பி எஸ் என் எல் பற்றி கடந்த பல மாதங்களாக சம்பளம் சரியாகக் கொடுக்கவில்லை, நிறுவனத்திடம் போதிய பணம் இல்லை, பெரிய நிதி நெருக்கடியில் இருக்கிறது என பல விவரங்களைப் பார்த்தும் படித்தும் வருகிறோம்.
அதே காலங்களில் ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு, விருப்ப ஓய்வு கொடுப்பதைப் பற்றி எல்லாம் பேசி இருந்தார்கள். பின் மீண்டும் கைவிட்டதாகச் சொன்னார்கள்.
ஆனால் இப்போது மீண்டும் விருப்ப ஓய்வு அடிப்படையில் ஊழியர்கள் எண்ணிக்கையை பாதிக்கு பாதியாகக் குறைக்கப் போவதாக பி எஸ் என் எல் நிறுவனமே சொல்லி இருக்கிறது.
முக்கிய வேலைகள்
பி எஸ் என் எல் நிறுவனத்தின் தலைவர் பிரவீன் குமார் புர்வார் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய போது, பி எஸ் என் எல் நிறுவனத்தின் வருவாயை அதிகரிப்பது தான் தங்கள் முதல் வேலை. அதோடு நிறுவனத்தின் செயல்பாட்டு செலவீனங்களைக் குறைப்பதும் முக்கிய பணிகளில் ஒன்று எனச் சொல்லி இருக்கிறார். செலவுகளைக் குறைக்க சில கொள்கை ரீதியிலான முடிவுகளை எடுத்தால் போதும் எனவும் சொல்லி இருக்கிறார்.
செலவைக் குறைக்க
இதுவரை பி எஸ் என் எல் நிறுவனம் அவுட் சோர்ஸிங் கொடுத்துக் கொண்டு இருக்கும் வேலைகளை பி எஸ் என் எல் பணியாளர்களை வைத்தே செய்வது, அதிகம் செலவாகும் மின்சார செலவில் 15 சதவிகிதத்தை குறைக்க இருப்பது என ஒரு நீண்ட திட்டத்தை பி எஸ் என் எல் நிறுவனம் வைத்திருக்கிறதாம். சுருக்கமாகச் சொன்னால், தங்களிடம் இருப்பததை வைத்து நிறுவனத்தை சிறப்பாக நடத்த முயற்சித்துக் கொண்டு இருக்கிறது பி எஸ் என் எல்.
ஊழியர்கள் செலவு
இந்த செலவீனங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் பட்டியலில் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவதையும் வைத்திருக்கிறார்களாம். பி எஸ் என் எல் நிறுவனத்துக்கு வரும் மொத்த வருவாயில் சுமார் 75 சதவிகித வருமானம், ஊழியர்கள் சம்பளத்துக்கே செலவாகி விடுகிறதாம். அதோடு மற்ற டெலிகாம் நிறுவனங்களில் இருக்கும் ஊழியர்கள் எண்ணிக்கை விட மிக அதிகமாக பி எஸ் என் எல் நிறுவனத்தில் பணியாளர்கள் இருக்கிறார்களாம்.
60,000 பேர்
எத்தனை பேரை வேலையை விட்டு நீக்கப் போகிறார்கள் தெரியுமா..? குறைந்தபட்சம் 60,000 பேரை வீட்டுக்கு அனுப்பப் போகிறார்களாம். இந்த 60,000 பேருக்கு விருப்ப ஓய்வு பெற்றால் கொடுக்க வேண்டிய பணச் சலுகைகளை அரசிடம் விவாதித்துக் கொண்டு இருக்கிறார்களாம். இந்த 60,000 பேர் விருப்ப ஓய்வு பெற்ற பின் கூட பி எஸ் என் எல் நிறுவனத்தில் 1 லட்சம் பேருக்கு மேல் ஊழியர்களாக இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வருவாயை அதிகரிக்க
சரி செலவீனங்களை விடுங்கள் வருவாயை அதிகரிக்க என்ன வழி..? எனக் கேட்டால் நிலத்தை காட்டுகிறார்கள். தற்போது பி எஸ் என் எல் நிறுவனத்துக்கு சொந்தமாக இருக்கும் நிலங்களை குத்தகைக்கு விட்டு சுமார் 200 கோடி ரூபாய் வரை வருமானம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்களாம். அடுத்த 12 - 15 மாதங்களுக்குள் பி எஸ் என் எல் நிறுவனத்துக்கு சொந்தமான நிலங்களை குத்தகைக்கு விடுவது வழியாக மட்டும் சுமார் 1,000 கோடி ரூபாயை ஈட்டப் போகிறார்களாம்.
டவர் வாடகை
பி எஸ் என் எல் நிறுவனத்துக்கு சுமாராக 68,000 டவர்கள் இந்தியா முழுக்க சொந்தமாக இருக்கிறதாம். அதில் தோராயமாக 13,000 முதல் 14,000 டவர்கள் வரை வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்டிக் கொண்டு இருக்கிறார்களாம். இப்போது வாடகைக்கு விட்டு இருக்கும் டவர்களிலேயே பெரும்பாலான டவர்கள் ஜியோ நிறுவனத்துக்கு தான் வாடகைக்கு விடப்பட்டு இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. இன்னும் எப்படி அதிக டவர்கள் வாடகைக்கு விட்டு வருமானத்தை அதிகரிப்பது எனவும் யோசித்துக் கொண்டு இருக்கிறார்களாம்.