அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போரின் காரணமாகவும், இந்தியாவில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார வளர்ச்சி காரணமாகவும் மும்பை பங்குச்சந்தையில் பல ஆயிரம் நிறுவன பங்குகளின் மதிப்பு குறைந்து முதலீட்டாளர்களின் பணத்தை விழுங்கிவிட்டது. இத்தகைய மோசமான நிலையிலும் சில நிறுவன பங்குகள் 500 சதவீதம் முதல் 1000 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது, அதிலும் வெறும் 7 மாத காலத்தில்.
20 மாத காலம்
கடந்த 20 மாதத்தில் மட்டும் சுமார் 90 சதவீத நிறுவனங்கள் முதலீட்டாளர்களின் முதலீட்டை 99 சதவீதம் வரையில் காலி செய்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் சர்வதேச சந்தையில் நிலையற்ற தன்மை நிலவும் காரணத்தாலும் அன்னிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து அதிகளவிலான முதலீட்டை வெளியேற்றி வருகின்றனர்.
தங்கம் விலை
பங்கு சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவை சரி செய்ய வேண்டும் என்ற நோக்குடன் பன்னாட்டு முதலீட்டாளர்கள் தற்போது அதிகளவிலான பணத்தைத் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாகத் தான் தற்போது தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.
இதுமட்டும் அல்லாமல் தற்போது சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1500 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. இது அடுத்தச் சில மாதங்களில் 1600 என்ற விலைக்கும், அடுத்து சில வருடங்களில் இது 2000 டாலரை அடைய 1600 என்ற விலை அடிப்படையாக அமையும் எனச் சந்தை ஆய்வுகள் கூறுகிறது.
முக்கியத் துறைகள்
இந்நிலையில் இந்த வருடத்தின் 7 மாத காலத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கெமிக்கல், நுகர்வோர் உணவு, பார்மா, கப்பல் துறை, டெலிகாம், பிளாஸ்ட் துறை, என்பிஎப்சி நிறுவனங்கள் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.
10 மடங்கு லாபம்
ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரையிலான காலத்தில் கடல் உணவு பொருட்களைத் தயாரிக்கும் கோஸ்டல் கார்ப்பரேஷன் நிறுவன பங்கின் விலை வெறும் 16.90 ரூபாயில் இருந்து 249 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. இக்காலக்கட்டத்தில் இந்நிறுவன பங்கு சுமார் 1370 சதவீதம் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
500 சதவீதம் உயர்வு
இதைத் தொடர்ந்து கிரான்டியூர் பிராடெக்ட்ஸ் பங்குகள் 557 சதவீதமும், லீடிங் லீசிங் பைனான்ஸ் பங்குகள் 549 சதவீதமுமந், டார்ஜிலிங் ரோப்வே 530 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது. இதோடு டியான் ஆயுர்வேதிக், சடியா இன்டஸ்ட்ரீஸ், கேபிட்டல் இந்தியா, பி அண்ட் ஜி ஹெல்த், யுக்ரோ கேபிடல் மற்றும் ரீபெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்கள் 200 முதல் 500 சதவீதம் வரையிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.
முதலீடு திட்டமிடல்
சரியாகத் திட்டமிட்டு முதலீடு செய்தால் நிச்சயம் சரிவில் இருந்து மீள முடியும். சில நேரங்களில் நாம் எவ்வளவு திட்டமிட்டாலும் பங்குசந்தை நம் கால்களை வாரிவிடும். அதற்கு ஏற்றார் போல் நீண்ட கால முதலீடு அல்லது நிரந்தர லாபம் தரும் தங்கம் மற்றும் இதர உலோகத்தில் முதலீடு செய்ய வேண்டும்.