டெல்லி : பஞ்சாப் & மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி தனது கடன்தாரராக இருக்கும் ஹெச்.டி.ஐ.எல் நிறுவனத்துக்காக சுமார் ஆறு, ஏழு ஆண்டுகளாக ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறி செயல்பட்டது என கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிஎம்சி வங்கி, ரிசர்வ் வங்கி விதித்த கடும் கட்டுப்பாடுகளுக்குள் இருக்கும் நிலையில், பி.எம்.சி வங்கியில் ஹெச்டிஐஎல் நிறுவனத்துக்கு சுமார் 2,500 கோடி ரூபாய் கடன் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், வங்கியின் கடன் புத்தகத்தின்படி, மார்ச் 2019 வரை சுமார் 8,300 கோடி ரூபாய் கடன் கொடுக்கப்பட்டுள்ளது என்ற நிலையில், அதில் சுமார் 31 சதவிகிதம் பணத்தை ஹெச்டிஐஎல் நிறுவனமே பெற்றுள்ளது குறிப்பிடப்தக்கது.
தொடர் விசாரனை
பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் முறைகேடு நடத்திருப்பது அம்பலமாகியுள்ள நிலையில், அவ்வங்கியை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்துள்ளதோடு, இந்த ஊழலில் ஆதாயம் கண்ட ஹெச்டிஐஎல் கட்டுமான நிறுவனத்தின் தலைவரும் மேலாண்மை இயக்குநருமான ராகேஷ் வாத்வான் மற்றும் அவரது மகன் சாரங் வாத்வான் ஆகியோர் அக்டோபர் முதல் வாரத்தில் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இந்த ஊழல் குறித்தான வழக்கை, மும்பை காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவினரும் அமலாக்கத்துறையினரும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
ரூ.3,500 கோடி சொத்து அம்பலம்
இந்த தீவிர விசாரனையின் வெளிப்பாடாக ராகேஷ் வாத்வான் மற்றும் சாரங் வாத்வான் ஆகியோரின் கட்டுப்பாட்டில், வசாய் பால்கர் சரகத்தில் இருக்கும் 2,100 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது. இந்த நிலங்கள் வெவ்வேறு ஏழு கிராமங்களில் அமைந்துள்ளன எனவும், இந்த நிலங்களின் மொத்த மதிப்பு 3,500 கோடி ரூபாய் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தற்போது இந்த நிலங்கள் அமலாக்கத்துறையின் வசம் எடுக்கப்பட்டுள்ளன.
மோசடி செய்து வாங்கிய நிலமா?
மேலும் இந்த தீவிர விசாரனையில் இந்த நிலங்கள் வாத்வான் குடும்பம் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் வாங்கியிருப்பதாகவும், புதிய திட்டத்துக்காக வாங்கப்பட்ட இந்த நிலங்களில் இதுவரை ஏதும் கட்டுமானப் பணி இன்னும் தொடங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையிலேயே இந்த நிலங்கள் தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை ஆராய்ந்து வருகிறது. முறைகேடாகப் பெற்ற வங்கிக் கடன் தொகை மூலம் வாத்வான் குடும்பத்தினரின் பெயரிலோ, அல்லது ஹெச்டிஐஎல் நிறுவனத்தின் பெயரிலோ நிலங்கள் வாங்கப்பட்டுள்ளனவா என்றும் ஆராய்ந்து வரப்படுகிறது.
அடமானக் கடன்
தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள இந்த 2,100 ஏக்கர் நிலங்களில், சுமார் 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலங்களை பிஎம்சி வங்கியில் அடமானக் கடனாகவும், மற்றொரு 400 ஏக்கர் நிலங்களை பிற வங்கிகளில் அடமானமாக வைத்தும் கடன் வாங்கியுள்ளனர் இந்த ஹெஸ்டஐஎல் நிறுவனத்தினர். இந்த இரு நிலங்களுக்கும் சேர்த்து 800 கோடி ரூபாய் கடன் பெற்றிருக்கிறார்கள் என்றும், மீதமுள்ள 1,100 ஏக்கர் நிலங்களின் மீது கடன் வாங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே இதெல்லாம் பறிமுதல்
அமலாக்கத்துறை அடையாளம் கண்டிருக்கும் இந்த நிலங்கள் ஏற்கனவே மும்பை காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு கையகப்படுத்திய நிலத்திலிருந்து வேறுபட்டதாகும் என்பது குறிப்பிடத்தக்கது என்றும், இந்த நிலையில் கடந்த வாரம், வாத்வான்களுக்குச் சொந்தமான 15 விலை அதிகமான சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ஆடி, ரோல்ஸ் ராய்ஸ், லம்போர்கினி, ஹம்மெர், போர்ஷ், லேண்ட் ரோவர் முதலிய கார்ள் அடங்கும்.
விமானம் கூட உண்டு
இந்த பறிமுதல் செய்யப்பட்டதில் Dassault Falcon 200 and a Bombardier Challenger 300 என்ற இரு விமானங்களும் உள்ளடங்கும். டொயோட்டா பார்ச்சூனர், டொயோட்டா இன்னோவா, ஒரு வேக படகு, அனைத்து நிலப்பரப்பு பைக்குகள், இரண்டு கோல்ஃப் வண்டிகள் உள்ளிட்ட பல உயர் மதிப்புள்ள வாகங்னங்களை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தவிர பல பாலிவுட் பிரபலங்கள் மற்றும் அரசியல் வாதிகள் வாத்வான் இல்லத்திற்கு வருகை தந்து பங்கெடுத்துக் கொண்டிருக்கும் படங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.