காஸியாபாத்: பொதுவாக வீட்டில் பணம் நகை வைத்திருந்தால் தான் பிரச்சனை என்று மக்கள், வங்கியை நாடுகின்றனர். ஆனால் இங்கு வேலியே பயிரை மேய்ந்துள்ளது தான் கொடுமை.
ஆனால் இங்கு கதையே வேறு, ஒரு வங்கி மேலாளர் உள்பட, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, போலி ஏடிஎம் கார்டு மூலம் பணத்தை வங்கி கணக்கிலிருந்து அபேஷ் செய்துள்ளனர்.
இதில் என்ன கொடுமை என்னவெனில் 1,000 ரூபாயோ அல்லது 10,000 ரூபாயோ அல்ல, 1.13 கோடி ரூபாய். இதற்கு மேலாளரும் உடந்தை என்பது தான் இங்கு கொடுமையே. வேலியே பயிரை மேயலாமா?
வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.13 கோடி அபேஷ்
உத்தர பிரதேச மாநிலம், காஸியாபாத்தை சேர்ந்தவர் தாயீப் கான். விவசாயியான இவர் யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியின், தஸ்னா கிளையில் கணக்கு வைத்துள்ளார். இவர் தனது விவசாயம் நிலத்தை விற்றதன் மூலம் கிடைத்த 1 கோடி ரூபாய் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்திருந்திருக்கிறார். இதை மோப்பம் பிடித்த கறுப்பு ஆடுகள் எப்படியே இதை அபேஷ் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த நிலையிலேயே இவரது வங்கிக் கணக்கில் உள்ள 1.13 கோடி ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கடந்த ஜூலை மாதத்திலேயே காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மொபைல் எண் செயல்பாட்டில் இல்லை
இந்த நிலையிலேயே வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடியதாக மேற்கு டெல்லியில் உள்ள யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் திலக் நகர் கிளை மேலாளர் உள்பட 3 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இது குறித்து போலீசார் கூறுகையில், தாயீப் கான் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண் கடந்த இரண்டு வருடமாக சேவையில் இல்லை. இது திருடர்களுக்கு சாதமாக போய்விட்டது. இதனை தங்களுக்கு சாதகமாக சுராஜ் மற்றும் சுனில் திவாரி என்ற இருவர் பயன்படுத்திக் கொண்டனர். இதனால் திருட்டு நடந்தது வாடிக்கையாளருக்கு உடனடியாக தெரியாமல் போனதோடு, திருடர்களுக்கு இது சாதமாகவும் போய்விட்டது.
போலி ஏடிஎம் கார்டு
அதிலும் இந்த கயவர்கள் செயல்பாட்டில் இல்லாத தொலைபேசி எண்னை மீண்டும் செயல்படுத்தியுள்ளனர். மேலும் வங்கி மேலாளரின் உதவியுடன், போலி ஏ.டி.எம் கார்டுகள் தயாரித்து அதன் மூலம் பணத்தையும் கையாடல் செய்துள்ளனர். இதில் வங்கி ஊழியர்களுக்கும் தொடர்பு இருந்துள்ளது. பணத்தை வங்கிக் கணக்கில் இருந்து சூறையாடப்பட்ட பின்பு, அவர்கள் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டுள்ளனர். இது தொடர்பாக டெல்லியில் உள்ள யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் திலக் நகர் கிளை மேலாளர் பிரதிபா ஜெயின் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். பணம் திருடப்பட்டதாக கூறும் அந்த சமயத்தில், இவர் தஸ்னா கிளை மேலாளராக இருந்தவர் என்றும் கூறப்படுகிறது. ஆக இந்த பெண்ணிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
மக்கள் தங்கள் வங்கிக் கணக்கில் கொடுக்கப்பட்டுள்ள மொபைல் எண், தங்களின் முழுமையான முகவரி, நாம் ஒவ்வொரு முறையும் பண பரிவர்த்தை செய்யும் போது, நமக்கு மெசேஜ் வருகிறதா? நம் வங்கிக் கணக்கில் இருந்து நமக்கு சரியான தகவல்கள் அனைத்தும் வருகிறதா? என்றும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் முன்னதாக இதே போல் டெல்லியில் ஒரு பெண் தன் வாடகை வீட்டு முகவரியை வங்கியில் கொடுத்து விட்டு, பின்னர் ஏடிஎம் கார்டு வரவில்லை என தொடர்ந்து வங்கியை நாடியுள்ளார். https://tamil.goodreturns.in/news/2019/06/09/delhi-women-forges-signature-and-withdraws-rs-3-6-lakhs-014844.html அவரின் வங்கிக் கணக்கில் கொடுத்துள்ள மொபைல் எண்ணும் செயல்பாட்டில் இல்லாததால், ஏடிஎம் கார்டு வேறொருவர் கைக்கு சென்று, அதன் மூலம் அவரது வங்கிக் கணக்கில் இருந்தும் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆக மக்கள் உஷாராகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.
ஏனெனில் திருடர்கள் எந்த நேரத்தில் எந்த கோணத்தில் எப்படி வேண்டுமானலும் வரலாம்.