டெல்லி : சென்னையில் தொடர்ந்து கடந்த சில தினங்களாக ஏற்றம் கண்டு வந்த ஆபரண தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு 280 ரூபாய் குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து, 3,583 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. ஆக சவரன் 28,664 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
இதே இந்திய சந்தையான மல்டி கமாடிட்டி எக்சேஞ்சில், தற்போது 37,926 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது இன்று காலை 38,220 ரூபாய் அளவுக்கு சென்று, தற்போது சரிந்து 37,926 ரூபாயாக காணப்படுகிறது. இதே இன்று அதிகபட்சமாக 37,752 ரூபாயாக குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 1,523.05 டாலராக தொடங்கிய சந்தை, தற்போது 1513.18 டாலராக வர்த்தகமாகி வருகிறது. இது அதிகபட்சமாக 1,505.79 டாலர் வரை குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் 30 வருட பத்திரத்தின் அடிப்படை புள்ளிகளில், 27 புள்ளிகள் குறைந்துள்ளதையடுத்து, இந்த பத்திரத்தின் மூலம் கிடைக்கும் லாபம் குறையும் என்பதால் டாலரின் மதிப்பு சற்று வீழ்ச்சியடைந்து காணப்படுகிறது. இதுவே இன்று காலை தங்கத்தின் விலையேற்றத்திற்கு வழி வகுத்தது.
எனினும் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் அதிரடி நடவடிக்கைகள், முதலீட்டாளர்களின் முதலீட்டை சேமிக்க உதவும் என்ற செண்டிமெண்டால் அதிகளவிலான இறக்கம் தடுக்கப்பட்டு, தங்கத்தின் விலை தற்போது டாலரில் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் வர்த்தகமாகி வருகிறது.
இதனால் இந்திய சந்தையிலும் தங்கத்தின் விலை சற்று குறையலாம் என்ற எண்ணமே நிலவி வருகிறது. இந்த நிலையிலேயே ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் வீழ்ச்சியடைந்து காணப்படுகிறது.
எனினும் மேற்கொண்டு விலை குறையுமா என்றால் அது கேள்விக்குறியாகத் தான் இருக்கிறது. ஏனெனில் அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தக ஒப்பந்தம், தற்போதைக்கு முடிவுக்கு வருமா என்பதே சந்தேகமான போக்கில் தான் உள்ளது.
ஏனெனில் வர்த்தக ஒப்பந்தம் குறித்து, இந்த இரு நாடுகளுமே தொடர்ந்து ஆர்வம் காட்டுவதாகவும் தெரியவில்லை. இதனால் இந்த இரு நாடுகள் மட்டும் அல்லாது, உலகப் பொருளாதாரமே தள்ளாடி வரும் நிலையில், சர்வதேச பங்கு சந்தைகள் பெரிய அளவிலான சரிவை கண்டு வருகின்றன.
இதனால் சர்வதேச அளவிலான முதலீட்டாளர்கள், பங்கு சந்தை முதலீட்டுக்கு மாற்றாக தங்கத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். இதனாலலேயே தங்கத்தின் விலை சர்வதேச அளவில் ஏற்றம் கண்டது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்ட எதிரொலியே, இந்தியாவிலும் தங்கம் விலை ஏற்றம் காண வழி வகுத்தது. மேலும் இந்தியாவில் தற்போது ஆவணி மாதம் வர விருப்பதால் தங்கத்திற்கான தேவையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை குறைந்தாலும், நீண்டகால போக்கில் தங்கத்தின் விலை சற்று அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறப்படுகிறது.