டெல்லி: மத்திய அரசின் மிகப் பெரிய வருவாய் ஆதாரங்களில் ஒன்றாக இருக்கும் சரக்கு மற்றும் சேவை வரி , கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை விட குறைவாகவே வசூல் ஆகிக் கொண்டு இருக்கிறது.
இந்தியாவின் மறைமுக வரியான ஜிஎஸ்டியின் சர்வ அதிகாரம் பொருந்திய அமைப்பாக இருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில், கடந்த அக்டோபர் 10, 2019 வியாழக்கிழமை அன்று 12 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்து இருக்கிறார்கள்.
ஏன் இந்த திடீர் 12 பேர் கொண்ட குழு..? இந்த 12 பேர் கொண்ட குழுவுக்கும், நம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய சர்ச்சைப் பேச்சுக்கும் என்ன தொடர்பு..? வாருங்கள் அந்த 12 பேர் குழுவில் இருந்தே தொடங்குவோம்.
12 பேர் குழுவின் வேலை
இந்த 12 பேரும் மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகளாம். இவர்கள் ஜிஎஸ்டி வரி வசூலை அதிகரிப்பது, ஜிஎஸ்டி முறைகேடுகள் நடக்காமல் தவிர்ப்பது, அதிக வியாபாரிகளை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவது, ஏற்கனவே பதிவு செய்திருப்பவர்களை முறையாக ஜிஎஸ்டி செலுத்த வைப்பது போன்றவைகளை கலந்து ஆலோசிக்க இருப்பதாகச் சொன்னார்கள். இந்த குழு ஜிஎஸ்டி வரி விகிதங்களை உயர்த்துவதைத் தவிர மற்ற வழிகளை எல்லாம் ஆலோசிப்பார்களாம்.
கூட்டம்
மேலே சொன்ன அந்த 12 மத்திய அரசு மற்றும் மாநில அரசு அதிகாரிகள் நேற்று (அக்டோபர் 11, 2019, வெள்ளிக்கிழமை) கலந்து ஆலோசனை நடத்தி இருக்கிறார்களாம். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள், சரக்கு மற்றும் சேவை வரியில் தங்களை பதிவு செய்து கொண்ட வியாபாரிகளை முறையாக ஜிஎஸ்டி படிவங்களைத் தாக்கல் செய்ய வைக்கும் வழிகள் குறித்து ஆலோசித்து இருக்கிறார்களாம். அதோடு சரக்கு மற்றும் சேவை வரி சிஸ்டத்தை இன்னும் மேம்படுத்துவது பற்றியும் பேசி இருக்கிறார்களாம்.
ஏன் திடீர் கவனம்
திடீரென ஏன் அரசு அதிகாரிகள், குறிப்பாக சரக்கு மற்றும் சேவை வரியை அதிகரிக்க, இத்தனை அவசரமாக கலந்து ஆலோசித்துக் கொண்டு இருக்கிறார்கள்..? என்கிற கேள்விக்கு அரசு கஜானா தான் விடையாக வந்து நிற்கிறது. தொடர்ந்து நேரடி வரி வருவாய் முதல் சரக்கு மற்றும் சேவை வரிகள் வரை அனைத்திலும் மந்தமாகவே இருக்கிறது. அதிலும் ஜிஎஸ்டி சொல்லவே வேண்டாம். பல மாதங்கள் இலக்குக்கு கீழே தான் வசூல் ஆகிக் கொண்டு இருக்கிறது.
கார்ப்பரேட் வரி குறைப்பு
இந்த சிக்கல்களுக்கு மத்தியில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த செப்டம்பர் 20, 2019 வெள்ளிக்கிழமை அன்று கார்பரேட் நிறுவனங்களுக்கான அதிகபட்ச வரியே 25.17 சதவிகிதமாக குறைத்ததால், அரசு கஜனாவுக்கு வர வேண்டிய 1.4 லட்சம் கோடி ரூபாய் நஷ்டமானது என திரும்பும் பக்கம் எல்லாம் நஷ்டம் தான் தெரிகிறது. இத்தனை நஷ்டத்துக்கு மத்தியிலும் மத்திய அரசு, தான் சொன்ன படி மாநில அரசுகளுக்கான நஷ்ட ஈட்டுப் பங்கைக் கொடுக்க வேண்டி இருப்பது என அழுத்தம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
வரி வருவாய்
ஆகையால் தான் ஜிஎஸ்டி வரி வருவாயை பெருக்க 12 பேர் கொண்ட குழுவை அமைத்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். நல்லது தான். ஜிஎஸ்டி வரி வசூலை பெருக்க எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முன், ஜிஎஸ்டி சட்டங்களை சரியாகவும், தெளிவாகவும், தவறுகள் இல்லாமலும் எழுதி இருக்க வேண்டாமா..? ஜிஎஸ்டி சட்டங்களிலேயே தவறுகள் இருந்தால் எப்படி வரி வசூல் ஆகும்..? ஜிஎஸ்டி சட்டத்தில் தவறா..? யார் சொன்னார்கள் எனக் கேட்கிறீர்களா..? நம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனே கிட்ட தட்ட ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார்.
நிதி அமைச்சர்
சமீபத்தில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், புனே நகரத்தில் வியாபாரிகள் மற்றும் ஆடிட்டர்களைச் (CA) சந்தித்து பேசினார். அப்போது "நாம் இன்னனும், வெறுமனே சரக்கு மற்றும் சேவை வரியை விமர்சித்துக் கொண்டு இருக்க முடியாது. ஜிஎஸ்டி சட்டங்கள் இந்திய பாராளுமன்ற அவைகளிலும், மாநில சட்டமன்ற அவைகளிலும் நிறைவேற்றிவிட்டார்கள். ஜிஎஸ்டி சட்டங்களில் சில தவறுகள் இருக்கலாம், அதனால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படலாம். அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆனால் அது தான் நம் நாட்டின் சட்டம்" எனச் சொல்லி இருக்கிறார்.
ஒப்புக் கொள்கிறாரா
இப்போது நிதி அமைச்சரின் வார்த்தைகளைக் கேட்டால், அவரே ஜிஎஸ்டி சட்டங்களில் தவறுகள் இருக்கின்றன என ஒப்பு கொள்வதாக இருக்கிறது. ஜிஎஸ்டி சட்டங்களில் தவறுகள் இருப்பதை நிர்மலா சீதாராமன் ஒப்புக் கொள்கிறார் என்றால், எதிர்கட்சியினர்கள் சொன்னது போல, ஜிஎஸ்டியை தீர ஆலோசித்து, தேவையான திருத்தங்களைக் கொண்டு வந்து, சட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை என்பதையும் ஏற்றுக் கொள்வது போலத் தானே பொருள் கொள்ள வேண்டி இருக்கிறது..?
என்ன சொல்கிறார்
சட்டத்தில் இருக்கும் தவறுக்காகவும், வியாபாரிகள் மற்றும் வெகு ஜன மக்கள் எதிர் கொள்ளும் சிக்கலுக்காகவும் மன்னிப்புக் கேட்பதை பாராட்டுகிறோம். ஆனால் இந்த ஜிஎஸ்டி சிக்கல்களை முறையாக சரி செய்யாமல், இது தான் நம் நாட்டின் சட்டம், என்ன செய்ய... என ஒரு மத்திய நிதி அமைச்சரே சொன்னால்... இந்திய நாட்டில் பிழைப்பவர்கள் என்ன செய்வார்கள்..? ஜிஎஸ்டி நெட்வொர்க் தொடங்கி, ஜிஎஸ்டி மூலம் வரும் வருவாயை பெற்றுக் கொள்வது வரை எல்லாமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தானே இருக்கிறது. ஆக, ஜிஎஸ்டி சார்ந்த சிக்கல்களைச் சரி செய்ய வேண்டிய பொறுப்பும், அக்கறையும் மத்திய அரசுக்கு தானே அதிகம் இருக்க வேண்டும்..?
ஜிஎஸ்டி தவறு 1
இந்திய பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கிறது என்று சொல்கிறார்கள். அதை இந்திய ஆட்டோமொபைல் துறையும், வங்கித் துறையும் தினமும் நிரூபித்துக் கொண்டு இருக்கிறது. பொருளாதாரம் சுழல பணம் அவசியம். ஆனால் வியாபாரிகளுக்கு கடந்த பல மாதங்களாக ஜிஎஸ்டியில் இருந்து வர வேண்டிய ரீ ஃபண்ட் தொகைகளே அரசு சரியான நேரத்தில் கொடுத்ததாகத் தெரியவில்லை. ஒரு சில்லறை வியாபாரிக்கு சரியான நேரத்தில் தன் பணத்தை திரும்பக் கொடுக்கவில்லை என்றால், எப்படி தன் வியாபாரத்தை நடத்துவார்..? எல்லா வியாபாரிகளும் அம்பானி, அதானி போல கைக் காசைப் போட்டு வியாபாரம் செய்ய முடியாதே..!
ஜிஎஸ்டி தவறு 2
ஜிஎஸ்டி படிவங்கள் மிக மிக சிக்கலாக இருக்கிறது என்பதை ஜிஎஸ்டி ஆண்டு இறுதி படிவங்கள் சமர்பிக்கப்ப படுவதிலேயே பார்க்க முடிந்தது. தொடர்ந்து பல முறை ஜிஎஸ்டிஆர் 9 ரக படிவங்களை முறையாக சமர்பிக்க நீட்டிப்புகள் கொடுத்தார்கள். அனால் ஜிஎஸ்டியில் பதிவு செய்து கொண்டவர்களில், சுமார் 50 சதவிகிதம் பேர் கூட இன்னும் தங்கள் ஜிஎஸ்டிஆர் 9 ரக படிவங்களை சமர்பிக்கவில்லை. இதனால் ஜிஎஸ்டி கவுன்சில் தன் 37-வது கூட்டத்தில் (செப்டம்பர் 23, 2019), 2 கோடி ரூபாய்க்குக் கீழ் ஜிஎஸ்டி டேர்ன் ஓவர் கொண்ட வியாபாரிகள், 2017 - 18 மற்றும் 2018 - 19 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கும் விருப்பப்பட்டால் மட்டும் ஜிஎஸ்டிஆர் 9 ரக படிவத்தை சமர்பிக்கலாம் என விதிகளைத் தளர்த்தினார்கள். ஆக படிவம் சிக்கலாக இருப்பதை, அரசே ஒப்புக் கொண்டது போல் இருக்கிறது.
என்ன பயன்
ஜிஎஸ்டி சட்டங்களை தேவைக்கு தகுந்தாற் போலவும், மேலே சொன்ன எதார்த்த சிக்கல்களை சரி செய்யவும், திருத்தங்களை மேற்கொள்ளாமல், நேரடியாக ஜிஎஸ்டி வரி வசூலை மட்டும் அதிகரிக்க 12 பேர் கொண்ட அதிகாரிகள் குழு அமைத்து யாருக்கு என்ன பயன்..? ஒரு குழந்தைக்கு பசி எடுக்கிறது என்றால், அது தன் தாயிடம் தான் சென்று சோறு கேட்கும். இங்கு ஜிஎஸ்டியால் சிரமப்படும் வியாபாரிகள், நிதி அமைச்சரிடம் தான் வேண்டு கோள் வைக்க முடியும். அதை தான் அவர்களும் செய்கிறார்கள்.
முடிவுகள்
எப்படியாவது இந்த நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று நினைக்கும் அமைச்சர்கள், கொஞ்சம் வியாபாரிகளின் ஜிஎஸ்டி சிரமங்களையும் புரிந்து கொண்டு அதை சரி செய்ய நடவடிக்கை எடுங்கள். தயவு செய்து "ஜிஎஸ்டியில் தவறு இருக்கலாம். அதனால் உங்களுக்கு சிரமம் கூட ஏற்படலாம், ஆனால் அது தான் நம் சட்டம்" எனச் சொல்லாதீர்கள். நீங்கள் வளர்க்க நினைக்கும் பொருளாதாரத்தின் ஒரு பெரும்பகுதி இந்த சில்லறை வியாபாரிகள் தான். இவர்களுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் நல்ல முடிவை எடுப்பீர்கள் என்று நம்புகிறோம். நம்புவோம்.