டெல்லி : வங்கி மோசடிகள் ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், கடந்த 2018 - 2019 ஆண்டில் மட்டும் 6800க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் சுமார் ரூ.71,500 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
இதுவே கடந்த 2017 - 2018ல் மட்டும் 5,916 வழக்குகள் பதிவாகியுள்ளனவாம். இதன் மூலம் சுமார் ரூ41,167 மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் ஆ.பி.ஐ அறிவித்துள்ளது.
இது குறித்து பி.டி.ஐ செய்தியாளர் தகவல் உரிமை அறியும் சட்டத்தில் கேட்டிருந்தபோது, இதுவரை 6,801 மோசடிகள் நடந்திருப்பதாகவும், இதன் மூலம் ரூ.71,542.93 கோடி பணம் மோசடி செய்யப்பட்டிருப்பதாகவும், இது முந்தைய ஆண்டை காட்டிலும் 73% அதிகம் எனவும் அந்த குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளதாம்.
அதிலும் கடந்த 11 நிதியாண்டுகளாக இதுவரை மொத்தம் 53,334 வழக்குகள் தொடரப் பட்டிருப்பதாகவும், இதன் மூலம் ரூ.2.05 லட்சம் கோடி நஷ்டம் அடைந்திருப்பதாகவும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
குறிப்பாக கடந்த 2008 - 2009ம் நிதியாண்டில் 4,372 வழக்குகள் தொடரப் பட்டிருப்பதாகவும், இதன் மூலம் ரூ.1,860.09 கோடி மோசடி நடந்துள்ளதாகவும், இது 2009 - 2010ல் 4,669 வழக்குகள் மூலம் ரூ.1,998.94 கோடி மோசடி செய்யப்பட்டிருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதுவே கடந்த 2010 - 2011ல் 4,534 வழக்குகளும், 2011 - 2012ல் 4,093 வழக்குகளும், இதன் மூலம் முறையே ரூ.3,815 கோடி மற்றும் ரூ.4,501 கோடியும் மோசடி செய்யப்பட்டுள்ளதாம்.
இதுவே 2012 - 2013 நிதியாண்டில் 4,235 மோசடி வழக்குகளும், இதன் மூலம் ரூ.8,590.86 கோடி மோசடியும், இது கடந்த 2013 - 2014ல் 4,306 வழக்குகளும், இதன் மூலம் ரூ10,170.81 கோடியும் மோசடி செய்யப்படுள்ளதாம். குறிப்பாக கடந்த 2014 - 2015ல் வழக்குகள் எண்ணிக்கை 4,639 ஆக இருந்தாலும், அதன் மூலம் ரூ.19,455.07 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதே தொடர்ந்து 2015 - 2016 மற்றும் 2016 - 2017ல் முறையே வழக்குகள் 4,693 மற்றும் 5,076 ஆக இருந்தாலும், இதன் மூலம் மோசடி செய்யப்பட்ட தொகையின் அளவு மிகப்பெரியதே. ஆமாப்பு முறையே ரூ.18,698.82 கோடியும், ரூ.23,933.85 கோடியும் மோசடி செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து ரிசர்வ் வங்கி கூறுகையில், இவ்வாறு மோசடி செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கைள் எடுக்கப்பட்டிருந்தாலும், அதற்கான சரியான பதில் இன்னும் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளது.
குறிப்பாக வைர வியாபாரியான நீரவ் மோடி மற்றும் மது வியாபாரி விஜய் மல்லையா உள்ளிட்டோரும் இந்த மோசடி வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பெரிய அளவில் இது போன்ற மோசடி வழக்குகளில் உள்ள முதல் 100 இடங்களை கொண்ட மோசடியாளர்களை பற்றிய அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளதாம்.
அதோடு இந்த டாப் மோசாடியாளர்களை 13 வகையில் பிரித்துள்ளனராம். குறிப்பாக ஜெம் அன்ட் ஜீவல்லரி, உற்பத்தி மற்றும் தொழில்துறை, விவசாயம், மீடியா, விமான துறை, தள்ளுபடி மற்றும் காசோலை தள்ளுபடி, தகவல் தொழில் நுட்பம், வர்த்தகம், ஏற்றுமதி வணிகம், நிலையான வைப்பு கோரிக்கை உள்ளிட்ட சில வற்றை அடிப்படையாக கொண்டு தான் பிரித்துள்ளனராம், அதோடு தொடர்ந்து Central Vigilance Commission மூலம் கண்கானிக்கப்பட்டும் வருகின்றனராம். எப்படியோ கடன் வசூலான சரி தான்.