கடந்த இரண்டு வர்த்தக நாளில் மட்டும் சென்செக்ஸ் சந்தை சுமாராக 3000 புள்ளிகள் ஏற்றம் கண்டது. அதைத் தொடர்ந்து நேற்றும் 39,000 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம் நிறைவு அடைந்தது. ஆக எப்படியும் 39,000 புள்ளிகளை கொஞ்சம் சென்செக்ஸ் வலுவாக பிடித்து வைத்திருக்கிறது போல என நினைப்பதற்குள் இன்றும் மீண்டும் சென்செக்ஸ் தன் 39,000 லெவல்களில் இருந்து உடைபட்டு 500 புள்ளிகள் சரிந்து நிறைவு அடைந்து இருக்கிறது.
அதோடு நேற்றைய குளோசிங் பெல் செய்தியிலேயே 38,800 புள்ளிகள் சப்போர்ட் உடைந்தால், 38,500 லெவல்களை சப்போர்ட் எடுத்து வர்த்தகம் ஆகும் எனச் சொல்லி இருந்தோம். சொன்னது போலவே, சென்செக்ஸ் 38,800 உடைபட்டு, 38,500 புள்ளிகளை சப்போர்ட் எடுத்து வர்த்தகம் நிறைவடைந்தது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பையே சிறையில் அடைக்க, அதிபரை விசாரிக்கும் அளவுக்கு அமெரிக்க அரசியலில் ஒரு நிலையற்ற தன்மை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் உலக சந்தைகள் அனைத்தும் இந்த செய்தியால் கொஞ்சம் பதட்டத்துடன் காணப்படுகிறது. அதோடு இந்தியாவில் பஞ்சாப் மற்றும் மாகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நடந்திருக்கும் தில்லு முல்லுகள் எல்லாம் வெளிச்சத்துக்கு தெரிய வந்து மீண்டும் இந்திய வங்கித் துறைகள் மீது முதலீட்டாளர்களுக்கு சந்தேகம் எழுந்து இருக்கிறது. இந்த இரண்டு விஷயங்களும் தற்போது இந்தியய சந்தை சரிவுக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது.
ஒருவேளை சந்தை நாளை ஏற்றம் காணத் தொடங்கினால் 38,800 முதல் மற்றும் வலுவான ரெசிஸ்டென்ஸாகத் இருக்கும். அதை உடைத்துக் கொண்டு மேலே வந்தால் மிக வலுவான 39,000 ரெசிஸ்டென்ஸ் சென்செக்ஸின் வேகத்தை பெரிய அளவில் கட்டுப்படுத்தும். ஒருவேளை சந்தை இறக்கம் காணத் தொடங்கினால் 38,500 முதல் சப்போர்ட்டாக வைத்துக் கொள்ளலாம். அதற்குப் பின் 38,000 tஹான் வலுவான சப்போர்ட் புள்ளிகளாக கண்ணில் படுகிறது.
நேற்று மாலை சென்செக்ஸ் 39,097 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 39,087 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 38,593 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 503 புள்ளிகள் இறக்கம் கண்டு இருக்கிறது. அதே போல் நிஃப்டி 50 இண்டெக்ஸ் நேற்று மாலை 11,588 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 11,564 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,440 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 148 புள்ளிகள் இறக்கம் கண்டு இருக்கிறது.
இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 06 பங்குகள் ஏற்றத்திலும், 24 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 13 பங்குகள் ஏற்றத்திலும், 37 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,645 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 759 பங்குகள் ஏற்றத்திலும், 1,758 பங்குகள் இறக்கத்திலும், 128 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,645 பங்குகளில் 50 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 115 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.
இன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில் பெரும்பாலான துறை சார் இண்டெக்ஸ்கள் இறக்கத்தில் வர்த்தகமாயின. ஆட்டோ, மெட்டல், வங்கி, மீடியா, பொதுத் துறை வங்கிகள் போன்ற துறை சார் இண்டெக்ஸ்கள் அதிக இறக்கத்தில் வர்த்தகமாயின. ஐடி, எனர்ஜி போன்ற துறை சார் இண்டெக்ஸ் மட்டுமே மட்டுமே ஏற்றத்தில் வர்த்தகமாயின. எஸ்பிஐ, பாரத் பெட்ரோலியம், மாருதி சுசூகி, ஹெச் டி எஃப் சி, ஆக்ஸிஸ் பேங்க் போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின. பவர் கிரிட், டிசிஸ், என் டி பி சி, இந்தியன் ஆய்டில், பாரத் பெட்ரோலியம் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின.
எஸ்பிஐ, டாடா மோட்டார்ஸ், மாருதி சுசூகி, ஈஷர் மோட்டார்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா போன்ற பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.01-க்கு வர்த்தகமாகி வருகிறது, ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 61.22 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.