சென்னை : கடந்த 10 தினங்களில் ஒரு சில நாட்கள் மட்டுமே பெயரளவிற்கு குறைந்த தங்கத்தின் விலையானது, தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது.
அதிலும் முகூர்த்த தினங்கள் அதிகமிருக்கும், இந்த ஆவணி மாதத்தில், தங்கத்தின் விலை அதிகரித்திருப்பது பலரின் எதிர்பார்ப்பையும் முடக்கியுள்ளது என்றே கூறலாம்.
ஆமாங்க.. இம்மாதத்தில் முகூர்த்த தினங்கள் அதிகம் இருப்பதால், அதிகளவிலான திருமண விழா உள்ளிட்ட பண்டிகை காலமும் தொடங்கியுள்ள நிலையில், தங்கத்திற்கான தேவையும் அதிகரித்துள்ளது. அதற்கேற்ப சர்வதேச சந்தையிலும் விலை அதிகரித்துள்ளது. ஏற்கனவே தாறுமாறாக ஏற்றம் கண்டு கொண்டிருக்கும், இந்த விலை ஏற்றத்தினால், நடுத்தர மக்கள் தங்கம் வாங்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
விலையேற்றம் காணும் தங்க ஆபரணம்
இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 38 ரூபாய் உயர்ந்து, கிராமுக்கு 3,718 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இதுவே சவரன் தங்கத்தின் விலை 304 ரூபாய் அதிகரித்து, 29,744 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் கிட்டதட்ட 1000 ரூபாய் மேல் தங்கத்தில் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆகஸ்ட் 22ம் தேதியன்று 28,816 ரூபாயாக விற்பனையான ஆபரண தங்கத்தின் விலை, இன்று 29,744 ரூபாயாக விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.
வர்த்தக போரே காரணம்
இதற்கு முக்கிய காரணம், அமெரிக்கா சீனா இடையிலான பிரச்சனை , தற்போது மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளதே என்றும் கூறப்படுகிறது. இந்த இரு நாடுகளுக்கிடையிலான பிரச்சனையில், சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் மந்த நிலையை ஏற்படுத்தி வருவதாலும், இதனால் அண்டை நாடுகளின் பங்கு சந்தைகளில் உள்ள முதலீடுகளும் வெளியேறி வருகின்றன. மேலும் இதற்கு மாற்றாக தங்கத்தில் முதலீடு செய்யவும் ஆரம்பித்துள்ளனர்.
தங்கத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள்
மேலும் அவ்வாறு வெளியேறிய முதலீடுகளை முதலீட்டாளர்கள், தற்போது தங்கத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். இதனாலேயே சர்வதேச அளவிலேயே தங்கத்தின் விலையானது ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விலையேற்றமானது, இன்னும் அதிகரிக்கலாமே தவிர, இப்போதைக்கு பெரிதாக குறைய வாய்ப்பில்லை என்றும், அப்படி விலை குறைவு ஏற்பட்டாலும் அது பெரிய அளவில் இருக்காது என்றும் கூறப்படுகிறது.
வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட இப்போதைக்கு வாய்ப்பில்லை
ஏனெனில் அமெரிக்கா- சீனா வர்த்தக பிரச்சனையானது இப்போதைக்கு தீர்வுக்கு வரும்படியாக இல்லாத நிலையில், தற்போதைக்கு முதலீட்டாளர்களின் சிறந்த முதலீட்டு ஆப்ஷன் தங்கமே. எனினும் ஒரு வேளை இப்பிரச்சனைக்கு ஏதாவது சுமுக தீர்வு காணப்பட்டாலே தவிர, இப்பிரச்சனைக்கு மாற்று இல்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் சீனாவும் அமெரிக்காவும் மும்முரமாக நீ பெரிதா நான் பெரிதா என்பது போல வரியை மாறி மாறிக் விதித்துக் கொள்கின்றன.
தங்கத்திற்கான தேவை அதிகரிப்பு
என்ன தான் மத்திய அரசு தங்கம் இறக்குமதி வரியை அதிகரித்தாலும், தங்கத்தில் விலை அதிகாரித்தாலும், இன்றளவிலும் நகைக் கடைகளில் கூட்டம் அலைமோதுவதைக் கண்கூடாக காண முடிகிறது. ஆக தங்கத்தில் பெரிய அளவில் இறக்கம் இல்லை என்றாலும், இவ்வாறு ஏற்றம் காணவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக நகைக் கடை வட்டாரத்தில் கூறுகின்றன. அதிலும் வரும் மாதங்களில் அடுத்தடுத்த பண்டிகை இருப்பதால், இன்னும் தங்கத்திற்கான தேவை இன்னும் அதிகரித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.