புனே : இந்தியாவில் கடனை வாங்கிவிட்டு, அடுத்த நாடுகளில் தஞ்சம் புகுவது பேஷனகி போன நிலையில், ஒவ்வொரு கடனாளிகளும் இப்படி நாட்டை விட்டு வெளியே ஓடி போனால் வங்கிகள் தான் என்ன ஆவது? வாங்கிய கடன் தொகை தான் என்ன ஆவது?
அதிலும் இந்தியாவில் தற்போது இது மிகப் பெரிய பிரச்சனையாகவே உள்ளது. முதலில் விஜய் மல்லையா இதே போல கடனை வாங்கி விட்டு லண்டனுக்கு ஓடிச் சென்றார். இரண்டவதாக நிரவ் மோடி என இப்படி இந்த லிஸ்டுகள் நீண்டு கொண்டே போகின்றது.
எனினும் இதற்கெல்லாம் பாடம் கற்றுக் கொடுக்கும் வகையில் கடன் வசூல் தீர்ப்பாயம் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
என்ன தொழில்?
மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும் (வயது 48), அவரது கூட்டாளியான மொகுல் சோக்ஷியும் சேர்ந்து, மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலமாக வெளிநாட்டினர் பலருக்கு சட்ட விரோதமாக கிட்டத்தட்ட 13,400 கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றசாட்டு எழுந்தது. இந்த நிலையில் இந்த பிரச்சனை வெளியே தெரியும் முன்பே லண்டனுக்கு தப்பி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு கடத்த திட்டம்?
நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மொகுல் சோக்ஷி மீதும், சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் தனித் தனியே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த மோசடி அம்பலமாகும் முன்பே நிரவ் மோடி இங்கிலாந்துக்கு தப்பி ஓடி விட்டார். இந்த நிலையில் தான், நிரவ் மோடியை நாடு கடத்தி இந்தியா கொண்டு வர மத்திய அரசு ஒரு புறம் நடவடிக்கையும் எடுத்து வந்தது.
ரூ.7200 கோடி கடன்?
அவருடைய நெருங்கிய உறவினரான மொகுல் சோக்சி ஆன்டிகுவா பார்புடா நாட்டின் குடியுரிமை பெற்றுள்ளதால் அங்கு உள்ளார். அவரையும் இந்தியா கொண்டு வர தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டும் வருகிறது. இந்த நிலையில் நிரவ் மோடியும், அவரது கூட்டாளிகளும் மோசடி செய்ததில், ரூ.7,200 கோடியை வட்டியுடன் வசூலிக்க பஞ்சாப் நேஷனல் வங்கி, மும்பை கடன் வசூல் தீர்ப்பாயத்தில் முறையிட்டது.
கடனை கட்டுறியா இல்லையா?
மும்பை கடன் வசூல் தீர்ப்பாயத்தின் கூடுதல் பொறுப்பை வகிக்கும் புனே கடன் வசூல் தீர்ப்பாயத்தின் தலைவர் தீபக் தக்கார், இந்த வழக்கை விசாரித்து 2 அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இதில் நிரவ் மோடியும், அவரது கூட்டாளியுமான மொகுல் சோக்சியும் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ. 7029,06,87,950.65 கூட்டாகவோ அல்லது தனித்தனியாக சேர்ந்து செலுத்த வேண்டும்; மேலும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 30-ந் தேதி முதல் ஆண்டுக்கு 14.30 சதவிகிதம் வட்டியையும் சேர்த்து செலுத்த வேண்டும் என்று கடன் வசூல் தீர்ப்பாயத்தின் தலைவர் தீபக் தக்கார் கூறினார்.
இதையும் சேர்த்துக் கட்டு?
இது மட்டுமல்லாமல், மற்றொரு தீர்ப்பில் நிரவ் மோடியும், அவரது கூட்டாளிகளும் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ. 232,15,92,636 ஐ, 2018 ஜூலை மாதம் 27-ந் தேதி முதல் 16.20 சதவிகித வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என கூறியுள்ளது. அது மட்டும் அல்லாமல் இந்த தொகைகளை வசூலிப்பதற்கான நடவடிக்கையை கடன் வசூல் தீர்ப்பாயத்தின் அதிகாரிகள் மேற்கொள்வார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.