டெல்லி: ஜி.எஸ்.டி வரி வசூல் மூலம் மே மாதத்தில் ரூ.1 லட்சத்து 289 கோடி கிடைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை நடைமுறையில் இருந்த வாட் வரி விதிப்பு முறை மாற்றப்பட்டு, ஜி.எஸ்.டி. என்ற சரக்கு மற்றும் சேவை வரி, இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதற்கான மசோதா, 2015-ம் ஆண்டு மே 6-ந் தேதி நாடாளுமன்றத்தில் பெருமளவு எம்.பி.க்களின் ஆதரவுடன் நிறைவேறியது.
அதைத் தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதியில் இருந்து ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, இந்தியா முழுவதிலும் அமலுக்கு வந்தது. இதன் மூலம் ஒரே பொருட்களுக்கு பல்வேறு இடங்களில் வரி விதிக்கப்படும் நிலை மாறியது. மேலும் பொருட்களின் விலையும் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டபோது அரசுக்கு மாத வருவாய் சராசரியாக ரூ.98 ஆயிரத்து 114 கோடியாக இருந்தது. அது மெல்ல மெல்ல அதிகரித்தபடி இருந்தது. 2019-20ம் நிதி ஆண்டுக்கான கணக்கு தொடங்கியதும், முதல் மாதமான ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருந்தது.
இந்தநிலையில், 2019ம் ஆண்டு மே மாதம் ரூ.1,00,289 கோடி ஜி.எஸ்.டி வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய ஜி.எஸ்.டி ரூ.17,811 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.24,642 கோடி வசூலிக்கப்பட்டது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி ரூ.48,891 கோடியும், செஸ் ரூ.8,125 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி. வரி வசூலில் கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 865 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு கிடைத்துள்ளது. ஜி.எஸ்.டி. வரி வசூலில் இது புதிய சாதனையாக கருதப்படுகிறது.
கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் ஜி.எஸ்.டி. வருமானமும் அதிகரித்துள்ளது. விற்பனை கணக்கு விவரங்களை தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 72.13 லட்சமாக உள்ளது.