ஆசியாவிலேயே மிகவும் வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த இந்தியா, இன்று கொஞ்சமாவது வளர்ச்சி அடையுமா என்று ஏக்கத்துடன் பார்க்கும் நிலையில் உள்ளது. செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் முன்கூட்டியே கணித்ததைப் போல் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
6 வருட சரிவில் இந்திய பொருளாதாரம் இருக்கும் நிலையில், நாட்டின் 8 முக்கிய வர்த்தகத் துறையின் வளர்ச்சி வெறும் 2.1 சதவீதம் என்ற மோசமான நிலையை அடைந்தது. இதன் எதிரொலியாகச் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்படும் எனத் தமிழ் குட்ரிட்டன்ஸ் கணித்திருந்தது. இதன் வாயிலாகச் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் 2 சதவீதம் வரையில் சரிந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சென்செக்ஸ் குறியீடு 2.06 சதவீதம் வரையில் சரிந்து சுமார் 769.88 புள்ளிகளை இழந்து 36,562.91 புள்ளிகளை அடைந்தது. இதோடு நிஃப்டி குறியீடு 2.04 சதவீதம் வரையில் சரிந்து 225.35 புள்ளிகள் இழந்து 10,797.90 புள்ளிகளை அடைந்தது.
இவை அனைத்தும் நாட்டின் பொருளாதாரத்தின் 6 வருட வீழ்ச்சியும், 8 முக்கிய வர்த்தகத் துறையின் மோசமான வளர்ச்சி தான் காரணம் எனத் தெரிகிறது.
இந்நிலையில் செவ்வாய் கிழமை வர்த்தகத்தில் நடந்த முக்கியமான மாற்றங்கள் அனைத்து தரப்பினரும் கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
140 நிறுவனங்கள்
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் தேசிய பங்குச்சந்தையில் சுமார் 140 நிறுவனங்கள் 52 வார சரிவைச் சந்தித்துள்ளது. இது பங்குச்சந்தை வர்த்தகத்தில் முக்கிய நிகழ்வாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
2.60 லட்சம் கோடி
மோசமான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் செவ்வாய்க்கிழமை ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் 2.60 லட்சம் கோடி ரூபாய் பங்குச்சந்தையை விட்டு வெளியேறியுள்ளது.
தங்கம் விலை
பங்குச்சந்தையில் இருந்து வெளியேறும் முதலீடுகள் பாதுகாப்பாக இருக்கத் தங்கத்தில் மீது முதலீடு செய்யப்படுகிறது. இதன் எதிரொலியாகத் தங்கம் விலை செவ்வாய்க்கிழமை அதிகளவில் உயர்ந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை சென்னையில் 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை அதிகபட்சமாக 40,352 ரூபாய்க்கும், 22 கேரட் 10 கிராம் தங்கம் 37,020 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
ஐடிபிஐ வங்கி
மொத்த சந்தையும் சரிவில் இருக்கும் நிலையில் ஐடிபிஐ வங்கி பங்குகள் மட்டும் 8 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இதற்குக் காரணம் மத்திய அரசும், எல்ஐசி நிறுவனமும் இணைந்து இவ்வங்கியில் சுமார் 9000 கோடி ரூபாய் நிதி உள்ளீடு செய்ய உள்ளது. இதன் வாயிலாகவே 8 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
வங்கித்துறை பங்குகள்
வெள்ளிக்கிழமை நிதியமைச்சகம் நாட்டின் 10 பொதுத்துறை வங்கிகளை இணைந்து 4 பெரும் வங்கிகளாக உருவாக்க உள்ளதாக அறிவித்தது. இந்த மோசமான முடிவை அடுத்துப் பொதுத்துறை வங்கி குறியீடு 5 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
இதில் குறிப்பாக இந்தியன் வங்கி 11.96 சதவீதமும், கனரா வங்கி 11.94 சதவீதமும், யூனியன் வங்கி 10.11 சதவீதமும், ஓரியென்டல் வங்கி 10 சதவீதமும், பஞ்சாப் நேஷனல் வங்கி 8.94 சதவீதமும் சரிந்துள்ளது.
ஆட்டோமொபைல்
தொடர் வர்த்தகச் சரிவு, உற்பத்தி குறைப்பு, ஊழியர்கள் வெளியேற்றம் என அனைத்து முக்கியப் பிரச்சனைகளையும் சந்தித்துக்கொண்டு இருக்கும் ஆட்டோமொபைல் துறையில் டிவிஎஸ் மோட்டாஸ் 2.20 சதவீதமும், அசோக் லெய்லேண்ட், மாருதி, டாடா மோட்டார்ஸ், எய்ச்சர் மோட்டார்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் தலா 1 சதவீதம் வரையில் சரிந்தது.