இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ அறிமுகத்திற்குப் பின் சொல்ல முடியாத அளவிற்குப் போட்டி உருவாகியுள்ளது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் இருக்கும் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ளவே ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்களுக்கு நாக்கு தள்ளியது.
இந்தப் போட்டியை சமாளிக்கத் திட்டமிட்டு வோடபோன் மற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்களும் இணைந்தது. இந்த இணைப்பிற்குப் பின்னரும் தொடர் வர்த்தக மற்றும் வருவாய் சரிவை சந்தித்த இக்கூட்டணி என்ன செய்வது எனத் தெரியாமல் அதிகச் செலவு வைக்கும் வர்த்தகங்களை மூட துவங்கியது.
சிஇஓ
இந்த மோசமான சூழ்நிலையைச் சமாளிக்க முடியாத வோடபோன் ஐடியா கூட்டணியின் தலைமை நிர்வாக அதிகாரி பாலேஷ் ஷர்மா தனது பதவியைச் சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்துள்ளார்.
இவருடைய ராஜினாமாவிற்குப் பின் தனிப்பட்ட காரணங்கள் உள்ளது எனக் கூறினாலும் வர்த்தகப் போட்டி நிச்சயம் உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
பாலேஷ் ஷர்மா
இரு நிறுவனங்களின் இணைப்பின் முன் வோடபோன் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தார், வோடபோன் ஐடியா இணைப்பிற்குப் பின் இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதிவி உயர்வு பெற்றார்.
வோடபோன் நிறுவனத்தில் இவரின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்த காரணத்தினால் தான் சிஇஓவாக நியமிக்கப்பட்டார், ஆனால் போட்டி கடுமையான நிலையில் சமாளிக்க முடியவில்லை.
இடம் மாற்றம்
சிஇஓ பதவியிலிருந்து விலகிய பாலேஷ் ஷர்மா வோடபோன் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளார்.
இந்நிலையில் வோடபோன் இந்தியாவின் உறுப்பினரான ரவிந்தர் தாக்கர் தற்போது புதிய சிஇஓவாக நியமிக்கப்பட்டு உள்ளார் என வோடபோன் ஐடியா தெரிவித்துள்ளது. ரவிந்தர் தாக்கர் வோடபோன் ஐடியா மற்றும் இன்டஸ் டவர் நிறுவனங்களின் நிர்வாகக் குழுவில் உள்ளார்.
சரிவு
வோடபோன் ஐடியா நிறுவனம் கடந்த 3 காலாண்டுகளாகப் பெரிய அளவிலான நஷ்டத்தைப் பெற்று வருகிறது. இதிலும் குறிப்பாக ஜியோவின் அறிமுகத்திற்குப் பின் இரு நிறுவனமாக மோசமான வர்த்தகச் சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறது.