சென்னை : ஒரு வாராத்தில் மட்டும் கிட்டதட்ட தங்கத்தின் விலை 1,900 ரூபாய் அதிகரித்துள்ளது. அதிலும் இன்னும் சில நாட்களில் 30,000 தொடலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தமே இதற்கு முக்கிய காரணமாக இருந்தாலும், இந்தியாவில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து சரிவையே கண்டுகொண்டிருக்கிறது.
ஏற்கனவே எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதை போல, இதனால் இந்தியாவில் தற்போது மிக வேகமாக தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வருகிறது. இதோடு கச்சா எண்ணெய் விலையும் ஒரு வகையில் தங்கத்தின் விலை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.
தங்கத்தின் விலை தொடர் அதிகரிப்பு
இம்மாத தொடக்கத்திலிருந்தே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில் தற்போது வரலாறு காணாத அளவில் உச்சம் கண்டுள்ளது. இதன் காரணமாக 22 காரட் தங்கத்தின் விலை 8 கிராமுக்கு சுமார் 28,352 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் சர்வதேச சந்தைகளின் போக்கினால், தங்கம் விலை தொடர்ந்து உயரும் என்றும் நகை கடை வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது. அதோடு அமெரிக்கா சீனா பிரச்சனை இப்போதைக்கு முடிவு ஏற்பட போவதாக இல்லை. ஆக சர்வதேச அளவில் சந்தைகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் பட்சத்தில், இந்தியாவில் தங்கம் விலை பவுனுக்கு 30,000 ரூபாய் வரை கூட செல்ல வாய்ப்புள்ளது என்று கூறுகின்றனர். இதே போல் தான் வெள்ளி விலையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் ஒரு கிலோவுக்கு சுமார் 1,100 ரூபாயும் அதிகரித்துள்ளது.
சர்வதேச அளவில் பொருளாதார மந்தம்
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கும் இந்த நிலையில், உலகப்பொருளாதாரம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருந்து வருகிறது. இதனால் வேலைவாய்ப்பின்மை, தொழில்துறை உற்பத்தி, புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் என்பது மிக குறைவு என பல பிரச்சனைகளால், பணப்புழக்கம் குறைந்து விட்டது. எனினும் இந்தியாவில் கடந்த ஆண்டு பருவமழையின்மையால் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை நீடித்து வருகிறது.
தங்கத்தில் முதலீடு அதிகரிப்பு
மேலும் சர்வதேச சந்தைகள் வெகுவாக சரிவை கண்டு வரும் இந்த நிலையில், முதலீட்டாளர்கள் மாற்று முதலீடாக தங்கத்தில் தற்போது முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். இதுவும் தங்கம் விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகவே அமைந்துள்ளது. அதிலும் இந்தியாவில் தங்கத்தின் இறக்குமதி வரியும் கடந்த பட்ஜெட்டில் அதிகரிக்கப்பட்டுள்ளதால், தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பாக இது அமைந்துள்ளது.
அமெரிக்கா சீனா குழப்பம்
இது ஒரு புறம் இருந்தாலும், சர்வதேச சந்தையில் பிரச்சனை, உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா - சீனா இடையே நிலவி வரும் குழப்பத்தால் பிரச்சனை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது. இதனால் உலகப் பொருளாதாரம் மிக மந்த மடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சர்வதேச சந்தையிலும் அவுன்ஸுக்கு 1500 டாலர் என்ற நிலையை எட்டியுள்ளது. இந்த நிலையில் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை, தங்கத்தின் பக்கம் திருப்பியுள்ளதால் தங்கத்தில் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும்
இந்த நிலையில் இந்தியாவில் 10 கிராம், 24 காரட் தங்கத்தின் விலை 37,800 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. மேலும் போகிற போக்கை பார்த்தால் இது 40,000 என்ற அளவுக்கு தொட்டுவிடும் போல என்றும் சந்தை நிபுனர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் 31,640 ரூபாய் இருந்த 10 கிராம் தங்கத்தின் விலை, ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் 36,890 ரூபாய் அளவில் வர்த்தகமாகியுள்ளது. இதே காலத்தில் வெள்ளியின் விலை மார்ச் தொடக்கத்தில் 37,245 ரூபாயாக இருந்தது, ஆகஸ்ட் முதல் வாரத்தில் 42,715 ரூபாயாக அதிகரித்துள்ளது.
ரூபாய் வீழ்ச்சியால் ஏற்றம் கண்ட தங்கம்
ரூபாயின் மதிப்பும் அப்படிதான் பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் 69.2 ரூபாயாக இருந்தது, கடந்த ஆகஸ்ட் முதல் வாரத்தில் 70.90 ரூபாயாக வர்த்தகமாகியுள்ளது. கிட்டதட்ட 2.5 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எம்.சி.எக்ஸ்சில் 10 கிராம் தங்கத்தின் விலை 39,000 ரூபாயை தொடலாம் என்றும் கூறப்படுகிறது.