யெஸ் பேங்க் நிறுவனத்தின் பங்குகளில் ஒரு கணிசமான அளவை, புரொமோட்டர்கள் குழும நிறுவனங்கள் மற்றும் முன்னாள் யெஸ் பேங்கின் தலைவர் ரானா கபூர் ஆகியோர்கள் வைத்திருக்கிறார்கள். புரொமோட்டர் குழும நிறுவனங்களாக மார்கன் க்ரெடிட் பிரைவேட் லிமிடெட், யெஸ் கேப்பிட்டல் இந்தியா போன்ற நிறுவனங்கள் வைத்து இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் போக நம் ரானா கபூர் தன் பெயரிலேயே கொஞ்சம் பங்குகளை வைத்திருக்கிறார். இரண்டு நிறுவனங்கள் மற்றும் ரானா கபூர் இணைந்து யெஸ் பேங்கின் 100 % பங்குகளில், 9.64 சதவிகித பங்குகளை வைத்திருந்தார்கள்.
இந்த 9.64 சதவிகித பங்கில் 2.75 சதவிகித பங்குகளை கடந்த செப்டம்பர் 18 முதல் 20 தேதிகளுக்குள் திறந்த வெளிப் பங்குச் சந்தைகளில் விற்று வெளியேறி இருக்கிறார்கள். தற்போது இந்த புரொமோட்டர் குழும நிறுவனங்கள் மற்றும் ரானா கபூரிடம் மொத்தமாகவே 6.89 சதவிகித பங்குகள் தான் கையில் இருக்கிறதாம்.
புரொமோட்டர்கள் பங்குகளை விற்ற செய்தியை, மார்கன் க்ரெடிட்ஸ் நிறுவனம் நெறிமுறையாளர்களிடம் முறையாக கடிதம் மூலம் தெரிவித்து இருக்கிறார்களாம். எனவே கிட்ட தட்ட இந்த செய்தியை அவர்கள் உறுதி செய்ததாகவே எடுத்துக் கொள்ளலாம். இதில் கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால்... யெஸ் பேங்க் நிறுவனத்தை விட்டு ரானா கபூர் உட்பட மார்கன் க்ரெடிட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் யெஸ் கேப்பிட்டல் ஆகிய நிறுவனங்கள் வெளியேற இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
அதோடு விஜய் சேகர் சர்மா தலைமை தாங்கி நடத்தி வரும், இந்தியாவின் முன்னணி பேமெண்ட் நிறுவனமான பேடிஎம், யெஸ் பேங்கின் பங்குகளை வாங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த செப்டம்பர் 20, 2019 வெள்ளிக்கிழமை அன்று மும்பை பங்குச் சந்தையிடம் "யெஸ் பேங்க் நிறுவனத்தின் கடன்களை அடைக்கத் தான் பங்குகளை விற்றதாகச் சொல்லி இருக்கிறார்கள் யெஸ் பேங்க் நிறுவன தரப்பினர்கள்.
யெஸ் பேங்க் வங்கியின் இயக்குநர்கள் குழுவோ, யெஸ் பேங்க் நிறுவனத்தின் நிதி நிலை நன்றாகவும் நிலையாகவும் இருக்கிறது. யெஸ் பேங்கின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கிறது. யெஸ் பேங்கின் வளர்ச்சித் திட்டங்கள், திட்டமிட்ட பாதையில் உறுதியாக பயணித்துக் கொண்டு இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.