சிங்கப்பூர்: பொதுவாக தங்கத்தை வெறி கொண்டு வாங்குவதில் இந்தியர்களுக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. ஆனால் இப்போது இந்த பட்டியலில் ஆச்சர்யப்படுத்தும் வகையில் சிலர் வந்து சேர்ந்து இருக்கிறார்கள்.
அவர்கள் ஏதோ தனியார் நிறுவனங்களோ ஒரு நாடோ அல்ல, அவர்கள் எல்லோருமே ஒரு அரசு அமைப்பினர்கள் தான். நம்மைப் போன்ற சராசரிகள் தங்கம் வாங்கினால் நமக்கு சந்தோஷம், ஆனால் இவர்கள் தங்கம் வாங்கினால் உலக பொருளாதாரம் ஏதோ ஒரு சிக்கலில் இருப்பதாக அர்த்தம்.
அவர்கள் வேறு யாரும் இல்லை, நம் ஆர்பிஐ போல பல உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தான் அந்த புதிய வாடிக்கையாளர்கள்.
தங்க வேட்டை
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து வங்கிக் குழுமம் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. அதில் இந்தியாவின் மத்திய ரிசர்வ் வங்கி,
சீனாவின் மக்கள் வங்கி, ரஷ்யாவின் மத்திய வங்கியான பேங்க் ஆஃப் ரஷ்யா, துருக்கி நாட்டின் சென்ட்ரல் பேங்க் ஆஃப் ரிபப்ளிக் ஆஃப் டர்க்கி...
போன்ற பல உலக நாடுகளின் மத்திய வங்கிகளும் இனி வரும் காலங்களில் அதிக அளவில் தங்கத்தை வாங்க வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.
கரன்ஸி பிரச்னை
தற்போது உலக பொருளாதார சூழலில், வளரும் நாடுகளின் கரன்ஸி ஒரு மோசமான, நிலையற்ற தன்மையிலேயே வர்த்தகமாகி வருகிறது. எனவே துருக்கி, கஜகஸ்தான், சீனா போன்ற வளரும் நாடுகள் தங்களின் முதலீடுகளை பன்முகத் தன்மை உடன் மாற்றி அமைத்துக் கொள்ள தங்கம் உதவும் எனச் சொல்லி இருக்கிறார்கள். இப்படி மத்திய வங்கிகள் மட்டும் சுமார் 650 டன் வரை இன்னும் அதிக தங்கத்தை வாங்கலாம் எனவும் சொல்லி இருக்கிறார்கள்.
முக்கிய விஷயம்
தற்போது மத்திய வங்கிகள், தங்கத்தில் முதலீடு செய்வது மிக முக்கிய விஷயமாக உலக சந்தைகளில் பார்க்கப்படுகிறது. தங்கம் கடந்த 2013-ம் ஆண்டு தொட்ட உச்ச விலையை, தற்போது மீண்டும் தொட்டு இருக்கிறது என்றால் அதற்கு மத்திய வங்கிகள் தங்கத்தை தாறுமாறாக வாங்கியதும் ஒரு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. இந்த நொடி வரை தங்கத்தில் முதலீடு செய்வதை மத்திய வங்கிகள் குறைத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. தங்கம் விலை ஏறுவதும் தடை பட்டதாகத் தெரியவில்லை.
பொருளாதார தேக்கம்
உலக பொருளாதாரத்தில் வளர்ச்சி சரிவு, வர்த்தகப் போர் தொடர்பான கொந்தளிப்புகள், அமெரிக்க டாலரில் இருக்கும் பணத்தை தங்கத்துக்கு முதலீடு செய்து ரிஸ்கை குறைத்து, லாபம் பார்க்க நினைப்பது என தங்க விலை ஏற்றத்துக்கு பெரிய அளவில் உதவிக் கொண்டு இருக்கிறார்கள். உலகின் மொத்த தங்க நுகர்வில் 10 சதவிகிதத்தை பல நாட்டு மத்திய வங்கிகள் தான் வாங்கிக் குவித்து இருக்கிறார்கள் என்கிறது ஆஸ்திரேலியா மற்றும் நியூலிலாந்து வங்கிக் குழும அறிக்கை.
சீனா வரும்
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனாவின் மொத்த அந்நிய செலாவணி ரிசர்வ்களில் வெறும் 3 சதவிகிதத்தை மட்டுமே தங்கத்தில் முதலீடு செய்து வைத்து இருக்கிறார்களாம். சீனாவிடம் தற்போது 1,936 டன் தங்கம் இருக்கிறது. ஆக தன் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள சீனா இன்னும் நிறைய தங்கம் வாங்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்கிறது அந்த அறிக்கை. சமீபத்தில் கடந்த ஜூலை 2019-ல் தான் சீனா தன் தங்க முதலீட்டை கொஞ்சம் அதிகரித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இனியும் வாங்குவோம்
2019-ம் ஆண்டின் முதல் அரை ஆண்டில், உலக நாடுகளின் மத்திய வங்கிகள் சுமாராக 375 டன் தங்கத்தை வாங்கிக் குவித்து இருப்பதாக உலக தங்க கவுன்சிலில் இருந்து தகவல்கள் வந்திருக்கிறது. இந்த 375 டன் தங்கத்தை வாங்கியதற்கே தங்கத்தின் விலை கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத உச்சத்தைத் தொட்டு இருக்கிறது. இனி வரும் மாதங்களிலும் தங்கத்தை வாங்க உலக மத்திய வங்கிகள் ஆர்வம் காட்டுவதாக அவர்களே சொல்லி இருக்கிறார்கள். ஆக அடுத்த 12 மாதங்களில் தங்கத்தின் விலை இன்னும் எவ்வளவு அதிகரிக்குமோ தெரியவில்லை..!
தங்கம் விலை நிலவரம்
சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை அதிகபட்சமாக நேற்று ஆகஸ்ட் 26, 2019 அன்று 40,560 ரூபாய்க்கு விற்பனை ஆகி இருக்கிறது. அதே போல 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை அதிகபட்சமாக நேற்று ஆகஸ்ட் 26, 2019 அன்று 37,180 ரூபாய்க்கு விற்பனை ஆகி இருக்கிறது. இது இரண்டுமே கடந்த சில வருடங்களில் இல்லாத புதிய உச்சம் என்பது கவனிக்க வேண்டி இருக்கிறது.