பொருளாதார விவகாரங்களுக்கான கேபினெட் கமிட்டி இன்று (ஆகஸ்ட் 28, 2019) இந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதிக் கொள்கைக்கு அனுமதி கொடுத்து இருக்கிறது. அதென்ன சர்க்கரை ஏற்றுமதிக் கொள்கை எனக் கேட்கிறீர்களா..? இந்தியாவில் இருக்கும் அளவுக்கு அதிகமான கையிருப்பு சர்க்கரையை ஏற்றுமதி செய்வது தான் சர்க்கரை ஏற்றுமதிக் கொள்கை.
இந்த புதிய சர்க்கரை ஏற்றுமதிக் கொள்கையின் படி ஒரு டன் சர்க்கரைக்கு ஏற்றுமதி மானியமாக 10,448 ரூபாயை அரசே மானியமாகக் கொடுக்குமாம். இந்த விஷயத்தை ஏன் இப்போது செய்ய வேண்டும் என்கிற கேள்வி எழவில்லையா உங்களுக்கு..? ஆம் கேள்வி எழுகிறது என்றால்... தேர்தல் தான் பதில்.
அடுத்து மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் சட்ட மன்றத் தேர்தல் வரப் போகின்றன. இந்த மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா பகுதிகளில் தான் அதிக அளவில் கரும்பு விவசாயிகள் வாழ்கிறார்கள். நிறைய சர்க்கரை ஆலைகள் இந்த பகுதிகளில் இயங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி மானியமாக காசு கொடுத்து ஏற்றுமதி செய்யச் சொல்வதற்கு மட்டும் மத்திய அரசு 6,268 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருக்கிறார்களாம். இந்த மானிய பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுமாம். ஆகையால் நடுவில் எந்த ஒரு இடையூறும் இல்லாமல், விவசாயிகளுக்கும் பணம் நேரடியாகச் சென்று அடையும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படி ஒரு திட்டம் பிசிறே இல்லாமல் அமல்படுத்தப்பட்டால் பாஜகவின் இமேஜ் விவசாயிகள் மத்தியில் உயரத் தானே செய்யும்.
2019 - 20 ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவின் சர்க்கரை கையிருப்பு அளவு 142 லட்சம் டன்னாகவும், ஆண்டு முடிவில் சர்க்கரை அளவின் கையிருப்பு 162 லட்சம் டன்னாகவும் இருக்கும் எனச் சொல்லி இருக்கிறார்கள். கடந்த ஆண்டு நடந்த ராஜஸ்தான், தெலுங்கானா, மத்தியப் பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக தோற்றதை மனதில் வைத்துக் கொண்டு இந்த முறை தேர்தல் வருவதற்கு முன்பே கரும்பு விவசாயிகளுக்கு ஒரு நல்ல திட்டத்தை அறிவித்து உஷாராகி இருக்கிறது பாரதிய ஜனதா கட்சி.
ஏற்கனவே விவசாயிகளுக்கு பிரதான் மந்த்ரி கிஷான் சம்மன் நிதி அறிவித்து, பல விவசாயிகளுக்கு முதல் தவணை நிதி சென்று சேர்ந்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது.