ஆவணி மாதம். நிறைய முகூர்த்தங்களும், முகூர்த்தங்களில் திருமணம் மற்றும் நிச்சயதார்த்தம் போன்ற நல்ல காரியங்கள் அதிகம் நடக்கும் காலம். இது போன்ற விசேஷங்களுக்கு தங்கம் போடுவது நம் இந்திய வழக்கம்.
ஆனால் தங்கத்தின் விலையோ தாறுமாறாக எகிறிக் கொண்டு இருக்கிறதே எனக் கவலைப்பட வேண்டாம். நம் கவலை யாருக்கு புரிந்ததோ இல்லையோ, வியாபாரிகளுக்கு புரிந்து விட்டது.
இந்தியாவில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலம் பண்டிகை காலம். இந்த காலத்தில் கூட, இந்தியாவில் வியாபாரம் தலை எடுக்கவே இல்லை என்றால் இந்திய பொருளாதாரமே காலி தான்.
எஸ்பிஐ தலைவர்
இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் தலைவர் ரஜ்னேஷ் குமார் ஒரு கூட்டத்தில் "இந்தியாவின் பண்டிகை காலத்தில் மக்கள் தங்கள் பணத்தை செலவழிக்கத் தயாராக இருகிறார்களா..? என்பது தெரிந்து விடும். இது இந்திய பொருளாதாரத்துக்கு மிகவும் முக்கியமான காலம்" எனச் சொல்லி இருந்தார். இப்போது வியாபாரிகளும் இந்த பண்டிகை காலத்தை குறி வைத்து சில விஷயங்களை அதிரடியாகச் செய்யத் தொடங்கி இருக்கிறார்கள்.
தள்ளுபடி
ஏற்கனவே இந்த செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து, பல நகைக் கடை வியாபாரிகள் அன்றைய சந்தை விலைக்கு தங்கத்தை விற்றாலும் ஒரு கணிசமான தள்ளுபடி கொடுத்து தான் வியாபாரம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்களாம். ஏன் இந்த திடீர் தள்ளுபடி எனக் கேட்டால்..? "ஏற்கனவே மக்கள் எந்த பொருளையும் வாங்கத் தயங்குகிறார்கள். தங்கத்தை வாங்க வந்தாலும் விலை அதிகம் என வாங்காமல் திரும்பி விடுகிறார்கள். இந்த பிரச்னையை சமாளிக்கத் தான் தற்போது தள்ளுபடி விலையில் தங்கத்தை விற்றுக் கொண்டு இருக்கிறோம்" எனச் சொல்கிறார்கள்.
எதிரொலி
தங்கத்தை வாங்க தற்போது ஆள் இல்லாத நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலையும் ஒட்டு மொத்தமாக சரிந்து இருக்கிறது. கடந்த செப்டம்பர் 04, 2019 அன்று 22 கேரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை சுமார் 30,150-க்கு விற்கப்பட்டது. ஆனால் இன்று அதே 22 கேரட் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை சுமார் 29,350 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது. சுமாராக பவுனுக்கு 800 ரூபாய் சரிந்து இருக்கிறது. ஆனால் இந்த ஒரு வருடத்தில் மட்டும் எவ்வளவு விலை அதிகரித்து இருக்கிறது தெரியுமா..? சுமார் 30%
ஏற்றம் 1
கடந்த ஜனவரி 01, 2019-ல் 31,650 ரூபாய்க்கு விற்கத் தொடங்கிய 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை பிப்ரவரி 20, 2019 அன்று 35,130 என்கிற புதிய உச்சத்தைத் தொட்டது. பிப்ரவரி முதல் ஜூன் 20, 2019 வரை 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை இந்த 35,130 என்கிற உச்சத்தைக் கடக்கவே இல்லை. ஆக தங்கத்தின் விலை ஏற்றத்தில் இது தான் இந்த 2019-ம் வருடத்தின் முதல் பெரிய ஏற்றம்.
ஏற்றம் 2
பின், ஜூன் 21, 2019 அன்று தான் மீண்டும் தங்கத்தின் விலை ஏற்றம் காணத் தொடங்குகிறது. ஜூன் 21, 2019 அன்று 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 35,380 என்கிற உச்சம் தொடுகிறது. அதன் பின் தங்கத்தின் விலை (Gold Price) இன்று வரை நிதானமாக ஏற்றம் கண்டு இன்று செப்டம்பர் 04, 2019 வரை 41,070 என்கிற உச்ச விலையில் விற்கப்பட்டு வருகின்றன. ஆக 2019-ம் ஆண்டில் மட்டும் சுமாராக 29.7 % ஏற்றம் கண்டு இருக்கிறது.
காரணிகள்
உலக பொருளாதார மந்த நிலை, ரெசசன் பயம், வட்டி விகித பிரச்னைகள் என பல காரணிகள் இருந்தாலும் அடிப்படையாக தங்கத்தை வாங்கிப் பயன்படுத்த ஆள் இல்லை என்றால் விலை சரியத் தானே செய்யும். அது தான் இந்தியாவில் நடந்து கொண்டு இருக்கிறது. எனவே மக்களே கொஞ்சம் காத்திருந்து தங்கம் விலை குறையும் போது, நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தங்கத்தை வாங்கி விடவும். இல்லை என்றால் மீண்டும் உலக பொருளாதார காரணிகளைச் சொல்லி தங்கத்தின் விலை அதிகரிக்கத் தொடங்கிவிடப் போகிறது. ஜாக்கிரதை மக்களே..!