சென்னை : அமெரிக்கா சீனா பிரச்சனை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த இரு நாடுகளும், நீயானா நானா போட்டியில் தற்போது போட்டி போட்டுக் கொண்டு, மாறி மாறி வரி விதித்துக் கொள்கின்றன.
இந்த நிலையில் வரி உயர்வானது, அமெரிக்கா ஒரு புறமும், அமெரிக்காவுக்கு எதிராக சீனாவும் மாறி மாறி வரியை அதிகரித்துக் கொள்கின்றன.
இதனால் இந்த இரு நாடுகள் மட்டும் அல்லாது, உலக நாடுகளின் பொருளாதாரமும் வீழ்ச்சி கண்டு வருகிறது. இந்த நிலையில் சர்வதேச சந்தைகளும் வீழ்ச்சியுடனேயே காணப்படுகின்றன.
அமெரிக்காவும் சீனாவும் போகிற போக்கை பார்த்தால், இந்த பிரச்சனை இத்தோடு முடியாது போல் இருக்கிறது. இந்த நிலையில் உலக நாடுகளின் பங்கு சந்தைகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.
இதனால் முதலீட்டாளர்கள் மாற்று முதலீடாக தங்கத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். இதனால் சர்வதேச சந்தையிலும் தங்கத்தின் விலை ஏற ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் இந்தியாவை பொறுத்த வரை, பண்டிகைகால சீசன் ஆரம்பித்து விட்டதால் இந்த பிரச்சனை மேலும் வலுவடைந்துள்ளது. இதனால் இந்திய சந்தைகளிலும் சரி, ஆபரண தங்கத்தின் விலையும் தொடர் ஏற்றம் கண்டு வருகின்றன.
அதிலும் பண்டிகை மற்றும் ஆவணி மாதம் என்பதால் மூகூர்த்த தினங்களும் அதிகம் இருப்பதால் தங்கத்திற்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழ்நிலையில், விலையும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.472 அதிகரித்து, வரலாறு காணாத உச்சத்தை தொட்டு இருக்கிறது. ஒரு பவுன் ரூ.29,440-க்கு விற்பனை ஆகி வருகிறது. போகிற போக்கை பார்த்தால், பவுன் ஒன்றுக்கு 30,000 ருபாயை தொட்டு விடும் என்று கூறியது நடந்து விடும் போல் இருக்கிறது. இதே போல் 24 காரட் தங்கத்தின் விலையும் 40,150 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
ஒரு புறம் தங்கத்தில் விலை தான் ஏறிக் கொண்டிருக்க, மறுபுறம் வெள்ளியின் விலையும் அதிரடியாக ஏற்றம் கண்டு கொண்டு இருக்கிறது. ஒரு கிராம் ரூ.49.20 காசுக்கும், ஒரு கிலோ ரூ.49,200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.