டெல்லி: இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதை நான் நன்கு கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இருந்தாலும் அந்த சரிவுகள் என்னை பாதிக்காதவாறு கவனமுடன் இ,ருக்கிறேன் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் ஜிலை 4ஆம் தேதி வரையிலும் தொடர்ச்சியாக சிறிய அளவில் ஏற்றம் கண்டு வந்த இந்திய பங்குச் சந்தைகள், வார இறுதி நாளான கடந்த வெள்ளிக்கிழமையன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யத் ஆரம்பித்த உடன் மளமளவென சரியத் தொடங்கி மூன்று நாட்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது.
கடந்த 2018ஆம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் இந்திய பங்குச் சந்தைகள் அதிக அளவில் இறக்கத்துடன் வர்த்தகமாகின. அந்த மாதத்தில் சுமார் 5 சதவிகிதம் வரையில் சந்தைகள் இறக்கத்தை சந்தித்தன. அதன் பின்னர் சந்தைகள் தொடர்ந்து பெரிய அளவில் ஏறி இறங்காமல் பக்கவாட்டிலேயே வர்த்தகமாகி வந்தன. இதற்கு முக்கிய காரணம், இந்திய பங்குச் சந்தைகள் லோக்சபா தேர்தலை எதிர்நோக்கி இருந்ததுதான்.
பின்னர், கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் லோக்சபா தேர்தல் பற்றிய கருத்துக்கணிப்புகள் அனைத்துமே சொல்லிவைத்தது போல மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே முந்தைய தேர்தலைக் காட்டிலும் கூடுதல் இடங்களில் வெற்றிபெற்று அசுர பலத்துடன் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் என்று சத்தியம் செய்தன.
தேர்தல் கருத்துக் கணிப்புகள் வெளிவந்ததை அடுத்து இந்திய பங்குச்சந்தைகள் மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்தன. மார்ச் மாதத்தில் இருந்து சிறிது சிறதாக ஏற்றம் காண ஆரம்பித்த சந்தைகள் லோக்சபா தேர்தல் காலங்களிலும் தொடர்ந்து ஏற ஆரம்பித்து மே மாத இறுதி வாக்கில் உச்சம் தொட்டு, பின்னர் ஜூன் மாதம் முழுவதும் சற்று ஓய்வு எடுத்தன.
பின்னர் சந்தைகள் நடப்பு ஜூலை 1ஆம் தேதி சற்று சோம்பல் முறித்துக்கொண்டு மெல்ல எழ ஆரம்பித்து கடந்த வியாழக்கிழமை வரையிலும் ஏறுமுகமாகவே இருந்தன. ஆனால் வார இறுதி நாளான வெள்ளிக்கிழமையன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு 2019-20ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யத் தொடங்கிய உடனே சந்தைகள் மளமளவென சரிய ஆரம்பித்தன.
வெள்ளிக்கிழமையன்று விழ ஆரம்பித்த இந்திய பங்குச்சந்தைகள் திங்கள் கிழமை வரையிலும் தொடர்ந்தது. கடந்த வியாழனன்று வர்த்தக நாளின் முடிவில் தேசிய பங்குச்சந்தைக் குறியீடான நிஃப்டி 11,946.75 புள்ளிகளிலும், மும்பை பங்குச்சந்தைக் குறியீடான பிஎஸ்இ 39,908.06 புள்ளிகளிலும் நிலைபெற்ற இருந்தன. பட்ஜெட் தாக்கல் செய்த வெள்ளிக்கிழமையன்று தொடங்கி திங்கள் வரையிலும் நிஃப்டி குறியீடு சுமார் 390 புள்ளிகளும் பிஎஸ்இ குறியீடு 117 புள்ளிகளும் அதாவது 3 சதவிகிதம் சரிவை சந்தித்தன.
கடந்த 3 நாட்களாக சரிந்த சந்தையில் அதிகம் பாதிப்புக்குள்ளானது பொதுத்துறை நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் துறை, ஆட்டோ, கட்டமைப்புத் தறை, வங்கித் துறை மற்றும் எரிசக்தி போன்ற முக்கிய துறைகளின் பங்குகள் எல்லாமே கடும் சரிவை சந்தித்தன. அதோடு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை முதலீட்டாளர்களின் கையை விட்டு போனது.
பட்ஜெட் தாக்கல் எதிரொலியின் காரணமாகவே முதலீட்டாளர்கள் பெருமளவில் இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து தங்கள் முதலீடுகளை விற்றுவிட்டு வெளியேறி வருகின்றனர். இது பற்று கருத்து தெரிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நானும் இந்திய பங்குச் சந்தையின் சரிவை கவனித்துக் கொண்டுதான் வருகிறேன், அதன் போக்கையும் தினசரி கவனித்து வருகிறேன். இருந்தாலும் அவை என்னை பெரிய அளவில் பாதிக்காத வண்ணம் இருந்து வருகிறேன் என்று தெரிவித்தார்.