உலக பொருளாதாரம் மந்தமாக இருந்தால் என்ன? வேலையிழப்பு இருந்தால் என்ன நாங்கள் வாங்குவதை வாங்கிக் கொண்டே தான் இருப்போம். அதிலும் கடன் வாங்கியாவது வாங்கிக் கொண்டு தான் இருப்போம் என்பதற்கு ஏற்ப, ஹெச்.டி.எஃப்.சி நிர்வாக இயக்குனர் ஆதித்யா பூரியின் கருத்தின் மூலம் அறிய முடிகிறது.
சரி அப்படி என்ன கருத்தை சொன்னார் என்று கேட்கிறீர்களா? உலக பூராவும் பொருளாதார மந்தம் தலைவிரித்தாடி வரும் இந்த நிலையில், இந்தியாவிலும் அதன் எதிரொலி காணப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. இதனால் தொடர்ந்து பல துறைகள் மந்த நிலையில் இருந்தும் வருகிறது. இதனால் தேவையும் குறைந்து வருகிறது என்றும் கூறப்பட்டு வருகிறது.
ஆனால் ஹெச்,டி.எஃப்.சி நிறுவனம் பல வர்த்தக நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ள நிலையில், பண்டிகை காலத்தில் தேவையில் மந்தம் என்பது நிச்சயம் இல்லை.
மாறாக விற்பனை தான் அதிகரித்துக் கொண்டே போய்க் கொண்டிருக்கிறது என்றும், இதற்கு சிறந்த உதாரணம், இந்த திருவிழா பருவத்தில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட முதல் நாளே, அதிலும் முதல் நான்கு மணி நேரத்திலேயே, ஸ்டாக் இல்லை எனும் அளவுக்கு ஐபோன் விற்பனை களை கட்டியுள்ளது என்றும் கூறியவர், இதுதவிர இதுபோன்ற 1000க்கும் மேம்பட்ட வணிகர்களுடன் நாங்கள் இணைந்துள்ளோம் என்றும் கூறியுள்ளார்.
இந்த பண்டிகை காலத்திற்கு முன்னதாக 1000 கடன் மேளாக்கள், இது தவிர 3000 கிளை மேளாக்கள் மற்றும் 4,000 சம்பள மேளா என பல மேளாக்களை நாங்கள் நடத்தியுள்ளோம். இதனால் இந்த தீபாவளி சீசனில் எங்களுக்கு நிறைய பொறுப்புகள், வாடிக்கையாளர்கள் தளம், இதன் மூலம் எங்களது கிளைகளும் வளர்ந்து வரும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் ஆதித்யா கூறியுள்ளார்.
இது தவிர இந்திய நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், இதனை நிறுவனங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த விகிதங்களால் நிறுவனங்கள் மேன்மை அடையும் என்றும், இதன் மூலம் நிறுவனகள் தங்களது முதலீடுகளை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது, இது நிறுவனங்களுக்கு சிறந்த பல வாய்ப்புகளை அளிக்கும் என்றும், இதனால் நிறுவனங்களும் சரி, வாடிக்கையாளர்களும் சரி பழைய கடன்களை எளிதில் அடைக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் ஆட்டோமொபைல் துறையை பற்றி பேசிய ஆதித்யா பூரி, ஆட்டோமொபைல் துறை பொறுத்தவரை, இது நன்றாக விற்பனை களைகட்டும் நேரம் இது, ஆனால் இதுவரை அப்படி ஏதும் இருப்பதாக தெரியவில்லை. மேலும் ஆட்டோமொபைல் டீலர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் கடன் விகிதங்களை ஒப்பிடுகையில், வாராக்கடன் அளவே அதிகம் உள்ளது. ஆட்டோமொபைல் துறையில் நீடித்து வரும் இந்த குழப்பம் இன்று நேற்றல்ல, கடந்த சில வருடங்களாக இருந்து வருகிறது என்றும் கூறியுள்ளார். மேலும் நாங்கள் நகரங்கள் அல்லாத அரை நகர பகுதிகளில் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளோம் என்றும் ஆதித்யா கூறியுள்ளார்.