டெல்லி: இந்தியாவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்திய கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் அது சார்ந்த இடங்களையும் பார்வையிட வெளிநாட்டினருக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம். அந்த வகையில் இந்திய கலாச்சாரத்தின் குறியீடாக திகழும் இடங்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்து வருகிறது.
இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் எழுப்பப் பட்ட இந்த கேள்விக்கு மத்திய சுற்றுலாத் துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் படேல், எழுத்துபூர்வமாக பதிலளித்தார். அதில், கடந்த ஆண்டில் இந்தியாவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் வருகை முந்தைய ஆண்டுகளை விட அதிகமாக இருந்ததாக தெரிவித்தார்.
ரூ.1.94 லட்சம் கோடி வருவாய்
2018ஆம் ஆண்டில் மொத்தம் 1.05 கோடி பேர் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குச் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டதாகத் தெரிவித்தார். இது 2017ஆம் ஆண்டு வருகையை விட 5.2 சதவிகிதம் அதிகமாகும். 2018ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை வாயிலாக அரசுக்கு அந்நியச் செலாவணியில் ரூ.1.94 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது.
8.36 லட்சமாக அதிகரிப்பு
இதுவே கடந்த 2017 ம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரை மொத்தம் 56.74 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வந்துள்ளனர். மொத்தமாக 1 கோடிப் பேர் இந்தியாவுக்குச் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் அவர்கள் வாயிலாக அரசுக்கு ரூ.1.77 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இ-விசா மூலம் வருகை தந்தவர்களின் எண்ணிக்கையும் 5.40 லட்சத்தில் இருந்து 8.36 லட்சமாக அதிகரித்துள்ளது.
இ-விசா மூலம் இந்தியா வருகை
பிரிட்டனில் இருந்து அதிகமானவர்கள் இ-விசா மூலம் இந்தியா வந்துள்ளனர். அடுத்ததாக அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ், ஓமன், சீனா ஆகிய நாடுகளில் இருந்து அதிகமானவர்கள் இ-விசா மூலம் இந்தியா வந்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நிதியுதவி
சுற்றுலாப் பயணிகளின் வருகை குறித்து அமைச்சர் அளித்த பதிலில் "ஸ்வதேசி தர்ஷன் மற்றும் பிரசாத் திட்டங்கள் வாயிலாகச் சுற்றுலாத் துறையின் உள்கட்டுமான வசதிகளை மேம்படுத்த அரசு தரப்பிலிருந்து நிதியுதவி வழங்கப்படுகிறது என்றும் நாலந்தா மற்றும் புத்தகயா ஆகிய இரண்டு பகுதிகளும் ஸ்வதேசி தர்ஷன் திட்டத்தில் புத்தமதப் பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. நாட்டின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் பிகார் மாநிலத்தில் உள்ள மகாபோதி கோயில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.