டெல்லி: இந்தியப் பொருளாதாரத்தை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். சொன்னவைகளில் பல நடவடிக்கைகளை உடனடியாக எடுத்தும் இருக்கிறார்கள். அரசு எடுப்பதாகச் சொன்ன நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ஜிஎஸ்டி வரி விகிதங்களைக் குறைப்பதாகச் சொன்னது மிகவும் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
ஆக நாளை நடைபெற இருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சரித்திரப் புகழ் பெற்றதாக இருக்கும் என சாதாரண மக்கள் தொடங்கி, பெரிய வியாபாரிகள் வரை அனைவரும் வாயைப் பிளந்து காத்துக் கொண்டு இருக்கிறார்கள். மத்திய நிதி அமைச்சர் தலைமையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் டெரிட்டரி சார்பாக பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்த 37-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நாளை கோவாவில் நடை பெற இருக்கிறது.
ஒரு வேளை வியாபாரிகள் சொல்வது போல ஜிஎஸ்டி வரி விகிதங்கள் குறைத்து விட்டு, பின் அரசுக்கு போதுமான வரி கிடைக்கவில்லை என்றால், மாநில அரசுகளுக்கு கொடுக்க வேண்டிய பங்கும் குறையும் என்கிற சிக்கலையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. வரி அதிகாரிகள் தரப்பிலோ, ஏற்கனவே அரசுக்கு போதுமான நிதி இல்லாத நெருக்கடியான காலத்தில் மேலும் ஜிஎஸ்டி வரியை பிஸ்கட் முதல் வாகனங்கள் வரை குறைப்பது சரியாக இருக்காது என அமைச்சர்களுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டு இருக்கிறார்களாம்.
மிக முக்கியமாக நாளைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், இந்தியாவின் சராசரி யூனியன் பிரதேசமாக மாறிய ஜம்மூ காஷ்மீர் பகுதியில் ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்துவது எப்படி என்பதைப் பற்றியும் விவாதிக்க இருக்கிறார்களாம். அதோடு தங்க நகை மற்றும் விலை உயர்ந்த ஆபரணங்கள், கற்கள் போன்றவைகளுக்கும் இ வே பில் கொண்டு வருவது பற்றியும் விவாதிக்க இருக்கிறார்களாம்.
நாள் ஒன்றுக்கு, ஒரு அறைக்கு 12,000 ரூபாய்க்கு மேல் அறை வாடகை வசூலித்தால் மட்டும் 18 % ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வர ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரை செய்து இருக்கிறார்களாம். தற்போது 7,500 ரூபாய்க்கு மேல் செலுத்தும் அறை வாடகைகளுக்கு 18 % ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வருகிறதாம்.