டெல்லி: பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் நீடித்துவருவதால், அதில் சில மாற்றங்களை செய்து, பயிர்களுக்கு காப்பீடு செய்வதை விவசாயிகளின் விருப்பத்திற்கே விடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. எதிர்பாராமல் பெய்யும் அதிக மழைப்பொழிவு, அதிக வறட்சி மற்றும் இயற்கை சீற்றங்களின் காரணமாக ஏற்படும் இழப்பீடுகளுக்கு, அந்தத் திட்டத்தின் மூலமே விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய காப்பீட்டுத் தொகையை மத்திய மாநில அரசுகள் வழங்கி வந்தன.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக வழக்கமாக பெய்யும் பருவ மழையின் சுழற்சியானது ஆண்டுக்கு ஆண்டு மாறிக்கொண்டே வருகிறது. ஜூன் மாத முதல் வாரத்தில் துவங்க வேண்டிய தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் மாதத்தில் பெய்யும் வடகிழக்கு பருவமழையும் ஆண்டு தோறும் ஏமாற்றிக்கொண்டே வருகிறது வாடிக்கையான நிகழ்வாகி விட்டது.
இதனால் குறித்த நேரத்தில் ஆரம்பிக்க வேண்டிய உழவுப் பணிகள் தொடங்கி, வயலில் சாகுபடி செய்த பயிர்களை அறுவடை செய்யும் வரை அனைத்து பணிகள் சுழற்சியும் மாறுபடுகிறது. ஒரு விவசாயி தன்னுடைய வயலில் சாகுபடி பணிகளை தொடங்கிய பின்னர், எதிர்பார்க்கும் மழை பெய்யாமல் போனாலோ அல்லது அதிக அளவு மழை பொழிவு இருந்தாலோ விதைப்பு மற்றும் நடவுப் பணிகளை தொடர முடியாமல் போகும்.
விவசாயிகளுக்கு ஏற்படும் இந்த எதிர்பாராத இழப்புகளை சரிசெய்வதற்காக மத்திய மாநில அரசுகள் இணைந்து வேளாண் காப்பீட்டும் திட்டத்தை செயல்படுத்தி வந்தது. இத்திட்டத்தின் மூலமே விவசாயிகளுக்கான இழப்பீடுகள் அனைத்தும் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் இந்தத் திட்டத்தில் விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைப்பதில் கால தாமதம் ஏற்படுவதை உணர்ந்த மத்திய அரசு இத்திட்டத்தில் மாற்றம் செய்ய முடிவெடுத்தது.
இதன்படி கடந்த 2016ஆம் ஆண்டு தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் சற்று மேம்படுத்தப்பட்டு பிரதான் மந்திர் ஃபசல் பீமா யோஜனா (Pradhan Mantri Fasal Bima Yojana-PMFBY) என்னும் பயிர் காப்பீட்டு திட்டமாக மாற்றியமைக்கப்பட்டது.
இத் திட்டத்தின் கீழ் எதிர்பாராமல் ஏற்படும் அதிக மழைப்பொழிவு அல்லது அதிக வறட்சி மற்றும் இயற்கை சீற்றங்கள் காரணமாக வயலில் சாகுபடி பணிகள் தொடங்கி அறுவடை முடியும் வரையிலும் ஏற்படும் அனைத்து இழப்பீடுகளுக்கும் காப்பீடு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி, எதிர்பாராமல் ஏற்படும் புயல் மழை, வெள்ளம் மற்றும் இயற்கை சீற்றங்களினால் பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டதை அறிந்த 48 மணி நேரத்திற்குள் பயிர காப்பீட்டு அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். மகசூல் பாதிப்பு 50 சதவிகிதத்திற்கு மேற்பட்டு இருக்குமானால் உடனடியாக 25 சதவிகித காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். பின்னர் இழப்பீடு பற்றி துல்லியமாக மதிப்பீடு செய்த பின்பு மீதி இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.
ஆனால் இத்திட்டத்தில் அதிக குளறுபடிகள் இருந்ததால் பெரும்பாலான விவசாயிகள் இதை ஏற்க முன்வரவில்லை. குறிப்பாக காரிப் பருவ பயிர்களுக்கான காப்பீட்டு பிரீமியத் தொகை 2 சதவிகிம், ராபி பயர்கள் எனப்படும் குறுவை சாகுபடி பயிர்களான பருத்தி மற்றும் பூ வகைப் பயிர்களுக்கு 5 சதவிகிதமும் விதிக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த விவசாயிகள், காப்பீட்டு திட்டத்தை நாடு முழுவதும் கட்டாயமாக்கும் போது பிரீமியத்தில் மட்டும் ஏன் இந்த முரண்பாடுகள் என்று விவசாயிகள் பின்வாங்கினர்.
விவசாயிகள் சொல்வதில் இருக்கும் ஏற்றத்தாழ்வு முரண்பாடுகளை உணர்ந்த மத்திய அரசு அவற்றை நீக்கிவிட்டு பல்வேறு மாற்றங்கள் செய்ய முன்வந்தது. அதன்படி, விவசாயிகள் பயிர்களுக்கு காப்பீடு செய்வதை அவரவர் விருப்பத்திற்கு விட்டுவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதோடு, மாநிலங்களுக்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டு விவசாயிகளின் தேவைக்கேற்ப பயிர்காப்பீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்த அனுமதி வழங்குவது உள்ளிட்ட மாற்றங்களையும் செய்ய மத்திய அரசு முன்வந்துள்ளது.
குறிப்பாக பயிர்களுக்கான இழப்பீட்டை மதிப்பிடுவது மற்றும் இழப்பீடு வழங்குவது ஆகியவற்றில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதன் மூலம் துல்லியமான இழப்பீடு வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.