டெல்லி : ஒரு புறம் அதிகரித்து வரும் பொருளாதார பிரச்சனையை சமாளிக்க மோடி 2.0 அரசு பல புதிய திட்டங்களை வகுத்து வந்தாலும், மறுபுறம் வங்கிகளின் வாராக்கடன் பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய முத்ரா திட்டத்திலும் வாராக்கடன் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் மோடியின் வணிக திட்டமான பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட கடன்களில் பலர் சரியாக திரும்ப செலுத்தாதால் வாராக்கடன் அதிகரித்துள்ளதாம். ஆமாங்க.. இதுவரை வழங்கப்பட்ட கடனில் 126 சதவிகிதம் வாராக்கடன் அதிகரித்துள்ளதாம்.
மோடியின் கனவு திட்டத்திற்கு இப்படி ஒரு நிலையா? சிறு குறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் திட்டங்களை மேம்படுத்துவதற்காக பிரதமர் மோடியால் கடந்த 2015 - 2016 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட ஒரு நல்ல திட்டமே இந்த பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம்.
வாராக்கடன் அதிகரிப்பு?
முக்கியமாக பொதுத்துறை வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளால் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தால், பாதிக்கப்பட்டதும் இந்த வங்கிகளே. பிரதமர் மோடியின் இந்த வணிக திட்டத்தால் லட்சக் கணக்கானோர் பலன் பெற்றிருந்தாலும், மறுபுறம் வாராக்கடனும் மிக அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த 2019ம் நிதியாண்டில் மட்டும் 9204.14 கோடி ரூபாயாக வாராக்கடன் அதிகரித்துள்ளது.
வாராக்கடன் கடந்த ஆண்டை காட்டிலும் உயர்வு?
கடந்த 2018ம் நிதியாண்டை காட்டிலும், முத்ரா வாராக்கடன் 2019ம் நிதியாண்டில் 9,204.14 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாம். இதுவே கடந்த 2018ம் நிதியாண்டில் 7,277.31 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதோடு கடந்த மார்ச் 31 நிலவரப்படி, மொத்த வாராக்கடனின் மதிப்பு 16,481.45 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த திட்டம் ஆரம்பித்ததோ 2015 - 2016ம் ஆண்டில் என்பது குறிப்பிடத்தக்கது.
எத்தனை கணக்குகள்?
எனினும் மொத்தமாக கொடுக்கப்பட்டுள்ள முத்ரா கடனுடன் ஒப்பிடும்போது, இந்த வாராக்கடன் குறைவுதான் என்றும் கூறப்பட்டுள்ளது. எனினும் தொடர்ந்து அதிகரித்து வருகிறதாம் இந்த வாராக்கடன். அதோடு இதுவரை மொத்தம் இதுவரை 30.57 லட்சம் கணக்குகள் NPAக்களாக அறிவிக்கப்பட்டுள்ளனவாம்.
கடந்த ஆண்டில் எவ்வளவு முத்ரா கடன்?
கடந்த ஏப்ரல் 1, 2018 முதல் மார்ச் 31, 2019 வரையிலான காலத்தில் மட்டும், மொத்தம் 3.11 லட்சம் கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் வாராக்கடன் மதிப்பு 2.89 சதவிகிதம் என்றும் கூறப்படுகிறது.