2019ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் சுமார் 31,898.63 கோடி ரூபாய் அளவிலான மோசடிகள் 18 பொதுத்துறை வங்கிகளில் கண்டறியப்பட்டு உள்ளதாகத் தகவல் அறியும் சட்டம் மூலம் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இதுவரை பொதுத்துறை வங்கிகள் எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் பணம் தான் பொதுத்துறை வங்கிகளின் முக்கிய ஆதாரமாக விளங்கும் நிலையில் தொடர்ந்து மோசடி, வராக்கடன் பிரச்சனை எனச் செய்திகள் வெளியாவதன் மூலம் மக்கள் தற்போது பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறியும் சட்டம்
சந்திரசேகர் காவுர் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி நாட்டு மக்களை அதிரவைக்கும் அளவிற்கு முக்கியமான ஒரு பதிலை வெளியிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் பொதுத் துறை வங்கிகளில் பதிவான மோசடிகள் குறித்து அவரது கேள்விக்கு ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது.
31,898.63 கோடி ரூபாய் மோசடி
2019ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும் இந்தியாவின் 18 பொதுத்துறை வங்கிகளில் ஏற்கனவே இருக்கும் வராக்கடன், நிதி மோசடிகளைத் தாண்டி புதிதாகப் பதிவு செய்யப்பட்ட 2,480 வழக்குகளின் மூலம் 31,898.63 கோடி ரூபாய் அளவிலான மோசடிகள் புதிதாகப் பதிவாகியுள்ளது. இதில் அதிகப்படியான மோசடிகளைச் சந்தித்தது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா
3 மாதத்தில் பதிவு செய்யப்பட்ட 2,480 வழக்குகளில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மட்டும் சுமார் 1,197 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்குகளின் மூலம் 12,012.77 கோடி ரூபாய் அளவிலான மோசடிகள் பதிவாகியுள்ளது.
இதை தொடர்ந்து அலகாபாத் வங்கி 381 வழக்குகள் மூலம் 2,855.46 கோடி ரூபாயும், பஞ்சாப் நேஷனல் வங்கி 99 மோசடிகள் மூலம் 2,526.55 கோடி ரூபாய் மதிப்புள்ள மோசடிகள் பதிவாகியுள்ளது. இப்படி நாட்டின் 18 பொதுத்துறை வங்கிகளும் மோசடிகளால் பாதிக்கப்பட்டு வருகிறது.
ரிசர்வ் வங்கி
மேலும் ரிசர்வ் வங்கி ஒவ்வொரு வங்கியும் இந்த மோசடிகளால் எவ்வளவு நஷ்டத்தை சந்தித்துள்ளது, ஒவ்வொரு மோசடியும் எப்படிப்பட்ட மோசடிகள் என்ற விளக்கத்தை அளிக்கவில்லை.
பஞ்சாப் நேஷனல் வங்கியைத் தொடர்ந்து பாங்க் ஆஃப் பரோடா 75 மோசடி வழக்குகள் மூலம் 2,297.05 கோடி ரூபாயும், ஓரியன்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் 45 வழக்குகள் மூலம் 2,133 கோடி ரூபாய் என அனைத்து பொதுத்துறை வங்கிகளும் கடுமையான மோசடிகளைச் சந்தித்து மக்கள் பணத்தின் பாதுகாப்பு தன்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.