டெல்லி : இந்தியாவில் முன்பு இருந்த பல விதமான வரிக் கொள்கையை மாற்றி கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி ஜி.எஸ்.டி (GST) அமலுக்கு வந்தது. இந்த நிலையில் இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் ஜி.எஸ்.டி வரி கணக்கு தாக்கலை இன்னும் எளிமைப்படுத்துவோம் என்றும் மத்திய நிதியமைச்சர் சீதாராமன் கூறியுள்ளார்.
17க்கும் மேற்பட்ட வரிகளை ஒருங்கிணைத்து சரக்கு மற்றும் சேவைகளை வரியான ஜி.எஸ்.டி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்யும் செயல்பாட்டு முறையை இன்னும் எளிமைப்படுத்த நாங்கள் உறுதி கொண்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.
பல நாடுகள் எச்சரிக்கை?
அதோடு ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்தபோது, மத்திய நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி, இதே நேரத்தில் தனது ‘பேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்துவது அரசியல் ரீதியாக பாதுகாப்பானது அல்ல, ஜி.எஸ்.டி.யால் பல்வேறு நாடுகளில் அரசுகள் தோற்றுப் போய்விட்டன என்று பலரும் எங்களை எச்சரித்தனர். ஆனால் ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட சில வாரங்களிலேயே ஜி.எஸ்.டி ஏற்கப்பட்டது. இதோடு ஏற்கனவே 20 மாநிலங்கள், தங்களின் வருவாயில் 14 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக கருத்துகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புகையிலை பொருட்கள் உபயோகம் குறைந்துவிட்டது!
தற்போது ஜி.எஸ்.டி.யானது 5 சதவிகிதம், 12 சதவிகிதம், 18 சதவிகிதம், 28 சதவிகிதம் என 4 அடுக்குகள் கொண்டதாக உள்ளது. குறிப்பாக இதில் 28 சதவிகிதம் என்பது, ஆடம்பர பொருட்கள், புகையிலை பொருட்கள் போன்றவற்றுக்கு அதிகபட்ச வரி விதிக்கப்படுவதால், அது ஏறக்குறைய இந்த மாதிரியான பொருட்கள் உபயோகம் குறைந்து விட்டதாகவே கூறலாம்.
வருவாய் இழப்பு?
அதே சமயம் சாதாரண மக்கள் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்கள், 5 சதவிகித வரிவிதிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால், கடந்த 2 ஆண்டுகளில் சுமார் ரூ.90 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருந்தாலும், மறுபுறம் அதிகம்பேர் வரி செலுத்துவதால், வரி வருவாய் உயர்ந்துள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.
மாற்றம் இருக்கலாம்?
இதனால் கொள்கை முடிவு எடுப்பவர்கள், 12 சதவிகிதம் மற்றும் 18 சதவிகிதம் என 2 அடுக்குகளையும் ஒருங்கிணைத்து ஒன்றாக்கி விட வாய்ப்புள்ளது. அதன் பிறகு அந்த ஒன்றுபட்ட வரி விகிதம், ஏற்கனவே உள்ள 5 சதவிகிதம் என 2 அடுக்குகள் மட்டுமே கொண்டதாக ஜி.எஸ்.டி விகிதம் இருக்கலாம் என்றும் அருன் ஜெட்லி கூறியுள்ளார்.
வரி அதிகரிப்பை தடுத்துள்ளது?
இந்த ஜி.எஸ்.டி வரி அமலுக்கு முன்பு, பணக்காரர்களும், ஏழைகளும் அனைத்து பொருட்களுக்கும் ஒரே வரியை செலுத்தினர். ஆனால் ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தப்பட்ட பின்னரே, சாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு அதிகமாக வரி போடுவது தடுக்கப்பட்டுள்ளது என்றும் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
மொத்த வரி?
முன்னர், ஒரு பேஸ்புக் பதிவில், ஜி.எஸ்.டியின் கீழ் வரி செலுத்துவோர் என்ணிக்கை 8.4 சதவிகிதம் அதிகரித்து 1.2 கோடியாக அதிகரித்துள்ளது. அதோடு 2017 - 2018 ஜூலை முதல் மார்ச் வரையிலான எட்டு மாதங்களில் சேகரிக்கப்பட்ட சராசரி வருவாய் மாதத்திற்கு 89,700 கோடி ரூபாயாக உள்ளது. இதுவே 2018 - 2019ம் ஆண்டில் சராசரியாக சுமார் 10 சதவிகிதம் அதிகரித்து 97,100 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.