உலகம் முழுக்க தங்கத்தின் மீது ஒரு மோகம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்கு ஒரு வணிக உள்நோக்கமும் மனித இனத்துக்கு எப்போதுமே இருந்து கொண்டிருக்கிறது.
இந்த நிதர்சனமான வார்த்தைகளைச் சொன்னவர் கெரால்ட் எம் லோய்ப் (Gerald M Loeb). இவர் அமெரிக்க பங்குச் சந்தைகளில் பெரிய வர்த்தகர்.
எப்போதும் உலக சந்தைகளில், குறிப்பாக நிதி சந்தைகளில் ஒரு நிலையற்ற தன்மை வரும் போது, தங்கத்தின் மீதான காதல் மக்களுக்கு மேலும் அதிகரித்துவிடுகிறது.
விலை ஏற்றம்
கடந்த ஜனவரி 01, 2019-ல் 31,650 ரூபாய்க்கு விற்கத் தொடங்கிய 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை பிப்ரவரி 20, 2019 அன்று 35,130 என்கிற புதிய உச்சத்தைத் தொட்டது. பிப்ரவரி முதல் ஜூன் 20, 2019 வரை 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை இந்த 35,130 என்கிற உச்சத்தைக் கடக்கவில்லை. ஆக தங்கத்தின் விலை ஏற்றத்தில் இது தான் இந்த 2019-ம் வருடத்தின் முதல் பெரிய ஏற்றம்.
இரண்டாம் ஏற்றம்
ஜூன் 21, 2019 அன்று தான் மீண்டும் தங்கத்தின் விலை ஏற்றம் காணத் தொடங்குகிறது. ஜூன் 21, 2019 அன்று 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 35,380 என்கிற உச்சம் தொடுகிறது. அதன் பின் தங்கத்தின் விலை (Gold Price) இன்று வரை நிதானமாக ஏற்றம் கண்டு இன்று ஆகஸ்ட் 19, 2019 வரை 39,130 என்கிற உச்ச விலையில் விற்கப்பட்டு வருகின்றன. ஆக 2019-ம் ஆண்டில் மட்டும் சுமாராக 23% ஏற்றம் கண்டிருக்கிறது.
உலக ரெசசன்
நிதி மேலாளர்களில் ஒரு பெரிய பிரிவினர் அடுத்த 12 மாதங்களில் ஒரு உலக ரெசசன் வரும் எனச் சொல்லிக் கொண்டிருப்பதை, பேங்க் ஆஃப் அமெரிக்கா மேரில் லிஞ்ச் நிறுவனம் தன் சர்வே வழியாக சுட்டிக் காட்டுகிறது. அதோடு அமெரிக்க கடன் பத்திரங்களுக்கான வட்டி விகிதமும் இறக்கம் கண்டிருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள். இதே போலத் தான் 2008 - 09 கால கட்டத்திலும் நடந்ததைச் சுட்டிக் காட்டுகிறார்கள் அனலிஸ்டுகள். ஆகையால் தான் தங்கத்தின் விலை கடுமையாக அதிகரித்துக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
பாதுகாப்பு
அதோடு, உலகம் முழுக்க ரெசசன் வரும் என்கிற பயத்தினால், வர்த்தகர்கள் பாதுகாப்பான தங்கத்தில் தங்கள் பணத்தைப் போட்டு தஞ்சம் அடைந்து கொண்டிருக்கிறார்களாம். கடந்த சில வாரங்களில் தங்கத்தின் விலை பலமான ஏற்றம் கண்டிருக்கின்ற போதிலும், இப்போதும் தங்கத்தின் மீது சந்தையில் பாசிட்டிவ்வான செண்டிமெண்டே நிலவுவதாகவும் சொல்கிறார்கள் அனலிஸ்டுகள். அதோடு தங்கத்தின் விலை அதிகரித்ததை, முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை பிரித்து முதலீடு செய்வதையும் காட்டுவதாகச் சொல்கிறார்கள் அனலிஸ்டுகள்.
இன்னும் ஏறும்
ஒட்டு மொத்தத்தில், ரெசசன் குறித்த பயம் அதிகரிப்பதால் முதலீட்டாளர்கள் தங்கத்துக்கு தங்கள் முதலீடுகளை மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த பயம் இருக்கும் வரை தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும் என்கிறார்கள் அனலிஸ்டுகள். உலக சந்தையில் தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமாராக 1,515 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் கடந்த செப்டம்பர் 2011-ல் சுமாராக 1,920 டாலருக்கு வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.
மத்திய வங்கிகள்
போதாக்குறைக்கு இப்போது பல நாட்டு மத்திய வங்கிகளும் தங்கத்தை வாங்கிக் குவித்துக் கொண்டே இருக்கிறார்கள். சமீபத்திய உலக தங்க கவுன்சிலின் அறிக்கைப் படி கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையான இரண்டாவது காலாண்டில் உலகின் பல நாட்டு மத்திய வங்கிகள் 224 டன் தங்கத்தை வாங்கிக் குவித்து இருக்கிறார்களாம். அதே போல 2019-ம் ஆண்டின் ஜனவரி தொடங்கி ஜூன் வரைக்குமான முதல் அரையாண்டை கணக்கிட்டால் 374 டன்களை வாங்கி இருக்கிறார்களாம்.
ஃபண்ட்கள்
அதோடு தங்கத்தில் முதலீடு செய்யும் கோல்ட் எக்ஸ்சேஞ்ச் ஃபண்ட்கள் வேறு ஜூன் 2019 காலாண்டில் 67.2 டன் தங்கத்தை வாங்கிப் போட்டு இருக்கிறார்கள். கோல்ட் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டுகள் வைத்திருக்கும் தங்கத்தின் அளவு கடந்த ஆறு வருடங்களில் இல்லாத அளவுக்கு 2,548 டன்னாக அதிகரித்து இருக்கிறதாம். ஆக பல நாட்டு மத்திய வங்கிகள் மற்றும் தங்கம் சார்ந்த எக்ஸ்சேஞ்ச் டிரேடெட் ஃபண்டுகள் எல்லாம் பலமாக தங்கத்தில் முதலீடு செய்து கொண்டிருக்கின்றன.
நம் நிலை
இப்படி தங்கத்துக்கான டிமாண்ட் அதிகரிப்பதைப் பார்த்தால், ரெசசன் பயத்தில் மீண்டும் தங்கம் விலை தன் பழைய உச்சமான 1,921 டாலருக்கு மேல் வர்த்தகமாகும் போல் இருக்கிறது. நம்மூரில் கல்யாணம் காட்சி எல்லாவற்றிலுமே தங்கத்துக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. இந்த அளவுக்கு எல்லாம் விலை ஏறினால் நாம் எல்லாம் எப்படிப் பிழைப்பது..! இதே நிலை தொடர்ந்தால் மகள்களுக்கும், தங்கைகளுக்கும் திருமணம் செய்து கொடுக்கவே கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்க வேண்டி இருக்கும் போலிருக்கிறதே..!