டெல்லி : அரசுக்கு சொந்தமான பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா ஏற்கனவே கடன் பிரச்சனையால் தத்தளித்து வரும் நிலையில், அதன் விமானிகள் தற்போது சம்பள உயர்வும் இல்லை, பதவி உயர்வும் இல்லை என 120 பேர் அதிரடியாக தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனராம்.
ஒரு கடன் பிரச்சனையால் தத்தளித்து வரும் இந்த நிறுவனம், மறுபுறம் இது போன்ற பிரச்சனைகளாலும் அவ்வப்போது சிக்கித் தவித்து வருகிறது.
ஒரு புறம் தங்களது வேலை எப்போது பறிபோகுமோ? இந்த மாத சம்பளம் வருமா? வராதா? என அவ்வப்போது வங்கிக் கணக்கை செக் செய்து கொள்ளும் தனியார் ஊழியர்கள் ஒரு புறம். அதிலும் ஆட்டோமொபைல் துறையில் பல லட்சம் பேர் வேலையை இழந்துள்ள நிலையில், இப்படி தங்களுக்கு கிடைத்த வேலையை தூக்கி எரிந்திருக்கிறார்கள் ஏர் இந்தியா விமானிகள். சரி என்ன தான் காரணம்? எதற்காக இவர்கள் தங்களது வேலையை ராஜினாமா செய்துள்ளனர், வாருங்கள் பார்ப்போம்.
கடன் பிரச்சனையில் சிக்கியுள்ள ஏர் இந்தியா
கடன் பிரச்சனையில் சிக்கியுள்ள அரசுக்குச் சொந்தமான விமான நிறுவனமான ஏர் இந்தியா, கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. மேலும் அந்த நிறுவனத்துக்கு சுமார் ரூ.60,000 கோடிக்கு மேல் கடன் சுமை இருப்பதாகவும் கூறப்படும் நிலையில், இதனாலேயே இந்த நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க போவதாகவும், இதன் மூலம் நிதி திரட்ட போவதாகவும் கூறி வந்தது மத்திய அரசு.
பங்குகளை வாங்க தயக்கம்
கடன் பிரச்சனையில் சிக்கியுள்ள இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்க ஒருவரும் ஆர்வம் காட்டாத நிலையில், இதுவரை இழுபறி நிலையிலேயே இருந்து வருகிறது பங்கு விற்பனை. எனினும் மத்திய அரசு தனது விடமுயற்சியாக தொடர்ந்து, இதை ஒரு புறம் முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த நிறுவனம் நிறுவனத்தை நடத்த செயல்பாட்டு மூலதன முதலீடு வேண்டும் என்றும், மத்திய அரசின் கையை தொடர்ந்து எதிர்பார்த்து வருவதும் வாடிக்கையான ஒரு விஷயமே.
சம்பள உயர்வு, பதவி உயர்வு வேண்டும்
ஒரு புறம் பலர் தங்களது வேலையை இழந்து வரும் நிலையில், ஏர் இந்திய விமானிகள் தங்களது வேலையினை, போதிய சம்பள உயர்வு இல்லை எனவும், பதவி உயர்வு இல்லை எனவும், இது எங்களின் நீண்ட கால நோக்கமாக இருக்கிறது என்றும், இதனால் அவர்கள் எங்களுக்கு வலுவான உத்தரவாதத்தை வழங்க ஏர் இந்தியா தவறி விட்டது என்றும் கூறி விமானிகள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
எங்களுக்கும் கடன் இருக்கு
இது குறித்து பதவியை ராஜினாமா செய்த விமானிகள் தரப்பில், நாங்களும் கடன்களை திரும்ப செலுத்த வேண்டியிருக்கிறது. இதனால் நாங்கள் பெருத்த துன்பத்தை எதிர்கொள்கின்றோம். மேலும் எங்களது சம்பளங்களைக் கூட எங்களால் சரியான நேரத்தில் பெற முடியவில்லை என்றும், மேலும் குறைந்த சம்பளத்துடன் ஐந்து ஆண்டுகளாக விமானிகள், முதலில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுகிறார்கள், பின் அவர்கள் அனுபவத்தை பெறுவதால் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கும் என்றும் நம்பிக்கையில் இருந்தாதாகவும், ஆனால் அதற்கு பயனில்லை என்றும் ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
வேறு வேலை கிடைக்கும்
தற்போதைக்கு சந்தை நன்றாக இருப்பதால், அதிருப்தி அடைந்த விமானிகள் வேறு எந்த நிறுவனத்தில் ஆவது வேலை பெறுவார்கள் என்பது உறுதி. அதிலும் இப்போதைக்கு இண்டிகோ ஏர், கோ ஏர், விஸ்தாரா, ஏர் ஏசியா, ஏர் பஸ் ஏ-320 விமான நிறுவனங்கள் உள்ளன. ஆக அவர்கள் வேலை பார்த்துக் கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
விமான சேவை தடை படுமே
விமானிகள் இப்படி திடீரென தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததால், விமான சேவையில் பாதிப்பு இருக்குமா என்று கேட்டதற்கு, ஏர் இந்தியா நிறுவனத்தில் உபரி விமானிகள் இருக்கிறார்கள், அவர்களை வைத்து இதை சரி செய்துள்ளதாகவும், ஏர் இந்தியாவின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளாராம். இந்த நிலையில் தற்போது ஏர் இந்தியாவில் 2,000 விமானிகள் உள்ளதாகவும், இதில் 400 பேர் எக்ஸ்கியூட்டிவ்ஸ் என்றும் கூறப்படுகிறது.
கடன் பத்திரம் வெளியீடு
ஏர் இந்தியாவின் பங்குகளை தனியாருக்கு விற்க முடிவெடுத்திருந்த நிலையில் இந்த நிறுவனம், தற்போது அதை செயல்படுத்தாத பட்சத்தில், உத்தரவாதம் அளிக்கப்பட்ட கடன் பத்திர வெளியீடு மூலம் சுமார் 8,064 கோடி ரூபாயை திரட்ட உள்ளதாகவும், இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தினை வைத்து, கடனில் ஒரு பகுதியை கட்ட உபயோகப்படுத்தப்படும் என்றும், இந்த விமான நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மத்தியில் கூறப்படுகிறதாம். எது எப்படியோ நல்லதே நடந்தால் சரி தானே.