மும்பை : என்னதான் தங்கத்தின் விலை அதிகரித்தாலும், விதிமுறைகள் அதிகரிப்பட்டாலும், நம்மவருக்கு தங்கத்தின் மீதான ஈர்ப்பு மட்டும் குறைவதே இல்லை.
அதற்கு இந்த கட்டுரையே முக்கிய சாட்சி. தங்கத்தின் விலை இன்று 29,368 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இதே கடந்த வாரத்தில் வரலாறு காணாத அளவுக்கு ஏற்றம் ஒரு பவுனுக்கு 30,000 தாண்டிய பிறகு, இந்த இறக்கத்தை கண்டுள்ளது.
இதற்கு பொதுவாக உலகப் பொருளாதாரம் ஒரு புறம் காரணமாக கூறப்பட்டாலும், இந்தியாவைப் பொருத்தவரை தங்கத்தின் மீதான ஆர்வமும் ஒரு காரணம் என்றும் கூறலாம். என்னதான் விலையேற்றம் கண்டாலும் நம் மக்கள் தங்கம் வாங்குவதை நிறுத்தப் போவதில்லை.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் தேவை
என்னதான் தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டாலும், இன்றளவிலும் நம் கலாச்சாரத்தில் ஒன்றாக உள்ள தங்கத்தின் தேவை, அதிகரித்து வருவதாகவே கூறப்படுகிறது. அதிலும் இனி அடுத்து வரும் வாரங்களில் திருமண முகூர்த்த தினங்கள் அதிகம் உள்ள நிலையில், தங்கம் வாங்குவது இன்னும் அதிகரிக்கவே செய்யும் என்றும் கூறப்படுகிறது. அதிலும், கேரளாவை அடிப்படையாகக் கொண்ட கல்யாண் ஜூவல்லர்ஸ், இந்த திருமண முகூர்த்தங்களில் விற்பனை களைகட்டி வருவதாகவும், குறிப்பாக பழைய தங்க நகை விற்பனை 10 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் ஒர் அறிக்கையில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இறக்குமதியும் சரிவு
தேவை அதிகரித்துள்ள நிலையில் தான் தங்கத்தின் இறக்குமதியானது குறைந்துள்ளது. குறிப்பாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தங்கம், இறக்குமதி 73 சதவிகிதம் சரிந்துள்ளது. இதற்கு காரணம் உள்நாட்டில் விதிக்கப்பட்டுள்ள தங்கத்திற்கான இறக்குமதி வரி 12.5 மற்றும் விற்பனை வரி 3 சதவிகிதம் என இதனுடன் சேரும் போது தங்கத்தின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இனி தங்கம் விலை எப்படி?
இறக்குமதியும் குறைவு, தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தங்கத்தின் விலை மேன் மேலும் அதிகரிக்கவே செய்யும் என்றும் இத்துறை சார்ந்த நிபுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதிலும் குறுகிய காலத்தில் விலையிறக்கம் கண்டாலும், நீண்ட கால நோக்கில் தங்கத்தின் விலை அதிகரிக்கவே வாய்ப்புள்ளது என்றும், அப்படி ஏதேனும் விலை அதிரடியாக மாற்றம் நிகழ்கிறது எனில், அது அமெரிக்கா பொருளாதாரத்திலோ அல்லது அதிகளவில் நுகரப்படும் சீனாவிலேயே மாற்றம் நடந்தால் மட்டுமே நிகழும் என்றும் கூறுகிறார்கள்.
தங்கம் விலை அதிகரிக்கும்
அதிலும் இனி வரும் ஓணம், அதைத் தொடர்ந்து தீபாவளி, கிறிஸ்மஸ், புத்தாண்டு என வரிசையாக வரும் பண்டிகைகளை தொடர்ந்து, இதற்கிடையில், திருமணவிழா என இன்னும் பல விஷேங்களுக்கு மத்தியில், தங்கம் தேவை அதிகரிப்பதோடு மக்கள் வாங்குவதும் அதிகரிக்கும், இதனால் தங்கத்தின் விலை கண்டிப்பாக அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.