தாறுமாறாக ஏறிக் கொண்டிருந்த தங்கத்தின் விலையானது, தற்போது சற்றே ஆறுதல் கொடுக்கும் வகையில் சற்று இறங்கிக் கொண்டுள்ளது. அதிலும் கடந்த வாரம் சென்ற புதிய உச்சத்திலிருந்து ரூ.1700 குறைந்துள்ளது.
இந்திய கமாடிட்டி சந்தையில் வர்த்தகமாகும் 10 கிராம் தங்கத்தின் விலையானது, கடந்த வாரம் புதிய உச்சமான 39,885 ரூபாயை தொட்டது. இதே இன்று (செப்டம்பர் 11, 2019,) 38,180 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
இதே போல வெள்ளியின் விலையானது அதன் அண்மையிலான உச்சத்திலிருந்து 3,800 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த வாரம் அதன் 51,489 ரூபாயாக வர்த்தகமாகி வந்த வெள்ளியின் விலையானது, தற்போது 47,800 ரூபாயாக வர்த்தகமாகியும் வருகிறது. இது முன்னதாக 47,669 ரூபாய் வரை (இன்றைய குறைந்தபட்ச விலை) வரை சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஆய்வாளர்கள் கூறிய கருத்தில் மீண்டும் தங்கம் விலை உயர வாய்ப்பிருக்கிறது என்றும், ஏனெனில் மத்திய வங்கிகள் தங்களது வங்கிகளில் வட்டி குறைப்பை மேற்கொள்ளலாம் என்றும், இது தங்கத்தின் விலைக்கு சாதகமாக அமையும் என்றும் கூறியுள்ளனர்.
ஏனெனில் குறைந்த வட்டி விகிதங்களால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதிலும் நீண்ட கால நோக்கில் தங்கத்தின் விலை அதிகரிக்கவே வாய்ப்புள்ளது என்றும் கூறுகின்றனர்.
அதிலும் அவுன்ஸூக்கு 2000 டாலர் வரை கூட செல்ல வாய்ப்புள்ளது என்றும் பீதியைக் கிளப்பியுள்ளனர். இது இன்றைய நாளில் தற்போது 1501.25 டாலராக வர்த்தகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த விலை அதிகரிப்பானது சர்வதேச அளவில் நிகழ்ந்து வரும் மந்த நிலையால் ஏற்றம் கண்டது என்றும், அதிலும் ஐரோப்பிய மத்திய வங்கிகள் மற்றும் அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி உள்பட பல மைய வங்கிகள், தங்களது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வட்டி குறைப்பை மேற்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எப்படி எனினும் இந்தியாவைப் பொறுத்தவரை வரப் போகும் மாதங்களில் பண்டிகை கால சீசன் என்பதால், தங்க ஆபரணத்திற்கான தேவை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, 29,072 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆபரண தங்கத்தின் விலையானது சுமார் 1000 ரூபாய் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.