டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது இந்திய வங்கிகள் தொடர்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசிக் கொண்டு இருக்கிறார். அதில், ஒரு இடத்தில் வங்கிகளுக்கு இருக்கும் வாராக் கடன்களைக் எந்த அளவுக்கு வசூலித்து இருக்கிறோம் பாருங்கள் என பெருமையாகச் சொல்லி இருக்கிறார்.
கடந்த 2016 - 17 நிதி ஆண்டில் 61, 930 கோடி ரூபாய், 2017 - 18 நிதி ஆண்டில் 77,563 கோடி ரூபாய், 2018 - 19 நிதி ஆண்டில் 1,21,076 கோடி ரூபாயை வசூலித்து இருக்கிறார்களாம். ஆக ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக வாராக் கடன்களை வசூலித்துக் கொண்டு இருக்கிறோம் என பெருமையாகச் சொல்லி இருக்கிறார்.
அதே போல இந்தியாவில் இருக்கும் பொதுத் துறை வங்கிகளின் மொத்த தோராய வாராக் கடன் (Gross NPA) கடந்த மார்ச் 2018 நிலவரப்படி 8.96 லட்சம் கோடி ரூபாயாக இருந்ததாம். ஆனால் தற்போது மார்ச் 2019 நிலவரப்படி 7.90 லட்சம் கோடியாக குறைந்து இருக்கிறதாம்.
இதை கொஞ்சம் டெக்னிக்கலாகப் பார்த்தால் ப்ரொவிசன் கவரேஜ் விகிதம் அதிகரித்து இருக்கிறது. அதாவது இனி வரவே வராது என எழுதிய கடன்களில் ஒரு பெரும் பகுதி கடன்களை மீண்டும் வசூலித்து இருக்கிறார்களாம். இது கடந்த ஏழு வருடங்களில் இல்லாத அளவுக்கு அதிக அளவில் வாராக் கடன்களை வசூலித்து இருக்கிறோம் என பெருமை பொங்கச் சொல்லி இருக்கிறார் நிர்மலா சீதாராமன்.
அதே போல மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கும் போது கடந்த மார்ச் 2019 காலாண்டில் மொத்த 18 வங்கியில் 6 வங்கிகள் மட்டுமே லாபம் ஈட்டிக் கொண்டு இருந்தது. ஆனால் இப்போது 18 பொதுத் துறை வங்கிகளில் 14 வங்கிகள் லாபத்தில் இயங்கிக் கொண்டு இருக்கிறது எனச் சொல்லி இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
ஆக தொடர்ந்து நாங்கள் இந்தியப் பொருளாதாரத்தை அடுத்த சில ஆண்டுகளில் 5 ட்ரில்லியன் டாலர் கொண்ட பொருளாதாரமாக வளர்த்து எடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டு இருக்கிறோம் எனச் சொல்லி இருக்கிறார் நிர்மலா சீதாராமன்