மும்பை : இந்திய பங்கு சந்தைகள் இன்று ரிசர்வ் வங்கியின் ரெபோ ரேட் விகிதம் எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பிலேயே, காலை ஏற்ற இறக்கம் கண்டு, பெரிய அளவில் மாற்றம் இல்லாமல், இறுதியில் வீழ்ச்சியுடனேயே முடிவடைந்தது.
குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 286 புள்ளிகள் குறைந்து 36,690 ஆக முடிவடைந்தது. இதுவே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 92 புள்ளிகள் குறைந்து 10,855 ஆக முடிவடைந்தது.
மேலும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வர்த்தகத்தின் இடையில் சற்று ஏற்றம் கண்டிருந்தாலும், தற்போது 70.88 ரூபாயாக வீழ்ச்சியடைந்தே காணப்படுகிறது.
இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக, ரிசர்வ் வங்கி, ரெபோ விகிதத்தை குறைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 35 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது. இந்த வட்டி விகிதம் 5.75 சதவிகிதமாக இருந்தது தற்போது 5.4 சதவிகிதமாக குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மந்த நிலையில் இருக்கும் இந்திய பொருளாதாரத்தை சீரமைக்க இது பெரிதும் உதவும் என்றும், இதனால் முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வட்டி விகித குறைப்பு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் மொத்த உள் நாட்டு உற்பத்தி வளர்ச்சியும் 6.9 சதவிகிதமாக குறையும் என்றும் மதிப்பிட்டுள்ளது ரிசர்வ் வங்கியின் இந்த மையக்குழு. இது முன்னர் 7 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்திய பங்கு சந்தைகள் சரிவிலேயே முடிவடைந்தது.
இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, வங்கிகள் விரைவில் தங்களது முக்கிய கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை குறைத்து அறிவிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிலும் வீட்டுக் கடன், வாகன கடன் வாங்கியவர்களின் மாதத் தவணை குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் நிஃப்டி குறியீட்டில் உள்ள ஜூ எண்டர்டெய்ன்ட்மென்ட், யெஸ் பேங்க், சிப்லா, ஹீரோ மோட்டோ கார்ப், ஹிந்துஸ்தான் யுனிலீவர் உள்ளிட்ட பங்குகள் டாப் கெய்னராகவும், இதுவே இந்தியா புல்ஸ், எம் & எம், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், பி.பிசி.எல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்பட்டன.
இதுவே சென்செக்ஸ் குறியீட்டில் ஹெச்.யு.எல், யெஸ் பேங்க்,ஹூரோ மோட்டோ கார்ப், சன் பார்மா, இந்தஸ்இண்ட் பேங்க் டாப் கெயினராகவும், இதுவே எம்&எம், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், எஸ்.பி.ஐ, வேதாந்தா டாப் லூசர்களாகவும் காணப்பட்டன.