மும்பை: பி.எம்.சி வங்கி என்று அழைக்கப்படும் இந்த கூட்டுறவு வங்கியில் நிகழ்ந்து வரும் அடுத்தடுத்த பிரச்சனைகளால், இவ்வங்கியின் மீது இந்திய ரிசர்வ் வங்கி தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், முன்னதாக வாடிக்கையாளர்கள் தினசரி ரூ.1000 மட்டுமே எடுக்க முடியும் என்று கூறியிருந்தது.
இது பின்னர் 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது, இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் தங்களது சொந்த பணத்தை கூட எங்களால் எடுக்க முடியவில்லை என்றும் தொடர்ந்து, வங்கியை நாடவே, தற்போது அதை 25,000 ரூபாயாக உயர்த்தியுள்ளது ஆர்.பி.ஐ.
இது பி.எம்.சி வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய தளர்வைக் கொடுத்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
பி.எம்.சி வங்கியை பொறுத்த வரையில் சிறிய வைப்புத் தொகையாளர்கள் அதன் மொத்த வைப்புத் தொகையாளர்களில் மூன்றில் இருபங்கு உள்ளனர். இந்த நிலையிலேயே ரிசர்வ் வங்கி நடவடிக்கை குறித்த தகவலை அடுத்து பி.எம்.சி. வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை எடுக்கவும், அடகு வைத்திருந்த நகைகளை திருப்பவும், லாக்கர்களில் வைத்திருந்த ஆவணங்களை எடுக்கவும் வங்கி கிளைகளுக்கு படையெடுத்து வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தங்களது பணத்தில் தினசரி வெறும் 10,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்ற நிலையில், மக்கள் மிக ஆவேசம் அடைந்ததையடுத்து, இப்படியொரு தளர்வை ஆர்.பி.ஐ அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்த வங்கியின் பி.எம்.சி வங்கி கடந்த 7 ஆண்டுகளாகவே ஹெச்.டி.ஐ.எல் என்ற தனியார் நிறுவனத்துக்கு கடன் கொடுத்து வந்துள்ளது. இதில் வேடிக்கை என்னவெனில் இந்த கடனில் வாராக்கடனாக இருந்த கடனை ஒவ்வொரு ஆண்டும் ஆண்டறிக்கையில் இருந்து பி.எம்.சி வங்கி, ரிசர்வ் வங்கியிடம் மறைத்துள்ளது.
ஏனெனில் வாராக்கடன் பட்டியலில் வந்துவிட்டால், ஹெச்.டி.ஐ.எல் நிறுவனத்துக்கும் மேலும் கடன் அளிக்க முடியாது என்பதாலேயே இத்தகைய மோசடிகள் பி.எம்.சி வங்கி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு மொத்தமாக ஆர்.பி.ஐயிடம் இருந்து மறைக்கப்பட்ட மொத்த வாராக்கடன் 4,355 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த நிறுவனம் திவால் அறிக்கை கொடுத்த பின்னரும் கூட கடன் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.