தங்கம் அசுரத் தனமாக விலை ஏற ஏற மக்கள் வாங்கிக் கொண்டே இருப்பார்கள் என்று தான் நினைத்தோம். ஆனால் கதை வேறு மாதிரி ட்விஸ்ட் எடுத்து இருக்கிறது. இந்தியாவில் தங்கத்தின் விலை மிக அதிக அளவில் கடந்த ஆகஸ்ட் 2019-ல் ஏற்றம் கண்டதால், மக்கள் தங்கத்தை வாங்க தயக்கம் காட்டத் தொடங்கி இருக்கிறார்கள்.
இதனால் நகைக் கடைகள் எல்லாம் தள்ளுபடி கொடுத்து வாடிக்கையாளர்களை கவர்ந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த தள்ளுபடி விலையில் தங்கம் விற்கும் டெக்னிக்கும் கொஞ்சம் நல்ல பலன்களையே கொடுத்து இருக்கிறதாம்.
இந்தியாவில் 10 கிராம் தங்கத்தின் பெயரில் வர்த்தகமாகும் ஃப்யூச்சர்ஸின் விலை 38,504 ரூபாய்க்கு வர்த்தகமானது. அதற்கு முந்தைய சில நாட்களில் இதே 10 கிராம் தங்கத்தின் ஃப்யூச்சர்ஸ் விலை 39,885 ரூபாய்க்கு வர்த்தகமாகி வந்ததும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆகஸ்ட் 01, 2019 அன்று 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 36,160. செப்டம்பர் 03, 2019-ல் அதே 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 40,522 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது. ஆக கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் சுமாராக 12 சதவிகிதம் விலை அதிகரித்தது. இந்த கால கட்டத்தில் தான் 22 கேரட் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை சுமாராக 30,000 ரூபாய்க்கு மேல் விற்பனை ஆனது.
இந்த விலை ஏற்றத்தைப் பார்த்து பயந்து விலை இறங்கினால் வாங்கிக் கொள்ளலாம் என ஒதுங்கிவிட்டார்கள் மக்கள். இதனால் பெரிய விற்பனை வீழ்ச்சி கண்டதாகச் சொல்கிறார்கள் நகைக் கடைக்காரர்கள். அதோடு வீழ்ந்த விற்பனை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருவதாகவும் சொல்கிறார்கள்.
ஆனால் தங்கத்தின் விலை இன்னும் குறைய வேண்டும் அப்போது தான் பொதுவாக பண்டிகை காலங்களில் இருக்கும் விற்பனையை இந்த பண்டிகை காலத்தில் விற்க முடியும் எனவும் சொல்கிறார்கள். கடந்த ஜூலை 05, 2019 அன்று நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 2.5 சதவிகிதம் அதிகரித்து இருப்பதையும் நினைவில் கொள்ள வேண்டி இருக்கிறது.