உலக நாடுகளில் இருப்பது போல் இந்தியாவிலும் 24 மணிநேரமும் பணப் பரிமாற்றம் செய்யும் சேவையை அமலாக்கம் செய்ய இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
ரெப்போ விகிதம்
புதன்கிழமை நடந்து முடிந்த நாணய கொள்கை கூட்டத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக ரெப்போ விகிதத்தைச் சுமார் 35 அடிப்படை புள்ளிகளைக் குறைத்தது. இதுமட்டும் அல்லாமல் வங்கிகள் இந்தப் பலனை முழுவதுமாக மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்றும் வணிக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கவர்னர் கூறியுள்ளார்.
இக்கூட்டத்தின் முடிவில் தான் பணப் பரிமாற்றம் குறித்து சக்தி காந் தாஸ் கூறியுள்ளார்.
பணப் பரிமாற்றம்
தற்போது நடைமுறையில் தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT) சேவையின் கீழ் வங்கி வேலை செய்யும் நாட்களில் மட்டும் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரையிலான காலத்தில் மட்டுமே பணப் பரிமாற்றம் செய்ய முடியும்.
இதனை முழுமையாக மாற்ற வேண்டும் என ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
நாணய கொள்கை
நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த சக்திகாந்த தாஸ், வருகிற டிசம்பர் மாதம் முதல் NEFT சேவையின் கீழ் 24x7 நேரமும் பணப் பரிமாற்றம் செய்யும் வழக்கத்தைக் கொண்டு வர ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
இந்த முடிவு இந்திய பணப் பரிமாற்ற தளத்தில் ஒரு புரட்சி உருவாகும் எனவும் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
இலவசம்
ரிசர்வ் வங்கி பேமெண்ட் விஷன் 2019 முதல் 2021 கொள்கையின் கீழ் NEFT மற்றும் RTGS பணப் பரிமாற்ற முறையில் கீழ் நாள் முழுவதும் பணப் பரிமாற்றம் செய்யவும், இதை மக்களுக்கு இலவசமாக வழங்கவும் திட்டம் தீட்டியுள்ளது.
இதன் ஒரு பகுதியாகவே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ரிசர்வ் வங்கி கவர்னர்.
NEFT பணப் பரிமாற்றம்
கடந்த நாணய கொள்கை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி NEFT பணப் பரிமாற்றத்திற்குக் கட்டணம் இல்லை என அறிவித்த நிலையில், வங்கிகளும் அந்தச் சலுகையை மக்களுக்கு முழுமையாகக் கொடுத்தது.
ரிசர்வ் வங்கியின் இத்தகைய தொடர் அறிவிப்புகளால் நாட்டின் டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தில் புதிய புரட்சி வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.