருந்த பியூஷ் கோயல், இது ட்ரெய்லர் தான், நடுத்தர மக்களும் புதிய நடுத்தர மக்களும் பயன்பெறும் வகையில் இன்னும் கூடுதலான வரிவிலக்கு திட்டங்களை செயல்படுத்த உள்ளோம் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே பெரும்பாலான மாதச் சம்பளதாரர்கள் தங்களின் வாக்குகளை ஆளும் பாஜக கூட்டணிக்கு வாக்களித்தனர்.
துள்ளிக்குதித்த பங்குச்சந்தை
மாதச் சம்பளதாரர்களின் வரிச்சுமை குறைந்தால் அவர்களின் சேமிக்கும் திறனும் முதலீடுகளும் அதிகரிக்கும். இந்திய பங்குச் சந்தையும் மோடியின் வெற்றியை வரவேற்றுள்ளது. அதனால் இந்த வார தொடக்கத்திலும் வார இறுதி நாளான நேற்றும் சந்தை அதிக உற்சாகத்தில் துள்ளிக் குதித்தது. மும்பை பங்குச் சந்தை குறியீடான பிஎஸ்இ 40000 புள்ளிகளை தொட்டது. அதே போல் தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டியும் 12000 என்ற மைல்கல்லை எட்டியது.
நிதிக்கொள்கையில் மாற்றம் வேண்டும்
மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியப் பங்குச் சந்தைகள் தான் உலகளாவிய அளவில் அதிக வருமானத்தை கொடுத்துவருகின்றன என்று அனைத்து சந்தை வல்லுநர்களும் உறுதியாக தெரிவிக்கின்றனர். புதிய அரசு இந்த வாய்ப்பை பயன்படுத்தி அந்நிய முதலீட்டாளர்களை மேலும் அதிக அளவில் இந்தியப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு ஏற்றவாறு நிதிக்கொள்கைகளை வகுக்கவேண்டும். அதோடு குறைந்த காலத்திலேயே இந்திய பங்குச் சந்தையில் இருந்து வெளியேறுவதை தடுக்கும் வகையிலும் நிதிக் கொள்கைகளை வகுக்கவேண்டியது அவசியம்.
மேலே சொன்ன அனைத்திற்கும் ஜூன் மாதத்தில் தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட்டில் விடை கிடைக்கும் என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.