மும்பை: Yes Bank நிறுவனத்தின் முன்னாள் முதன்மைச் செயல் அதிகாரி (CEO) ரானா கபூரின் சொத்து மதிப்பு கடந்த ஒரு வருட காலத்தில் சரியாக 7,000 கோடி ரூபாய் சரிந்திருக்கிறதாம். கடந்த ஆகஸ்ட் 2018-ல் ரானா கபூரின் சொத்து மதிப்பு 1.4 பில்லியன் டாலராக (9,800 கோடி ரூபாயாக) இருந்தது. ஆனால் இன்று அதே ரானா கபூரின் சொத்து மதிப்பு வெறும் 2,800 கோடி ரூபாயாக சரிந்திருக்கிறதாம்.
இதற்கு முதல் காரணம் Yes Bank நிறுவன பங்குகளின் விலை சரிவு என்கிறார்கள் அனலிஸ்டுகள். ரானா கபூர் ஒரு குறிப்பிட்ட சதவிகித Yes Bank பங்குகளை தன் வசமே வைத்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது. கடந்த ஆகஸ்ட் 2018-ல் Yes Bank நிறுவன பங்குகளின் விலை 404 ரூபாய் என்கிற புதிய உச்சத்தைத் தொட்டு வர்த்தகமானது. ஆனால் இன்று தன் 52 வார கால சரிவு விலையான 82 ரூபாயில் வர்த்தகமாகி வருகிறது. ஆக கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இந்த Yes Bank பங்கின் விலை சுமார் 320 ரூபாய் சரிந்திருக்கிறது.
அதோடு Yes Bank நிறுவனத்துக்கு தேவையான முதல் (Capital) கிடைப்பதில் இருக்கும் சிக்கலும் ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறதாம். மறு பக்கம் வாராக் கடன்களும் அதிகரித்துக் கொண்டே வருகிறதாம். Yes Bank நிறுவனத்தின், ஜூன் 2019 காலாண்டு முடிவுகள் படி தோராய வாராக் கடன் (Gross NPA)அளவு 5.1% ஆக அதிகரித்திருக்கிறதாம். அதே போல நிகர வாராக் கடன்களின் (Net NPA) அளவு ஜூன் 2019 காலாண்டுக்கு 2.91 % ஆக அதிகரித்திருக்கிறதாம்.
இதெல்லாம் போக Yes Bank நிறுவனத்தின் ஜூன் 2019-க்கான நிகர லாபம் வெறும் 113.76 கோடி ரூபாயாக தேங்கி நிற்கிறதாம். கடந்த ஜூன் 2018 காலாண்டில் இதே Yes Bank-ன் நிகர லாபம் சுமார் 1,260 கோடி ரூபாயாக இருந்ததாம். ஆக நிகர லாபத்தில் சரிவை மட்டும் கணக்கிட்டால் சுமார் 90 சதவிகிதம் சரிந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.
yes bank நிறுவனத்தில் ஏற்பட்ட நட்டம், இந்தியாவிலேயே அதிவேகமாக தன் சொத்துக்களை அதிகரித்துக் கொண்டிருந்த வங்கி என்கிற நல்ல பெயர் பறி போனது, Yes Bank-ஐ வழி நடத்தும் புதிய தலைமை, வங்கிக்கு தேவையான முதலீடு இல்லாமல் இருப்பது, தொடர்ந்து பங்கு விலை சரிந்து கொண்டிருப்பது என பல பிரச்சனைகள் நம் ரானா கபூரின் சொத்து மதிப்பை சரித்திருப்பதாகச் சொல்கிறார்கள் அனலிஸ்டுகள்.