அரசு கொடுத்த வீட்டை நீங்கள் உடனடியாக காலி செய்யவில்லை என்றால் மின்சார இணைப்புகள் மற்றும் நீர் இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்படும் என தற்போது ஆளும் பாரதிய ஜனதா கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தது.
இந்த கடுமையான எச்சரிக்கை உடனடி பலன் கொடுத்திருக்கிறது. தற்போது பாராளுமன்ற உறுப்பினராக இல்லாத முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் இப்படி அரசு கொடுத்த வீட்டை காலி செய்யாமல் நீண்ட நாட்களாக வாழ்ந்து வந்தார்கள். இந்த கடுமையான மிரட்டலுக்கு பிறகு சுமார் 50 சதவிகித முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது அரசின் மிரட்டலுக்கு பயந்து வீட்டை காலி செய்து இருக்கிறார்கள்.
தற்போது பாராளுமன்ற உறுப்பினராக இல்லாத அரசியல் தலைவர்கள் 109 பேர் மட்டுமே அரசு கொடுத்த வீடுகளில் தங்கியிருப்பதாக அரசு தரப்பினர்கள் தகவல் சொல்லி இருக்கிறார்கள். அடுத்த வாரத்திற்குள் இன்னும் பெரும்பாலான வீடுகளில் முறையாக காலி செய்யப்பட்டு புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அந்த வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அரசு தரப்பில் சொல்லி இருக்கிறார்கள்
கடந்த திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் முன்னாள் எம்பிக்கள் அனைவரும் தங்கள் வீட்டை முறையாக காலி செய்ய வேண்டும், அப்படி இல்லை என்றால் மின்சார இணைப்புகள் மற்றும் நீர் இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்படும் என பாராளுமன்றக் குழு கடுமையாக எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் மக்களவை உறுப்பினர்களில் பலரும் மாற்று வீடுகளில் தான் இன்னும் தங்கி இருக்கிறார்களாம். தற்போது காலி செய்து இருக்கும் வீடுகளில் கூட பராமரிப்பு பணிகள் நிறைய இருப்பதால் தற்காலிக ஏற்பாடு செய்திருப்பதாக சொல்கிறார்கள் அரசு தரப்பினர்கள்.
பொதுவாக பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களவை கலைக்கப்பட்டு அடுத்த ஒரு மாத காலத்திற்குள் தங்களுடைய வீடுகளை காலி செய்து அரசிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்பது விதி. ஆனால் நம்மை ஆளும் அரசியல்வாதிகள் பலரும் இந்த அடிப்படை விதியை கூட பின்பற்றாமல் தங்கள் இஷ்டத்துக்கு அரசு செலவில் சொகுசு பங்களாக்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் வீட்டை தற்போது மத்திய அரசின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.